Cart is Empty
வைகோவைத் தமிழ்நாடு நன்கு அறியும். அவருடைய உணர்ச்சி மிக்க உரை அனைவரையும் கட்டிப்போட்டுவிடும். அவர் வேலூர் சிறையில் அரசியல் கைதியாக இருந்தபோது தன் கட்சித் தொண்டர்களுக்காக, சங்கொலி இதழில் கடிதங்கள் எழுதினார். அவை உலகப் புரட்சித் தலைவர்களின் வீரக் காவியத்தைப் பேசும் வரலாற்றுக் கடிதங்கள். அந்த வீர வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந்த நூல். வரலாற்றின் ஊடே தமிழகத்துக்கு, இன்றைய நிலைக்குத் தேவையான மெல்லிய ஆனால், அழுத்தமான வீரத்தை ஊட்டுகிறார். பிரெஞ்சுப் புரட்சி, செங்கொடிப் புரட்சி, தன் நாட்டுக்காக மட்டுமே நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த நாட்டிலுள்ள உரிமை இழந்தவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட சே குவாராவின் போராட்டங்கள், உணர்ச்சித் தீ மூட்டிய உமர் முக்தார், அயல் நாட்டுக்குப் போய் இந்திய சுதந்திரத்துக்காக மூச்சு விட்ட நேதாஜி, அடிமை விலங்கை ஒடித்த ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க சொகுசு வாழ்க்கை கிடைத்தும் அதை உதறித் தள்ளிய கரிபால்டி என்று பலருடைய வரலாற்று வீச்சுகளை வைகோ தனக்கே உரிய நடையில் உணர்ச்சிக் காவியமாகப் படைத்திருக்கிறார். இவை இன்றைய இளைஞர்களின் உள்ளத்தைப் பண்படுத்தும் ஏர் என்பது திண்ணம்!