Cart is Empty
by ச.சிவ.வல்லாளன்
நமது மரபணுக்கள் நம் ஆதாரம். நமது உடல்-மனம்-அறிவுத்திறன் என்று நம்மிடம் எத்தனை உண்டோ அத்தனைக்கும் பொறுப்பு, உடல் செல்களில் பொதிந்துள்ள மரபணுக்கள் (GENES)தான். தலைமுறை தலைமுறையாக தாய்-தந்தை இருவரின் அடிப்படைப் பண்புகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துப் பாதுகாப்பவை, மரபணுக்களே. மரபணுக்கள் சீராகச் செயல்படுவதற்கு அவைகளுக்கும் ஊட்டச்சத்துகள் இன்றியமையாதது. ஊட்டச்சத்து பற்றாக் குறையால் மரபணுக்களின் செயல்பாடுகளில் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். மரபணுக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயல்படுகின்றன ஆன்டிஆக்ஸிடன்ட்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்றால் என்ன? ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் இருந்து பெறும் ஊட்டச்சத்துக்களாகவோ அல்லது உயிர்ச் சத்துக்களாகவோ இருக்கலாம். உடலில் உருவாகும் என்சைம்களாகவும் இருக்ககலாம். ஆனால், எல்லாவகை ஊட்டச்சத்துகளும் உயிர்ச் சத்துகளும் என்சைம்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக இருக்க முடியாது. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பயன் என்ன? நமது உடலின் இயற்கையான மூப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தி இளமையில் முதுமைப் பருவத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல்மிக்கவை ஃபிரிரேடிகல்கள். முதுமை தோற்றத்தைக் கொடுப்பதோடு நின்று விடாமல், முதுமை பருவத்துக்கு உரிய நோய்களையும் உருவாக்கிவிடும். OPC ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃபிரிரேடிகல்களை அழிக்கின்றன. அதனால் உடல் முதுமை வளர்ச்சி வேகம் குறைகிறது. இளமையில் முதுமைத் தோற்றம் தடுக்கப்படுகிறது. இத்தகைய ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அற்புதத்தன்மை குறித்து இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்தால் நம்மை நாம் உணரலாம். நம் உடம்புக்கு எது தேவை என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. நம்மை நாம் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 74 More...by பொன்.திருமலை
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும் நமக்கு இல்லை. நாகரிகம், வளர்ச்சி, வேகம் என்கிற அசுரத்தனமான போக்கில் நம் உணவுப்பழக்கங்களில் இருந்து காய்கறிகளைக் கட்டம் கட்டி வைத்துவிட்டோம். வியாதிகள் பெருகிப்போய்விட்ட நிலையில்தான் காய்கறிகளின் அவசியம் நமக்குப் புரிகிறது. இயற்கையின் பெருங்கொடையாக நமக்கு வாய்த்திருக்கும் காய்கறிகள் குறித்து எளிய நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் பொன்.திருமலை. காய்கறிகளில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்களை எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி இருக்கிறார். காய்கறிகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை எனப் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல், எந்தக் காய்கறி உடலைக் குளிர்ச்சியாக்கும், எது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எந்தக் காய்கறியைப் பயன்படுத்துவது, காய்கறிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என சிறு குழந்தைக்கும் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு. சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டிய காய்கறிகளையும் இந்த நூல் பட்டியல் போடத் தவறவில்லை. காய்கறிகளின் மகத்துவத்தையும் இன்றைய தலைமுறை காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஒருசேர வலியுறுத்தும் உணவு வழிகாட்டி இந்த நூல்!
RS. 77 More...by வெ.தமிழழகன்
கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகள் மற்றும் கிழங்குகளின் தன்மையும் இத்தகையதே. சில கீரைகள் உடலுக்கு குளிர்ச்சியையும், சில சூட்டையும் தரவல்லது. எது எப்படி இருந்தாலும் கீரைகளும், கிழங்குகளும் ஊட்டச் சத்துக்களை அள்ளித் தருபவை; வைட்டமின்களை அளித்து நோய்களைத் தீர்க்கும் வல்லமை படைத்தவை. உதாரணமாக, அகத்திக்கீரை வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்தது. இதைச் சாப்பிடுவதால் ஜலதோஷம், பித்தம் நீங்கும் என்கிறார் நூலாசிரியர் வெ.தமிழழகன். அடிக்கடி பேதியானால், சிறுநீரகக் கோளாறு இருந்தால், பித்தப் பையில் கல் உண்டானால், கருப்பையில் கட்டி இருந்தால் பொதுவாகக் கீரைகளைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரையை உண்ணக் கூடாது. வயிற்று வலி இருக்கும்போது புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்க்காமல் கீரைகளைச் சமைத்து உண்ண வேண்டும். இதய நோயாளிகள் கட்டாயம் முருங்கை கீரையைத் தவிர்க்கவும் போன்ற, நமக்குத் தெரிந்த கீரைகள் பற்றி தெரியாத தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அருகம்புல் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். அருகம்புல் கிழங்கைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அருகம்புல் கிழங்கு உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தரும் சக்தி கொண்டது என்பது புதிய விஷயம். பன்றி மொந்தன் கிழங்கு என்று ஒரு கிழங்கு இருக்கிறது. இதன் பயன் என்ன? இதைப் போன்று எத்தனையோ கிழங்குகளைப் பற்றியும், கீரைகளைப் பற்றியும் பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கின்றன. எந்தக் கீரையை எந்தப் பருவத்தில் சாப்பிடலாம், எந்தக் கீரையுடன் எதைச் சேர்த்தால் அதிகப் பயன் தரும் போன்றவற்றைப் பற்றி சுவைக்கச் சுவைக்க ‘டிப்ஸ்’ தருகிறார் நூலாசிரியர். உடல் மேல் அக்கறை கொண்டவர்கள் படித்துப் பயன் பெறக்கூடிய நூல் இது.
RS. 77 More...by யசோதரை கருணாகரன்
இன்றைய தினம் பெரும்பான்மை மனிதர்களை கவலைப்பட வைக்கக்கூடியது எது தெரியுமா? அது நீரிழிவு நோய்தான். சர்க்கரை என்றால் வாய் இனித்த காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது யாரிடமாவது சர்க்கரை என்று சொல்லிப் பாருங்களேன்; நீரிழிவு நோயை மக்கள் சர்க்கரை நோய் என்று பயன்படுத்துவதால் சர்க்கரை என்றால் இப்போதெல்லாம் சோகம் ஆட்கொண்டு விடுகிறது. நீரிழிவு நோய் வந்தால் என்ன ஆகும்? ‘எப்படி இருந்த ஆளு இப்போ இப்படி ஆயிட்டாரே...’ என மற்றவர்கள் கேட்கத் தோன்றும் அளவுக்கு உடல் மெலிந்துவிடும். உயிரையும் பறிக்கும். நீரிழிவு நோய் எதனால் வருகிறது? இதற்கு பல காரணங்களைச் சொல்கின்றனர். இது பரம்பரை நோய். மேலும், உடல் பருமன், பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் உடம்பை வளர்ப்பது மற்றும் எந்த நேரமும் கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிடுவது என நீரிழிவு நோய்க்கான காரணங்களை அடுக்குகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். சரி, இந்த நோய் நடுத்தர மற்றும் முதியோர்களை மட்டும்தான் தாக்குமா? இல்லை... அதற்கும் மேலே... 6 மாதக் குழந்தை தொடங்கி 60-ஐத் தாண்டிய முதியோர் வரை அனைவரையும் நீரிழிவு நோய் தாக்குகிறது. இதனைத் தடுக்க என்ன வழி? அதுதான் உணவுக்கட்டுப்பாடு. மாவுச்சத்துள்ள பொருட்களையும், கொழுப்புச்சத்துள்ள பொருட்களையும் குறைப்பது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். ‘நாம் சாப்பிடும் அரிசியே மாவுச்சத்து நிரம்பியது தானே?’ என்று கேள்வி கேட்பவர்களுக்குத்தான் இந்த அரிய புத்தகம். நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு சாப்பிடலாம்? அந்த உணவு வகைகள் என்னென்ன? இளம் வயது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு எது? உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் அடுக்குகிறார் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன். உணவைக் கட்டுப்படுத்தினால் உடல் உறுதியாகும். உடல் உறுதியானால் நீரிழிவு ஓடிப்போகும். கட்டுப்பாடுள்ள உணவுகளை அடையாளம் காட்டி, உணவுக் குறிப்புகளையும் வகைப்படுத்துகிறது இந்த நூல். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நூல் புத்தகமல்ல... புதையல்.
RS. 81 More...by டாக்டர் கு. கணேசன்
குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய கலை. குழந்தை பிறந்து, பள்ளி செல்லும் வரையிலான காலக்கட்டம் மிகவும் சிக்கலானது. திடீர் திடீரென்று குழந்தைக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான் காரணம். குழந்தை பிறந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேம்படும். இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்கத்தான் குழந்தைகளுக்குத் தடுப்பூசி அல்லது தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. தடுப்பூசியானது குழந்தைக்கு, குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செயல்படும் ஆற்றலைத் தருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் ஏராளமான குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டனர். இந்திய அரசு எடுத்த தொடர் முயற்சி காரணமாக தற்போது, போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டது. இதுபோன்று ஏராளமான தொற்று நோய்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தடுப்பூசி ஏன் போடப்படுகிறது? எப்போது போடவேண்டும்? குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போடவில்லை என்றால், மீண்டும் எப்போது போடுவது? காய்ச்சல், சளி இருந்தால் தடுப்பூசி போடலாமா? போன்ற ஏராளமான சந்தேகங்கள் தாய்மார்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் தீர்வு அளிக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்று, தற்போது நூலாக வெளிவந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைத்த அனைத்து தடுப்பூசிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும்... நோயில்லா, ஆற்றல்மிக்க குழந்தைகளை வளர்த்தெடுக்க சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் திகழும்.
RS. 81 More...by மருத்துவர் கு.சிவராமன்
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக்குப் பயனளிக்கிறது. மிளகு, வெந்தயம், பெருங்காயம் இவற்றைத் தொடர்ந்து அதிகம் உபயோகப்படுத்தாத அதிமதுரம், திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு போன்ற மருத்துவ காய்களில் நலம் தரும் நற்குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவ்வரிசையில் பூக்கள், எண்ணெய் வகைகள்கூட விட்டு வைக்கப்படவில்லை. அதைக் குழந்தை மற்றும் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் முறைகளை அழகாய் சொல்லிக்கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். அயல்நாட்டவர் இவ்வகை அரிய அற்புத மூலிகைகளைக் கண்டறிந்து தங்களுக்கென உரிமை கொண்டாடினாலும் இவற்றின் பிறப்பிடம் நம் இடமாகவும் நம் முன்னோர்கள் கையாண்ட பாரம்பர்ய சித்த மருத்துவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அழியாமல் காத்திட முன் வருவோம் நம் பாட்டன் சொத்தான பாரம்பர்யத்தை. கோடைகாலத்தில் வரும் பிரச்னையை ஒரு முள்கூட குணப்படுத்த முடியும் என்கிற அரிய வழிமுறைகள் அடங்கிய சித்த மருத்துவம் இருக்க, காலப்போக்கில் நவீனமயமாக்கல் எனத் தொடங்கிய சமூக பொருளாதார வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் மேலோங்கி கோலோச்சியபோது, துரித உணவுகளால் மனிதன் ஆரோக்கிய உணவை இழந்து, இறுதியில் கொசுறாக எழுதப்படும் மாத்திரையை கூடுதல் விலைகொடுத்து வாங்கி, உடலுக்குக் கேடு விளைவித்து உயிரிழந்ததே மிச்சம். இன்றோ தாம் உண்ணவேண்டிய உணவு எது? உடல் நலம் பேண, ஆயுள் காக்க மனிதன் மீண்டும் மறந்த மறைந்த முன்னோர்களின் மருத்துவத்தை வழக்கத்துக்குக் கொண்டுவரும் கட்டாயத்தில் இருக்கிறான். நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளால் கண்களைப் பாதுகாக்கும் சக்தி கறிவேப்பிலைக்கும் உண்டு என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் தந்திருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். டாக்டர் விகடனில் தொடராக வந்த ‘நாட்டு மருந்துக்கடை’க்கு வாருங்கள்; நோயில்லா வாழ்வை வாழ, அறிவோம் அற்புதங்கள் செய்யும் பாரம்பர்ய மருத்துவத்தை!
RS. 81 More...by டாக்டர் சவுண்டப்பன்
அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே அதன் ரகசியம் என்ன? இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம். இப்படிப்பட்ட மூளைக்கே ஓர் மூளை உண்டு. அதுதான் மெடுல்லா. இது இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்குச் செல்லாது. ‘டெம்போரல் லோப்’ பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, ஒரு பொருளை அடையாளம் காண்பது... பொருட்களை வகைப்படுத்தும் திறன் இழப்பு; குறிப்பாக, இடதுபக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் மொழித் திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் மற்றும் வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறியும் திறனும் செயலிழந்துவிடும்... இதுபோன்ற மூளை நிகழ்த்தும் அதீத பணியையும் அதன் செயல்திறனையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்த நூல். மூளை தொடர்பான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு எப்போதும் கோபமாக இருந்த பெண்மணி சாதுவானது, பீனியஸ் கேஜ் என்பவருக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனது, மூளை பாதிப்பால், நிறம், வடிவம் அறியும் திறனை இழக்கும்போது பிளாக் அண்டு ஒயிட் காலத்துக்கே ஒரு மனிதனை அழைத்துச் சென்றுவிடும்... என மூளையால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது நூல். டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது. ஆச்சரியமான தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.
RS. 81 More...by டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்
ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது. இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும
RS. 90 More...by டாக்டர் க.சம்பத்குமார்
நோய்க்கு எதிரான ஓர் ஆற்றல் இருந்தால்தான் நோய் குணமடையும். இந்த நோய் எதிராற்றலை எங்கே கண்டறிவது? நோய் எதிராற்றல் என்பது தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுதான். நோய்க் கிருமிகள் உடலைத் தாக்கும்போது இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றை அழிக்கின்றன. சில செல்கள் தங்களால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. இயற்கையிலேயே அதிசயமாக அமைந்திருக்கும் இந்தக் கட்டமைப்பு நமது உடலுக்குள் இயங்கி எந்த நோய்க்கும் நாம் ஆட்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிராற்றலை நமக்கு அளிப்பவை திசுக்களே. நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்தல், நச்சுகள், தேவையற்ற கழிவுகள் போன்றவற்றை நீக்கி உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றைத் திசுக்களே செய்கின்றன என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் மருத்துவர் க.சம்பத்குமார். ஜலதோஷம், ஃப்ளூ போன்ற தொற்று நோய்களை விரட்டியடிக்க அதிகத் தண்ணீர் குடிப்பது நல்லது. இது கிருமிகளையும் அவற்றின் நச்சுப் பொருட்களையும் வெளியேற்ற நிணநீர் மண்டலத்துக்கு பெரிதும் உதவும். ஆனால், தண்ணீரை எப்படிக் குடிப்பது, எவ்வளவு நீரை உட்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறலாம் போன்றவற்றை ஆய்வுத் தகவல்களுடன் அள்ளித் தருகிறார் நூலாசிரியர். எலும்பும் தோலும் போர்த்திய மனித உடம்புக்குள் எத்தனை அதிசயங்கள்? இந்த நூலைப் படித்து முடிக்கும் போது, உங்கள் உடலுக்கு நீங்களே ஆற்றல்மிக்க மருத்துவராகும் அதிசயமும் நடக்கும்.
RS. 84 More...by டாக்டர் எஸ்.சுஜாதா ஜோசப்
தற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை உணவும் மூலிகையுமே உதவுகின்றன. இந்த விந்தையை ஆற்றுகிறது இயற்கை. இந்த ரகசியத்தை சித்த மருத்துவம் நன்கு உணர்ந்திருக்கிறது. சித்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களையே உபயோகிக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களான எலுமிச்சம்பழம், அன்னாசிப் பழம் போன்ற எளிய உணவுப் பொருட்களே மருந்தாகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, படர் தாமரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு, அல்சர், மஞ்சள் காமாலை, ஆண்மைப் பிரச்னை, மூச்சுத் திணறல்... போன்ற அனேக வியாதிகளுக்கு எளிய சித்த மருத்துவ முறைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் சுஜாதா ஜோசப். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மூலிகைகளைத் தவிர மூலிகைகளைக் கொண்டு உடலில் பற்றுப் போடுதல், தோலின் மேலே களிம்புபோல வைத்துக் கட்டுதல் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். சுவையைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் எளிய உணவுப் பொருட்களிலிருந்து ஆரோக்கியத்தை எளிதாகவும் செலவில்லாமலும் பெறலாம். மேலும், சித்த மருந்துப் பொருட்களைச் சுவைத்தும் சாப்பிடலாம். டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
RS. 84 More...