Cart is Empty
தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட வேறு எந்தக் கோபுரமும் உயரமாக இருக்கக் கூடாது என்று ஓர் எழுதப்படாத சட்டமே இருந்தது. மனக்கவலை, குழப்பம் இருந்தால் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தால் கவலை எல்லாம் அகன்று, மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அதனால்தான் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றும், ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றும் சொல்லிவைத்துள்ளனர் நம் முன்னோர். அப்படிப்பட்ட பாரம்பர்யம் கொண்ட கோயில்களின் தனிச் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். மகரிஷிகள் வழிபட்ட திருத்தலங்கள், மகான்களின் திருவடிகள் பதிந்த ஆலயங்கள், மன்னர்கள் எழுப்பி பாதுகாத்த கோயில்கள் என ஒவ்வொரு கோயிலின் வரலாற்றையும், அந்தக் கோயிலில் எழுந்தருளிய இறைவனின் புராணத்தையும் விளக்குகிறார் நூலாசிரியர். இறைவனை வழிபடும் கோயில்களின் புனித வரலாறு நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் உள்ள பாரம்பர்யக் கோயில்களைப் பற்றி நாமும் நம் சந்ததியினரும் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும். ஓர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தைப் பெற, அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டுங்கள்!