Cart is Empty
by மருத்துவர் கு.சிவராமன்
நாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. - மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் சிறப்புடன் அமைந்ததில்லை என்று சரித்திரம் சொல்கிறது. அது உணவுக்கும் பொருந்தும், மருத்துவத்திற்கும் பொருந்தும். உடலே உயிர்.. உணவே மருந்து என்ற திட நுட்பமான உண்மை விளங்கினால் நோயற்ற வாழ்வு நிச்சயம். அவசர கதியான உலகில் மனித வாழ்வியலில் எங்கு நோக்கினும் கலப்படம் என்பது இரண்டற கலந்துவிட்டது. இதன் விளைவு புதிய புதிய நோய்களின் உற்பத்தி. இயற்கை விதிகளை மீறி சூழலை மாசுபடுத்துவதின் விளைவாக விளையும் பாதிப்புகள் மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும். இந்த பேரபாயத்தை நாம் உணர வேண்டும். உணவும், சூழலும், மருத்துவமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ‘பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான்’ என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். இயற்கையோடு இணைந்த வாழ்வே பெருவாழ்வு. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக, கலப்படம் அற்றதாக இருக்க வேண்டும். அதனை உற்பத்தி செய்யும் நிலத்தை பாதுகாக்க வேண்டும். நமக்கெல்லாம் சோறுபோடும் விவசாயி வயிறு நிரம்ப வேண்டும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். ‘சுற்றமும் சூழலும் நட்பும்’ என்ற இந்தப் புத்தகத்தில் நம் நிகழ்கால வாழ்வுக்கும், எதிர்கால வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். ‘நலவாழ்வுக்கு நல்ல தூக்கமும் அக மகிழ்வும் இயல்பாய் நிகழும் வாழ்வியல் வேண்டும். அதற்கு வாழ்வின் உயரங்களை விட சம நிலங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். பாரம்பரியம் பலகாலமாய்க் கற்றுக் கொடுத்தது அதைத்தான்’ எனும் கு.சிவராமன் நம் வாழ்வை நெறிப்படுத்தும் முறைகளையும் வகுத்தளிக்கிறார். வாருங்கள் நாமும் அவரோடு இணைவோம். நம் பாரம்பரியம் காக்க...
RS. 56 More...by ச.சிவ.வல்லாளன்
நமது மரபணுக்கள் நம் ஆதாரம். நமது உடல்-மனம்-அறிவுத்திறன் என்று நம்மிடம் எத்தனை உண்டோ அத்தனைக்கும் பொறுப்பு, உடல் செல்களில் பொதிந்துள்ள மரபணுக்கள் (GENES)தான். தலைமுறை தலைமுறையாக தாய்-தந்தை இருவரின் அடிப்படைப் பண்புகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துப் பாதுகாப்பவை, மரபணுக்களே. மரபணுக்கள் சீராகச் செயல்படுவதற்கு அவைகளுக்கும் ஊட்டச்சத்துகள் இன்றியமையாதது. ஊட்டச்சத்து பற்றாக் குறையால் மரபணுக்களின் செயல்பாடுகளில் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். மரபணுக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயல்படுகின்றன ஆன்டிஆக்ஸிடன்ட்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்றால் என்ன? ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் இருந்து பெறும் ஊட்டச்சத்துக்களாகவோ அல்லது உயிர்ச் சத்துக்களாகவோ இருக்கலாம். உடலில் உருவாகும் என்சைம்களாகவும் இருக்ககலாம். ஆனால், எல்லாவகை ஊட்டச்சத்துகளும் உயிர்ச் சத்துகளும் என்சைம்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக இருக்க முடியாது. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பயன் என்ன? நமது உடலின் இயற்கையான மூப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தி இளமையில் முதுமைப் பருவத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல்மிக்கவை ஃபிரிரேடிகல்கள். முதுமை தோற்றத்தைக் கொடுப்பதோடு நின்று விடாமல், முதுமை பருவத்துக்கு உரிய நோய்களையும் உருவாக்கிவிடும். OPC ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃபிரிரேடிகல்களை அழிக்கின்றன. அதனால் உடல் முதுமை வளர்ச்சி வேகம் குறைகிறது. இளமையில் முதுமைத் தோற்றம் தடுக்கப்படுகிறது. இத்தகைய ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அற்புதத்தன்மை குறித்து இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்தால் நம்மை நாம் உணரலாம். நம் உடம்புக்கு எது தேவை என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. நம்மை நாம் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 74 More...by டாக்டர் சவுண்டப்பன்
அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே அதன் ரகசியம் என்ன? இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம். இப்படிப்பட்ட மூளைக்கே ஓர் மூளை உண்டு. அதுதான் மெடுல்லா. இது இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்குச் செல்லாது. ‘டெம்போரல் லோப்’ பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, ஒரு பொருளை அடையாளம் காண்பது... பொருட்களை வகைப்படுத்தும் திறன் இழப்பு; குறிப்பாக, இடதுபக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் மொழித் திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் மற்றும் வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறியும் திறனும் செயலிழந்துவிடும்... இதுபோன்ற மூளை நிகழ்த்தும் அதீத பணியையும் அதன் செயல்திறனையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்த நூல். மூளை தொடர்பான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு எப்போதும் கோபமாக இருந்த பெண்மணி சாதுவானது, பீனியஸ் கேஜ் என்பவருக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனது, மூளை பாதிப்பால், நிறம், வடிவம் அறியும் திறனை இழக்கும்போது பிளாக் அண்டு ஒயிட் காலத்துக்கே ஒரு மனிதனை அழைத்துச் சென்றுவிடும்... என மூளையால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது நூல். டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது. ஆச்சரியமான தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.
RS. 81 More...by மருத்துவர் வி.விக்ரம்குமார்
உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவி புரிபவை அஞ்சறைப் பெட்டியின் எளிமையான பொருள்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்து, உணவுப் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்களை தரணிக்குச் சொன்னது நம் தமிழ்ச்சமூகம். `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ போன்ற முதுமொழிகள் அஞ்சறைப் பெட்டிப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்று நோய் வரை நம்மைக் காக்கும் மகத்துவம் கொண்டவை நம் பாரம்பர்ய உணவுப் பொருள்கள். உதாரணமாக, குடல்பகுதியில் இருக்கும் புழுக்களை அழித்து வெளியேற்றும் ஓமம், புற்றுநோய் வராமல் தடுக்கும் வால் மிளகு, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் பாதுகாப்பு அரணாக விளங்கும் வசம்பு... போன்ற எளிமையான உணவுப் பொருள்கள் நம் ஆரோக்கியத்தின் அரண்கள். உணவுக்குச் சுவையையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்கும் உணவுப் பொருள்களின் வரலாற்றையும் அவற்றின் பயன்களையும் விளக்கி, அவள் விகடனில் வெளிவந்த அஞ்சறைப் பெட்டி கட்டுரைகளில் சில ஏற்கெனவே ‘அஞ்சறைப் பெட்டி' எனும் தொகுப்பு நூலாக விகடன் பிரசுரம் வெளியிட்டது. அந்தக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு நூல் இது. சுவையுடன் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் உணவுப்பொருள்களை அறிய வாருங்கள்!
RS. 150 More...by டாக்டர் கு. கணேசன்
குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய கலை. குழந்தை பிறந்து, பள்ளி செல்லும் வரையிலான காலக்கட்டம் மிகவும் சிக்கலானது. திடீர் திடீரென்று குழந்தைக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான் காரணம். குழந்தை பிறந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேம்படும். இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்கத்தான் குழந்தைகளுக்குத் தடுப்பூசி அல்லது தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. தடுப்பூசியானது குழந்தைக்கு, குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செயல்படும் ஆற்றலைத் தருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் ஏராளமான குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டனர். இந்திய அரசு எடுத்த தொடர் முயற்சி காரணமாக தற்போது, போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டது. இதுபோன்று ஏராளமான தொற்று நோய்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தடுப்பூசி ஏன் போடப்படுகிறது? எப்போது போடவேண்டும்? குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போடவில்லை என்றால், மீண்டும் எப்போது போடுவது? காய்ச்சல், சளி இருந்தால் தடுப்பூசி போடலாமா? போன்ற ஏராளமான சந்தேகங்கள் தாய்மார்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் தீர்வு அளிக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்று, தற்போது நூலாக வெளிவந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைத்த அனைத்து தடுப்பூசிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும்... நோயில்லா, ஆற்றல்மிக்க குழந்தைகளை வளர்த்தெடுக்க சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் திகழும்.
RS. 81 More...by வெ.தமிழழகன்
உண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் விபரீத சூழ்நிலையில்தான் இன்றைய தலைமுறை உள்ளது. இதனால், தமிழர்களின் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு, இளம் தலைமுறையைத் திருப்பவேண்டியது அவசியம். அசுத்தமான தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதைப் பருகும் நிலைக்குப் பக்குவப்படுத்தும் தேற்றான் கொட்டை முதல் காய்கள், அதன் விதைகள், கொட்டைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்துவது பற்றியும் விளக்குகிறது இந்த நூல். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி நினைவாற்றலைப் பெருக்கும் கடுக்காய், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்.. இப்படி இயல்பாய்க் கிடைக்கும் காய்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து நம் வீடுகளிலேயே எளிய முறையில் மருந்துகள் தயாரித்து பயன்பெற வழிசொல்லும் நூலிது. காய், விதை, கொட்டைகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்!
RS. 150 More...by டாக்டர் அருண்குமார்
எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்று புரிந்துகொள்ளாமல் வேகமாகச் செல்லும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். இந்த காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவுக்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக்கொண்டிருக்கிறோம். உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் அல்லது உபாதை ஏற்படுத்துமா என்பதை விளக்கி ஆனந்த விகடனில் வெளியான `ஆரோக்கியம் ஒரு பிளேட்' கட்டுரைகளின் முதல் தொகுப்பு நூல் ஏற்கெனவே வெளியாகி வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கட்டுரைகளின் இரண்டாம் தொகுப்பு நூல் இது. நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப் பொருள்களையும் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்தும், காய்கறிகளின் தன்மை, சைவ, அசைவ உணவுகளின் சாதக பாதகங்களையும் விளக்கமாகக் கூறுகிறது இந்த நூல். உணவுப் பொருள்களின் உண்மைத்தன்மையை விளக்கி ஆரோக்கிய வாழ்வுக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது!
RS. 250 More...by யசோதரை கருணாகரன்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945) உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவை உண்ண வேண்டும். அதிலும் தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவுக்கு அளவு வைத்து உண்ண வேண்டும். இப்படி உண்பதால் உயிருக்கு எந்த ஊறும் இல்லை என்கிறார் வள்ளுவர். ஆனால், மாறுபாடு ஏற்படுத்தாத இல்லாத உணவை தற்போது தேடித்தான் உண்ண வேண்டி யுள்ளது. எனினும் இப்போக்கை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த நூல். காய்கறிகளின் குணம், கீரைகளின் பலன், சத்துள்ள உணவு எது? என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். வரலாற்றுப் புகழ் வாய்ந்த நம் பாரம்பர்ய தாளிப்புப் பொருள்கள், மசாலாப் பொருள்கள், அவற்றுள் புதைந்திருக்கும் நன்மைகளை விட்டுவிட்டு மக்கள் துரித உணவுகளை நாடியதால் ஆரோக்கியத்தை இழந்துபோயினர். அவற்றை மீட்டெடுக்கும் வழிமுறைகள் ஏராளம் உள்ளது இந்த நூலில். நல்ல உணவு எது என்று தேடி, கண்டு, அதை உண்டு, உடலுக்கு ஆரோக்கியம் தந்து, உயிருக்கு வாழ்வளிப்போம்! வாருங்கள்... உணவின் ரகசியம் அறிய!
RS. 160 More...by டாக்டர் அழ.மீனாட்சிசுந்தரம்
இன்று மருத்துவமனைக்குச் சென்றால் வலிக்காமல் பரிசோதனை செய்துகொள்ளலாம், அல்லது வலி இன்றி அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். இது எப்படி சாத்தியமாயிற்று? வலியைத் தீர்க்கும் மருந்துகளும் மயக்க மருந்தும் இல்லாத பரிசோதனையையும் சிகிச்சையையும் கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருக்கும்! இத்தனை முன்னேற்றத்துக்கும் எவரோ கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள்தானே காரணம்? சுஷ்ருதா, சராகா, ஹிப்போக்ரடீஸ், லேன்னக், தாமஸ் க்ரீன் மார்ட்டன், சிக்மண்ட் ஃப்ராய்ட், அலெக்சாண்டர் ஃப்ளெமிங், மேரி கியூரி, வில்ஹெம் கான்ராட் ரான்ட்ஜன், ஜேம்ஸ் யங் சிம்சன், எட்வர்ட் ஜென்னர் போன்ற 24 கண்டுபிடிப்பாளர்களின் மருத்துவக் கண்டுபிடிப்புகளைப் பற்றி சுவையாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். ரொம்ப காலத்துக்கு முன்னரே நோய் உண்டாவதைப் பற்றியும், ஆயுர்வேத மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முறை, ஸ்டெதஸ்கோப், மயக்க மருந்தான ஈதர், க்ளோரோஃபார்ம், உளவியல், எக்ஸ்ரே, பென்சிலின் மருந்து, அம்மைத் தடுப்பு மருந்தான அம்மைப்பால் போன்ற பல கண்டுபிடிப்புகளைப் பற்றி அனேகத் தகவல்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது உங்கள் கைகளில் நூலாகத் தவழ்கிறது. மருத்துவத் துறைக்கு இவர்கள் ஆற்றிய தொண்டுக்கு ஈடு இணை இல்லை. அடுத்த முறை மருத்துவமனைக்குச் சென்று வலியில்லாமல் நோய் குணமாகும்போது இவர்களை ஒரு முறை நினைத்துக்கொண்டு நன்றி சொல்வோம்தானே?
RS. 60 More...by வெ.தமிழழகன்
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் செடிகள், மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவர் போன்றது. ஆனால், நாம் நம் பக்கத்திலேயே மருத்துவரை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, கிராமப்புறங்களில் அடிக்கடி தேள்கடிச் சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. தேள்கடி விஷத்துக்கு, துளசி இலையை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும், கடித்த இடத்தில் அழுத்தித் தேய்க்கவும் தேள்விஷம் உடனே முறிந்துவிடும் என்கிறது சித்த மருத்துவம். இப்படி இயற்கையிலேயே நம் அருகிலேயே மருத்துவ முறை இருப்பதை நாம் மறந்துவிட்டோம். இப்படிப்பட்ட நம் பாரம்பர்ய மருத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த நூல். நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கைத் தாவரங்கள், மரங்கள், காய், கனி, இஞ்சி, மிளகு போன்றவைகளில் என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்றும் மருந்து செய்முறைகளையும் கூறுகிறது இந்த நூல். உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க இந்த நூல் ஆகச்சிறந்த வழிகாட்டி!
RS. 150 More...