Cart is Empty
உலக அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடிப்புத் தொழில்களை முறையாக அங்கீகரித்து, ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆடு&மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களைப்போல, சமீப காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது மீன் வளர்ப்புத் தொழில். கிணறு, ஆறு, குளங்களை நம்பி விவசாயம் செய்து நொடித்துப்போன விவசாயிகள்கூட இப்போது, மீன் வளர்ப்பதிலும், வளர்த்த மீன்களை சந்தைக்குக் கொண்டுசென்று விற்பதிலும் அதிக ஆர்வம் காட்டி, பொருளாதாரத் தேவைகளில் பூர்த்தி அடைந்து, தாங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியான பாதைக்குத் திருப்பி இருக்கிறார்கள். மீன் வளர்ப்புத் தொழிலில், குறைந்த முதலீட்டில், குறைந்த வேலை ஆட்களின் மூலமாக அதிக லாபத்தை அடைந்த பல விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களை பசுமை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார் ஆர்.குமரேசன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். மீன் குஞ்சு வாங்குதல், செயற்கைக் குளம் வெட்டுதல், தீவனம் தயாரித்தல், பராமரித்தல், நோய்த் தடுப்பு, விற்பனை என அனைத்துக்கும் விளக்கங்களைத் தருவதோடு, மீன் குஞ்சுகள் வளர்க்கும் நிலையம் அமைத்தல், மீன் தீவனம் தயாரிக்கும் நிலையம் அமைத்தல், புதிய குளங்கள் வெட்டுதல், பண்ணைக் குட்டைகள் வெட்டிதல், மீன் பிடி உபகரணங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு மத்திய&மாநில அரசு அமைப்புகளில் மானிய உதவி, கடன் வசதி பெறும் வழிகளையும் அட்டவணையாகத் தருகிறது இந்த நூல்.