Cart is Empty
by டாக்டர் சவுண்டப்பன்
அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே அதன் ரகசியம் என்ன? இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம். இப்படிப்பட்ட மூளைக்கே ஓர் மூளை உண்டு. அதுதான் மெடுல்லா. இது இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்குச் செல்லாது. ‘டெம்போரல் லோப்’ பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, ஒரு பொருளை அடையாளம் காண்பது... பொருட்களை வகைப்படுத்தும் திறன் இழப்பு; குறிப்பாக, இடதுபக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் மொழித் திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் மற்றும் வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறியும் திறனும் செயலிழந்துவிடும்... இதுபோன்ற மூளை நிகழ்த்தும் அதீத பணியையும் அதன் செயல்திறனையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்த நூல். மூளை தொடர்பான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு எப்போதும் கோபமாக இருந்த பெண்மணி சாதுவானது, பீனியஸ் கேஜ் என்பவருக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனது, மூளை பாதிப்பால், நிறம், வடிவம் அறியும் திறனை இழக்கும்போது பிளாக் அண்டு ஒயிட் காலத்துக்கே ஒரு மனிதனை அழைத்துச் சென்றுவிடும்... என மூளையால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது நூல். டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது. ஆச்சரியமான தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.
RS. 81 More...by மருத்துவர் கு.சிவராமன்
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக்குப் பயனளிக்கிறது. மிளகு, வெந்தயம், பெருங்காயம் இவற்றைத் தொடர்ந்து அதிகம் உபயோகப்படுத்தாத அதிமதுரம், திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு போன்ற மருத்துவ காய்களில் நலம் தரும் நற்குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவ்வரிசையில் பூக்கள், எண்ணெய் வகைகள்கூட விட்டு வைக்கப்படவில்லை. அதைக் குழந்தை மற்றும் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் முறைகளை அழகாய் சொல்லிக்கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். அயல்நாட்டவர் இவ்வகை அரிய அற்புத மூலிகைகளைக் கண்டறிந்து தங்களுக்கென உரிமை கொண்டாடினாலும் இவற்றின் பிறப்பிடம் நம் இடமாகவும் நம் முன்னோர்கள் கையாண்ட பாரம்பர்ய சித்த மருத்துவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அழியாமல் காத்திட முன் வருவோம் நம் பாட்டன் சொத்தான பாரம்பர்யத்தை. கோடைகாலத்தில் வரும் பிரச்னையை ஒரு முள்கூட குணப்படுத்த முடியும் என்கிற அரிய வழிமுறைகள் அடங்கிய சித்த மருத்துவம் இருக்க, காலப்போக்கில் நவீனமயமாக்கல் எனத் தொடங்கிய சமூக பொருளாதார வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் மேலோங்கி கோலோச்சியபோது, துரித உணவுகளால் மனிதன் ஆரோக்கிய உணவை இழந்து, இறுதியில் கொசுறாக எழுதப்படும் மாத்திரையை கூடுதல் விலைகொடுத்து வாங்கி, உடலுக்குக் கேடு விளைவித்து உயிரிழந்ததே மிச்சம். இன்றோ தாம் உண்ணவேண்டிய உணவு எது? உடல் நலம் பேண, ஆயுள் காக்க மனிதன் மீண்டும் மறந்த மறைந்த முன்னோர்களின் மருத்துவத்தை வழக்கத்துக்குக் கொண்டுவரும் கட்டாயத்தில் இருக்கிறான். நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளால் கண்களைப் பாதுகாக்கும் சக்தி கறிவேப்பிலைக்கும் உண்டு என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் தந்திருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். டாக்டர் விகடனில் தொடராக வந்த ‘நாட்டு மருந்துக்கடை’க்கு வாருங்கள்; நோயில்லா வாழ்வை வாழ, அறிவோம் அற்புதங்கள் செய்யும் பாரம்பர்ய மருத்துவத்தை!
RS. 81 More...by மருத்துவர் கு.சிவராமன்
‘‘கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கின்றன. சேர்ந்து சாப்பிடும் வழக்கமே மறைந்துவிட்ட இந்தக் காலச்சக்கர ஓட்டத்தில் எது நல்ல உணவு, எது உடலுக்கு உகந்தது என்பதை எல்லாம் அறிவதற்கே நேரம் இல்லை. சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், சிறுநீரகப் பிரச்னைக்கு வாழைத்தண்டு கூட்டு, உடல் உறுதிக்கு முருங்கைக் கீரை என நம் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ற உணவைத் தேர்தெடுத்து உண்ண, இப்போது எத்தனை பேரால் முடிகிறது? கால்களில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழலும் இன்றைய உலகம், ‘கிடைத்ததை உண்போம்’ என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டது. தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு சிலரும் சுவையை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடல் நலனை அல்ல! பருவநிலை, பாதிப்பு, தேவை ஆகியவற்றைப் பட்டியலிட்டு அதற்குத் தகுந்த உணவுகளை இந்த நூலில் வகைப்படுத்திக் காட்டுகிறார் மருத்துவர் சிவராமன். நெல்லிக்கனி, முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, கொத்தமல்லிக் கீரைகளில் உடலை வனப்பாக்கும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், இதயத்தைக் காக்கும் பூண்டு, மலச்சிக்கலைத் தீர்க்கும் பிடிகருணை என உணவின் மருத்துவ மகத்துவங்களை நூல் ஆசிரியர் சிவராமன் அற்புதமாக எழுதி இருக்கிறார். பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விஷயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், இன்றைய சூழல் மீது அக்கறை கொண்டவராக, இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கைக் கொண்டவராக சிவராமன் எழுதி இருக்கும் இந்த நூல், உணவு தொடங்கி உள்ளம் வரையிலான பலவிதத் தெளிவுகளையும் நமக்குள் ஏற்படுத்தும்.
RS. 70 More...by மருத்துவர் கு.சிவராமன்
தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்துவதில் மருத்துவர் சிவராமனின் தொடர் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. வீடு தேடி வந்த காய்ச்சல்களை பதட்டமே இல்லாமல் விரட்டி அடித்த நாம் தற்போது உலகையே உலுக்கும் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் எபாலோ கண்டு நடுநடுங்குகின்றோம். மனிதனின் லாபவெறிக்காக இயற்கையை சிதைத்து தூண்டப்பட்ட கிருமிகளை ஒடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை எப்போதும் உச்சத்திலே வைத்திருக்கும் வழிமுறைகளை பட்டியலிட்டு ஒவ்வாமை, தீராத தலைவலி, பல் மற்றும் ஈறு பிரச்சனைகளிலிருந்து விடுபெறும் ரகசியத்தையும் குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் சிவராமன். ‘சுத்தம் என்ற நல்ல பழக்கத்தை பயமாக ஆழ்மனதுக்குள் விதைத்து அதை வணிக மயக்கமாக்கி இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் யுத்தி. மரபணு பயிர்களால் என்றுமே மனித இனத்திற்குக் கேடுதான். இதற்கு மாற்று இயற்கை விவசாயம் மட்டுமே’ என்பதை மிகவும் உறுதியாகக் கூறுகிறார் நூல் ஆசிரியர். ‘நம் உடல் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்து பராமரிப்பதை மறந்துவிடுகின்றோம். விளைவு? செயற்கை கருத்தரிப்பு மையங்களின் பெருக்கம். மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை குறைந்திருப்பதன் எதிரொலி, இளைய தலைமுறையினர் இதுமாதிரியான மையங்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்’ என்றும் எழுதியிருக்கிறார். மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் ஆனந்த விகடன் வாசகர்களுக்கு அறிவூட்டிய ‘நலம் 360’ என்ற தொடரில் விரிவாக வெளிவந்த கட்டுரைகளில் சிலவற்றை மட்டும் தொகுத்து தற்போது நூல் வடிவைப் பெற்றுள்ளது. தமிழர்கள் மறந்த பாரம்பரிய உணவு மற்றும் பழக்க வழக்கங்களை மீட்டெடுப்பதில் இந்த நூல் சிறந்த கருவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
RS. 102 More...by மருத்துவர் கு.சிவராமன்
தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2 மினிட்ஸ் உணவுகள் என சிறுவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே இப்போது பெருகிவருவது வரவேற்கத்தக்கது. ஃபாஸ்ட் புட், சாக்ரீம், கலர் மற்றும் பதப்படுத்தப்பட்ட மற்றும் இறுக்கமான உணவுகளை உண்டுவந்த மக்கள், அவைகளால் ஏற்பட்ட பின்விளைவுகளை உணர்ந்து இப்போது பாரம்பர்ய உணவுகளைத் தேடியும், ஃபிரஷ்ஆன பழங்கள் மற்றும் காய்கறி, கீரை உணவுகளை நாடியும் வருகின்றனர். பின்விளைவுகள் அற்ற நலமுள்ள உணவுகளை தேர்வுசெய்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது. அதோடு முதியோரையும் குழந்தையாகவே எண்ணி அனுசரித்து, அவர்களுக்கும் எளிமையான பாதுகாப்பான உணவுடன் பராமரிப்பதும் அதே பெற்றோர்களையே தான் சார்ந்தது. அந்த வகையில் முதியவர்களுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, அன்னையருக்கான உணவு, தாம்பத்திய நல்வாழ்வுக்கான உணவு என அந்தந்த வயதுடையவர்கள் உண்ண வேண்டிய சத்தான உணவுகளைப் பகுத்து கொடுத்திருக்கிறது இந்த நூல். மட்டுமன்றி பனி மற்றும் மழைக்காலம் என காலநிலைகள் மாறுபடும்போது உணவு முறையிலும் மாற்றம் வேண்டும் என அறிவுறுத்துவதோடு, ஒன்பது வகை அறிவை ஊட்டும் கல்வி தரும் உணவு குறித்தும், அறுசுவை உணவின் முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறது. காய்கறிகள், பழங்களின் சத்துக்களை கூறுவதோடு சிறுதானியங்களின் மகத்துவத்தையும் அவற்றின் சிலவகை செய்முறைகளின் பதத்தையும் கூறுகிறது. திரிதோட சம பொருட்கள் என்று நம் முன்னோர்களால் அழைக்கப்பட்ட ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் அந்த எட்டு பொருட்களும் அந்தக் கால தாளிப்புப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டது. சமைக்கும்போது, உணவின் திரிதோட சமநிலைத் தன்மை மாறிவிடக்கூடாது என்ற அக்கறை அதிகமாக இருந்துள்ளது. அவற்றின் முக்கியத்துவத்தையும் பயனையும் இன்றைய தலைமுறைக்கு நினைப்பூட்டுகிறது இந்த நூல். இந்த நூலை வாசிக்கும் இன்றைய தலைமுறையினரின் உணவுமுறைகள் இனி சிறப்பானதாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை.
RS. 110 More...by டாக்டர் அருண்குமார்
உணவே மருந்து என்பது எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும் மறுக்க முடியாத உண்மை. எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்ற எண்ணம் இல்லாமல் வேகமாக நகரும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத இரத்த கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவிற்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக் கொண்டிருக்கிறோம். உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் உடலுக்குத் தரும் நன்மை, தீமை என்பவை பற்றி விளக்கி ஆனந்த விகடனில் வெளியான `ஆரோக்கியம் ஒரு பிளேட்' கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஒரே வார்த்தையில் நன்மை தீமை என்று பேசாமல், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப் பொருள்களையும் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த சாதக பாதகங்களையும் இந்த நூலாசிரியர் மருத்துவர் அருண்குமார் அவர்கள் சாமானியனுக்கும் புரியும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். உங்கள் உணவுத் தட்டை ஆரோக்கியமாக மாற்றி, ஆனந்தமாக வாழ இந்த நூல் வழிகாட்டுகிறது!
RS. 250 More...by வெ.தமிழழகன்
உத்தியோகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய அவசர யுகத்தில் உணவுக்கான நேரத்தை ஒதுக்குவது என்பதே அரிதாக உள்ளது. காலநேரத்தை கணக்கில் கொள்ளாமல் வேலை ஓட்டத்தில் கிடைக்கும் உணவை உண்ணவேண்டிய அவசர நிலை இன்று. சத்து இழந்த வெறும் சக்கைகளே (பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் புட்) இன்றைய உணவுக் கலாசாரத்தில் முதன்மை வகிக்கின்றன. இதில் எங்கிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவைத் தேடிச் செல்வது..? இயற்கையின் பின்னணியில் ஆரோக்கியமான உடல்நலத்தை வழங்கக்கூடியவை, காய்&கனிகளே! ‘நவநாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் செயற்கை உணவுப் பண்டங்களை உண்டு, நம் உடலுக்கு நாமே ஊறுவிளைவித்துக் கொள்கிறோம். எந்த அளவுக்கு உண்ணுகிறோம் என்பதைவிட, என்ன உண்ணுகிறோம் என்பதுதான் முக்கியம். புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின் போன்ற சரிவிகித ஊட்டச்சத்துமிக்க உணவுவகைகள் எவை, எந்த உணவில் என்ன வகை ஊட்டச்சத்து உள்ளது, எந்த அளவுக்கு உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து உண்ணும் பழக்கத்தை நம்மிடையே உருவாக்குவதற்கான தொடக்க நிலையே இந்த நூல். இதன் அடிப்படையில் உண்ணும் உணவு இயற்கை உணவா, செயற்கை உணவா?, இயற்கை உணவுகளான காய்கறிகளிலும் கனிகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, எந்தெந்த நோய்க்கு என்ன உணவு மருந்தாகும், சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை எடுத்துக்கொள்ளலாமா, காய் மற்றும் கனி வகைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகளின் கொள்ளளவு என்ன என்பதை அட்டவணையுடன் அழகுத் தமிழில் தெளிவாகத் தொகுத்துள்ளார் வெ.தமிழழகன். அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்நோக்கும் பற்பல உடல் உபாதைகளுக்கு இயற்கை உணவின் மூலம் தீர்வைத் தந்து, நம் வாழ்க்கையை இனிமைப்படுத்தும் மருத்துவ நூல்களில் இதுவும் ஒன்று.
RS. 95 More...by எம்.மரியபெல்சின்
இயற்கை இன்றி உயிர்கள் இல்லை... இயற்கையோடு ஒன்றி வாழும் சூழல்தான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும். உழைப்பில்லாமல் முன்னேறத் துடிக்கும் மனிதனின் பேராசையினால் விவசாய நிலம் சுருங்கி உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. காற்று மாசுபடுவது மட்டுமின்றி செயற்கை உரத்தால் நிலமும் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. இயற்கையைக் காப்பது குறித்த விழிப்புஉணர்வு பரவி வந்தாலும், இன்னும் ஒருசாரார் இயற்கை பேணல் குறித்து அறியாமலே இருக்கின்றனர். இயற்கை தந்த அனைத்து செடி-கொடிகளும் மனிதனுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன என்பதை இந்த நூலைப் படித்த பிறகு உணர்ந்துகொள்ளலாம். ‘நம்மைச் சுற்றி இருக்கும் சிறிய செடிகள் முதல் பெரிய மரங்கள் வரை அனைத்துமே நமக்கு வலி நீக்கும் நிவாரணியாகவும், பிணி போக்கும் மருந்தாகவும், சுவை தரும் உணவாகவும் இருக்கின்றன' எனும் ஆச்சரியமூட்டும் தகவல்களைக் கொடுக்கிறது இந்த நூல். கண் எரிச்சலை நீக்கும் பொன்னாங்கண்ணி, வயிற்று வலியை நீக்கும் புதினா, பல், எலும்புகளை உறுதியாக்கும் கறிவேப்பிலை, கரு உண்டாக உதவும் வில்வம், காமாலையை விரட்டும் மூக்கிரட்டை, தோல் நோய்களைப் போக்கும் பூவரசு, சளியை விரட்டும் தூதுவளை... இப்படி எந்தெந்த மூலிகைகளில் என்னென்ன நோய் குணமாகும் என்பதை எளிமையாக விளக்கும் நூல் இது. இயற்கையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைப் பேணிக் காத்தால், வளமாக நலமாக வாழலாம்.
RS. 125 More...by வெ.தமிழழகன்
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் செடிகள், மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவர் போன்றது. ஆனால், நாம் நம் பக்கத்திலேயே மருத்துவரை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, கிராமப்புறங்களில் அடிக்கடி தேள்கடிச் சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. தேள்கடி விஷத்துக்கு, துளசி இலையை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும், கடித்த இடத்தில் அழுத்தித் தேய்க்கவும் தேள்விஷம் உடனே முறிந்துவிடும் என்கிறது சித்த மருத்துவம். இப்படி இயற்கையிலேயே நம் அருகிலேயே மருத்துவ முறை இருப்பதை நாம் மறந்துவிட்டோம். இப்படிப்பட்ட நம் பாரம்பர்ய மருத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த நூல். நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கைத் தாவரங்கள், மரங்கள், காய், கனி, இஞ்சி, மிளகு போன்றவைகளில் என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்றும் மருந்து செய்முறைகளையும் கூறுகிறது இந்த நூல். உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க இந்த நூல் ஆகச்சிறந்த வழிகாட்டி!
RS. 150 More...by டாக்டர் அருண்குமார்
எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்று புரிந்துகொள்ளாமல் வேகமாகச் செல்லும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். இந்த காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவுக்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக்கொண்டிருக்கிறோம். உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் அல்லது உபாதை ஏற்படுத்துமா என்பதை விளக்கி ஆனந்த விகடனில் வெளியான `ஆரோக்கியம் ஒரு பிளேட்' கட்டுரைகளின் முதல் தொகுப்பு நூல் ஏற்கெனவே வெளியாகி வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கட்டுரைகளின் இரண்டாம் தொகுப்பு நூல் இது. நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப் பொருள்களையும் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்தும், காய்கறிகளின் தன்மை, சைவ, அசைவ உணவுகளின் சாதக பாதகங்களையும் விளக்கமாகக் கூறுகிறது இந்த நூல். உணவுப் பொருள்களின் உண்மைத்தன்மையை விளக்கி ஆரோக்கிய வாழ்வுக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது!
RS. 250 More...