Cart is Empty
by அழகேசன்
சினிமா வரலாற்றில், உதவி இயக்குநர்களுக்கான ஏடுகளை தவிர்த்துப் பார்க்க முடியாது. அவர்கள், வெள்ளித் திரையின் பின்னணியில் துள்ளித் திரிந்து, உழைப்பை முதலீடாக வைத்து பிழைப்பு நடத்தி, முடிவில் வரவு-செலவு கணக்கைப் பார்க்கும்போதுதான் தெரியும் மிஞ்சியது ஏதும் இல்லை என்று. ஒரு திரைப்படத்தின் தொடக்கம் முதல் அந்தத் திரைப்படத்தின் வெற்றி விழா வரையில் நன்றி உள்ள ஜீவனாக உதவி இயக்குநர்கள் திரிந்த பிறகே உணர்வது, நன்றி மறந்த நல்லவர்கள் சூழ்ந்த உலகம் இது என்பதைத்தான். குறிப்பிட முடியாத வேலை நேரம், உத்தரவாதம் இல்லா நிலை, இயற்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், கடின உழைப்பு, கௌரவம் பார்க்க முடியாத பிழைப்பு... என, பல்வேறு சமுதாயச் சவால்களை உதவி இயக்குநர்கள் தினம் தினம் எதிர்கொண்டுதான் வருகிறார்கள். இதுபோன்ற எண்ணிலடங்கா இன்னல்களையும் இனிய முகத்துடன் எதிர்கொண்டு, கடந்த பல ஆண்டுகளாக திரை உலகில் உதவி இயக்குநராக இருந்தவர் அழகேசன். இவர், தனது நண்பர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவாறு தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்ட விதம், திரைக் களத்தில் தனது பணியின் முக்கியத்துவம், தன்னைச் சார்ந்த இயக்குநர்களுக்குத் தான் செய்த உதவிகள், திரைத் துறை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தன்னுடன் பழகிய அந்தக்கால நினைவுகளை, ஏதோ நேற்று நடந்தது போன்று காட்சியின் பசுமை மாறாவண்ணம் தன் எண்ணங்களை எளிதில் விளக்கியுள்ளார். சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்கத் தயாராகி வரும் உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்புடன் சேர்ந்த சாதுர்யம் அவசியம் என்பதை, இவரின் திரை நினைவலைகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ‘சினிமாதான் என் வாழ்க்கை!’ என்று தீர்க்கமான தீர்மானத்தோடு களம் இறங்குபவர்களுக்கு, நூலாசிரியரின் இந்த நினைவு ஏடுகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும் என்பது உறுதி.
RS. 60 More...by பா.முருகானந்தம்
அலங்கரிக்கப்படாத உண்மைகளே வரலாற்றுக்கு அழகு. சுவாரஸ்யம் என்கிற பெயரில் கற்பனைகளையும் அனுமானங்களை நிறைத்து எழுதுவது வரலாற்று வழக்கமாகிவிட்டது. அத்தகைய வழி செல்லாமல், எல்லாவிதமான சேகரிப்புகளோடும் தேடுதலோடும் ராபர்ட் கிளைவ் வாழ்ந்து வீழ்ந்த வரலாற்றை அற்புதப் பதிவாக இந்த நூலில் வழங்கி இருக்கிறார் நூல் ஆசிரியர் பா.முருகானந்தம். ஆங்கில பிரபுவாக மட்டுமே ராபர்ட் கிளைவ் குறித்து நம் பாடப் புத்தகங்கள் விளக்கி இருக்கின்றன. ராபர்ட் கிளைவின் ஆரம்பகால மெத்தனம் தொடங்கி, மனநிலைக் குழப்பம், வேலையில் விருப்பமின்மை, தற்கொலை முயற்சி, வாழ்க்கைப் போராட்டம் என அடுத்தடுத்து அவர் எதிர்கொண்ட சறுக்கல் களையும், ஒருகட்டத்தில் பிரச்னைகளையே வெற்றிக்கான சூத்திரங்களாக மாற்றிக்கொண்டு அவர் ஏறுபடிகளில் வீறுநடை போட்டதையும் யதார்த்தமான நடையில் விளக்குகிறது இந்த நூல். சென்னையில் பணியாற்றியபோது மனச்சிதைவு நோய்க்கு ஆளாகும் அளவுக்குப் பணிச்சுமை கொண்ட ராபர்ட் கிளைவ் தற்கொலைக்கு எண்ணி துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொள்ள முயற்சித்ததும், துப்பாக்கி சரிவர இயங்காததால் அவர் தப்பியதும் இதுவரைக் கேள்விப்படாத பதிவு. கடைசிக்காலத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா, கொலைக்கு ஆளானாரா என்கிற உண்மை தெரியாத அளவுக்கு அவருடைய முடிவு அமைந்து போனது பெருந்துயரம். நாடோடியாக, பற்று அற்றவராக, மனத் தெளிவு இல்லாதவராக அறிமுகம் கொண்ட ராபர்ட் கிளைவ், வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் இடம்பெறுகிற அளவுக்குத் தன்னை முன்னிறுத்திய விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. ஒரு வரலாற்று நாயகனின் பதிவாக மட்டும் அல்லாது, மனதை வைராக்கியப்படுத்தும் நம்பிக்கை வெளிச்சமாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. ஜோடனை இல்லாத வெகு யதார்த்தமான நடையில், கால இடைவெளிக்கான ஒப்பீட்டில் நம்மை ஆண்ட ஆங்கில பிரபுவின் வரலாற்றை கண்முன்னே நிறுத்தும் இந்த நூல், வாசிக்கும் அனைவரையும் நிச்சயம் சிலிர்க்க வைக்கும்.
RS. 70 More...by எஸ்.ராஜகுமாரன்
இன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது. நாட்டில் வன்முறைகள் ஆக்கிரமித்துவிட்டன. சொந்த தேசத்திலேயே அகதிகளாக நடத்தப்படுவதும், இன வாதமும், உலகம் வேடிக்கை பார்க்கும் வேதனைக் காட்சிகளும் ஒவ்வொரு நாளும் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் மருந்து தடவும் விதமாக வாழ்ந்து மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாகச் சொல்கிறது இந்த நூல். இரண்டு ஆண்டுகளே ஆட்சியில் இருந்தாலும் இன்றளவும் போற்றக்கூடிய ஓமந்தூராரின் நிர்வாகத் திறமை, ஜமீன்தாரி ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, மதுவிலக்கு, இந்துசமய அறநிலையச் சட்டங்களையும், வேளாண் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற பல நலத்திட்ட சாதனைகளையும் நிகழ்த்தி விட்டு சென்றிருப்பதைப் படிக்கும்போது அவரது உன்னதமான அரசியல்வாதியின் அகமும் முகமும் ஆழ்மனதில் தெரிகிறது. நூலைப் படிக்கப் படிக்க விறுவிறுப்பும் ஆவலும் மேலிடுகிறது. ஓமந்தூராரின் இளமைப் பருவம் தொடங்கி அவருடைய ஒரே மகனான சுந்தரம் குருகுலப் பள்ளியில் படிக்கும்போது இறந்துபோகும் சம்பவம், மாநாட்டுக்கு கொடிக் கம்பம் நடக்கூடாது என்கிறபோது உயரமான பனைமரங்களில் தேசியக் கொடிகளைக் கட்டி பறக்க விட்ட நிகழ்வு, முதலமைச்சராக இருந்தபோது அவருடைய அன்றாட அலுவல்கள் என்று அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது எஸ்.ராஜகுமாரனின் இயல்பான எழுத்து. ஓமந்தூராரின் வாழ்க்கை வரலாற்றை, கள ஆய்வோடு சுவைபட எழுதப்பட்டுள்ள இந்த நூல், அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் வாசகர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நூல்.
RS. 60 More...by அமுதவன்
சுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன். சுஜாதா ஆரம்ப நாட்களில் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது முதல் இறுதி வரை அவருடன் நெருங்கிப் பழகியதில் இருந்து தான் கண்ட சுஜாதாவை பிரதிபலித்து இருக்கிறார். மேடைப் பேச்சுக்குக் கூச்சப்பட்டது, இருந்தாலும் மேடைப் பேச்சில் தனக்கே உரிய கிண்டலைப் புகுத்தியது, ஏதோ கற்பனையில் உதித்ததை மாத்திரமே எழுதி விடாமல், க்ரைம் நாவலுக்காக மெனக்கெட்டு விஷயங்களைச் சேகரித்து அதைப் பாந்தமாகப் பொருந்தும் விதத்தில் புகுத்துவது, உதாரணமாக புல்லட் காயத்தில் மேல் தோல் புல்லட் சூட்டில் பொசுங்கி இருப்பது போன்ற நுணுக்கமான விஷயங்கள் சுஜாதாவிடம் இருந்ததை நூல் ஆசிரியர் தன் பார்வையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எவ்வாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார், அவர்களுக்கு உதவிபுரிந்தார் என்பதை எழுதியுள்ளார். அது உண்மையாகவே ஒரு பொக்கிஷமான குணம்தான். தன்னுடைய ஆற்றலில் அளப்பரிய நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் அந்த குணம் வாய்க்கும். அது சுஜாதாவுக்கு இருந்திருக்கிறது. சினிமாவில் சுஜாதா ஈடுபட்டதைப் பற்றி தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், ஒரு படத்தில் அவர் நடித்தது, அவரை நடிக்க வைக்க இவர்கள் அவரிடம் சொல்லாமலேயே கூட்டி வந்தது; ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யச் சொல்லி அவர் மேல் நம்பிக்கை வைத்து ஒரு தயாரிப்பாளர் அவரை வற்புறுத்தியது ஆகியவை வாசகர்கள் அறியாதது. இந்தப் புது விஷயங்கள் வாசகர்களுக்கு விருந்து! சுஜாதாவின் எழுத்துகளை மட்டுமே படித்த வாசகர்களுக்கு எழுத்துகளையும் தாண்டி இப்படிப்பட்ட அவருடைய வாழ்க்கை சம்பவங்கள் சுவையாக இருக்கும் என்பதும் அவருடைய மென்மையை உணர்வார்கள் என்பதும் நிச்சயம்.
RS. 63 More...by அ.கணேசன்
இந்தியாவை ஆட்சி செய்த முற்கால அரசர்களில் சிறந்தவர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின், தேசத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர் பேரரசர் ஹர்ஷர். ஹர்ஷரின் சாதனைகளை மட்டுமல்ல பண்டைய இந்தியர்களின் திறமைகளையும், கலைகளையும் இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் அ.கணேசன். ஹர்ஷர் போரில், நிர்வாகத்தில் மட்டும் சிறந்தவர் அல்ல கலைகளிலும் சிறந்தவர். கலைகளையும், இலக்கியத்தையும் மக்களுக்காகவே அவர் படைத்தார். தான் இயற்றிய நாகானந்தா நாடகத்தில் ஹர்ஷர் கீழ்க்காணும் வரத்தைத் தேவதையிடம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறார். ‘மேகங்கள், குறித்த காலத்தே மழைபொழியட்டும். மக்கள் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து பச்சை ஆடையை நிலத்துக்கு அணிவிக்கட்டும். எல்லா மக்களும் நற்செயல்களைச் செய்து குவிக்கட்டும். எல்லா அழிவிலிருந்தும் நாடு விடுபடட்டும். மக்கள் பொறாமையற்ற உள்ளங்களுடன் களிக்கட்டும். உறவினர், நண்பர்களால் இடையூறு அற்ற இன்பதைச் சுவைக்கட்டும்’. அதனால்தான் அவர் அரசர்களில் சிறந்தவராக இருந்தார்! கங்கை நதியைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினார். அரசாங்கப் படகுகளும், தனியார்ப் படகுகளும் அதிகமாகக் கங்கையில் காணப்பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஹர்ஷரின் ஆட்சி வலபி, ஒடிசாவின் சில பகுதிகள் வரை நீடித்தது. அரசாங்க, வணிக, போர்த் துறைகள், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்தன. ஹர்ஷப் பேரரசில் யானைப் படை முக்கிய நிலையில் இருந்தது. ஹர்ஷரின் விருப்பமான யானைகள் போர்க்களத்தில் பல பணிகளுக்கு உதவின என்பதை பாணர் விவரிக்கிறார். எதிரிகளின் கூடாரங்களை முட்டிக் குழப்பம் விளைவிக்கவும், தந்தத்தால் பகைவர்களை நசுக்கவும், வெறி பிடித்து ஓடிப் பகைவர்களைக் கொல்லவும் யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி எண்ணற்றத் தகவல்களை விறுவிறுப்பான நடையில் ஆதாரங்களுடன் விளக்கிச் சரித்திரத்தை நம் கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் நூல் ஆசிரியர்!
RS. 98 More...by பா.முருகானந்தம்
‘அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும். அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்பார்கள். அளவுக்கு அதிகமான அதிகாரக் குவியல்தான் அத்தனை அழிவுக்கும் காரணம். செல்வாக்கும் அரசியல் சக்தியும் பின்னால் இருக்கும்போது பெரிய ஆட்களும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர், அதைத் தட்டிக் கேட்க சாதாரண மக்கள் அஞ்சுகின்றனர். அசாதாரண மனிதர்கள்தான் அச்சம் விடுத்து அதிகாரத்தைக் கேள்வி கேட்பார்கள். அப்படி ஒருவர்தான் ஜூலியன் அசாஞ்சே! ஜூலியன் அசாஞ்சே விடலைப் பருவத்திலிருந்தபோது கணினியின் பால் ஈர்க்கப்பட்டு அதுவே கதி என்று கிடந்தார். புரொக்ராம்களை உடைத்து அதன் உள்ளே நுழைவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல். நாளாவட்டத்தில் ஹேங்கிங் எனப்படும் அடுத்தவர் கணினியில் நுழைந்து அங்கிருக்கும் செய்திகளை அவருக்கே தெரியாமல் பார்க்கத் தொடங்கினார். பின்னர் உலகெங்கிலும் உள்ள அரசு, ராணுவக் கணினிகளிலும் நுழைந்து ரகசிய விஷயங்களைத் தெரிந்துகொண்டார். பின்னர் விக்கிலீக்ஸ் என்னும் இணையத்தைச் சொந்தமாக ஆரம்பித்து அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய அத்துமீறல்களை அம்பலப்படுத்தினார். இதைப் போன்ற பல நாட்டு ‘அரசு ரகசியங்கள்’ எனப்பட்ட ஆனால் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ‘மறைக்கப்பட்ட’ விஷயங்களை விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். கேவலத்தை வெளியே சொன்னால் கேவலத்தை நடத்தியவர்கள் ஒப்புக்கொள்வார்களா? அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பார்களா? இதுதான் அவர் வாழ்விலும் நடந்தது. சிக்கலில் மாட்டிக்கொண்டார். வழக்குகள் தொடரப்பட்டன. அதிகாரத்தைத் கேள்வி கேட்டவரின் அஞ்சாத வரலாறு இது!
RS. 53 More...by செ.அருள்செல்வன்
உதிரி உதிரியான தகவல்களால் நிரம்பியதுதான் வரலாறு. எந்த ஒரு பெரிய செயலுக்கு முன்பும் கவனத்தில் கொள்ளப்படாத ஒரு சிறிய செயல் நடந்து முடிந்திருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு கூற்றுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அறிஞர் அண்ணாதுரையை அனைவரும் அறிவர். ஆனால் அண்ணாதுரையை அனைவரும் அறியும்படியான அண்ணாவாக்கிய பி.பாலசுப்ரமணியத்தை எத்தனை பேருக்குத் தெரியும்? நீதிக்கட்சியோடும் திராவிட இயக்கத்தோடும் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டும்தான் ‘அண்ணாவின் அரிச்சுவடி’ பி.பா. என்பது தெரியும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றல்மிக்க பி.பா., கூட்டங்களில் தான் பேசும் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க நண்பர் ஒருவரின் மூலமாக அறிமுகமாகியிருந்த அண்ணாவை அழைத்துச் சென்றார். இரு மொழிப் புலமையும் பெற்றிருந்த அண்ணா, பி.பா&வின் பேச்சை அழகாகத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுவார். இதுதான் பின்னாளில் அண்ணா மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக மாற உதவியது. அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சுக்குத் தூண்டுகோலாக இருந்தவர் பி.பா. என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பி.பா&வின் வாழ்க்கை வரலாற்றோடு நீதிக்கட்சி வரலாறு, திராவிட இயக்க வரலாறு என சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக அரசியல் வரலாற்றைத் தகுந்த சான்றுகளோடு விவரித்துச் சொல்கிறார் நூல் ஆசிரியர் செ.அருள்செல்வன். பி.பா. என்ற ஒரு மனிதரைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் அத்தனை செய்திகளையும் ஒன்றுவிடாமல் திரட்டி தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அரசியலை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் முக்கியமான ஓர் ஆவணம்.
RS. 84 More...by எம்.எக்ஸ்.மிராண்டா, எம்.ஏ., பி.டி.,
‘போரில் உறுதி; தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ - இதுவே ஒரு மாபெரும் வரலாற்றின் தாரக மந்திரம்; சர்ச்சில் என்ற மாமனிதர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. உழைப்பு, வீரம், எழுச்சி, திறமை, எதற்கும் அஞ்சாத போர்க் குணம்... இதுதான் வின்ஸ்டன் சர்ச்சில். காட்டில் கால்நடையாக அலைவதைவிட யானையின் மீது அமர்ந்து போவது எளிது. யானை, துதிக்கையால் ஊசியை எடுக்கும். மரத்தை வீழ்த்தும். அதன் முதுகின் மேலிருந்து எல்லாவற்றையும் காணலாம். இதைத்தான் சர்ச்சில் செய்தார். பத்திரிகையாளனாகத் தன் வாழ்வைத் தொடக்கிய சர்ச்சில், ராணுவ வீரனாக உயர்ந்து தளபதியாக உருவெடுத்து நிதி அமைச்சராகி, இரண்டு முறை இங்கிலாந்துப் பேரரசின் பிரதம மந்திரியாக ஜொலித்தவர். ‘செய்தியை எழுதிக்கொண்டிருப்பதைவிட, ஒரு செய்தியைப் படைப்பது சிறந்தது’ என்று அவர் தனது முதல் நூலில் ஒரு கருத்தை வெளியிட்டதற்கு ஏற்ப அவருடைய அமைதியற்ற உள்ளம் போரில் ஈடுபட விரும்பியது. இருபத்துமூன்று வயதில் போர் அனுபவங்களும், அரசியல் அறிவும், உலக மக்களைப்பற்றிய அறிவும் பெற்றிருந்த வின்ஸ்டன், சாவ்ரோலா என்ற புதினத்தை எழுதினார். அதன் கதாநாயகன் சாவ்ரோலா அடைந்த வெற்றிகளைப் பிற்காலத்தில் சர்ச்சிலும் அடைந்தார் என்பதுதான் வியப்பு. வின்ஸ்டன் சர்ச்சிலின் அகராதியில் ‘செயல்’ என்றால் ‘போர்’ என்று பொருள். அவர் போர் அனுபவங்களைப்பற்றிப் பதினான்கு நூல்களை எழுதியிருக்கிறார். அவர் ஆற்றிய போர் உரைகள் மட்டும் 20 நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எட்டுப் படைகளில் அவர் பணிபுரிந்திருக்கிறார். உலகப்போர்களுக்கு முன்னர் அவர் நான்கு படையெடுப்புகளில் பங்கு பெற்றிருக்கிறார். போர் நிருபராகப் பெருந்தொண்டு புரிந்துள்ளார். இரு உலகப்போர்களையும் இயக்கி வெற்றி குவித்த பெருமை அவருடையது. வெற்றி ஒன்றையே சுவைக்க விரும்பிய அஞ்சாநெஞ்சனின் அற்புத வரலாற்றை தமிழ் வாசகர்களுக்காக முழுவதுமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர் எம்.எக்ஸ்.மிராண்டா! வின்ஸ்டன் சர்ச்சிலின் வாழ்க்கைச் சரித்திரம் படிக்கப் படிக்கப் சுவைக்கும். எத்தனை போர்கள்.. எத்தனை அரசியல்கள்.. எத்தனை துரோகங்கள். சர்ச்சிலின் சரித்திரத்திலிருந்து பாடம் கற்போம்!
RS. 116 More...by ம.இராசசேகர தங்கமணி, எம்.ஏ., பி.டி.,
வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோழர் வரலாறு பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகின்றன. தமிழ் மொழியிலுள்ள கலம்பகம், உலா, பரணி, கோவை, தல புராணங்கள், காப்பியம் போன்ற நூல்கள் வரலாற்றுக்குப் பேருதவி புரிகின்றன. தமிழகத்தில் இலக்கிய, இலக்கண நூல்கள் பெருகியது பிற்காலச் சோழர் காலத்தில்தான். சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி வாழ்ந்ததும், பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரு நூல் தோன்றியதும், நாயன்மார்கள் ஒன்பதாம் திருமுறையைச் அருளிச்செய்ததும், திருவிசைப்பா முதலியவற்றை அருளிச் செய்தோர் வாழ்ந்ததும் சோழர் காலத்தில்தான். இலக்கியத்தில் சோழர் வரலாறு பெரிய அளவில் கூறப்பட்டாலும், அவை உண்மைதானா என்பது இலக்கியத்தைவிட கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அழியாப் புகழ்பெற்ற கோயில்களுமே ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. சோழர்கள் கோலோச்சிய காலத்தை இவை விளக்குகின்றன. தஞ்சைத் தரணியைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்த மாமன்னர் இராஜராஜசோழனின் புகழுக்கும் புத்திகூர்மைக்கும் தஞ்சைப் பெரியகோயிலே சாட்சி. இராஜராஜசோழனின் மைந்தன் இராஜேந்திர சோழனும், இராஜராஜனின் தீரத்துக்கு ஒப்பானவன். வட திசை நாடுகளை வென்று கங்கை நீரைக் கொணர்ந்து ‘கங்கை கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரை கொண்டவன். தமிழரின் வாழ்வியலில் வீரம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. சோழப் பேரரசின் சிறப்புகளையும் வீரத்தையும் தக்க ஆதாரங்களுடன் இந்த நூலில் ம.இராசசேகர தங்கமணி தந்திருக்கிறார். சோழர்களின் காலத்தை வரிசைப்படி சான்றுகளுடன் அளித்துள்ளார். வியத்தகு அரிய செய்திகளுடன் உருவாகியுள்ள இராஜேந்திர சோழனின் இந்த வரலாற்று நூல் அனைவரையும் கவரும். வரலாற்றில் வாழ்வோம், வாருங்கள்!
RS. 147 More...by டி.கே.இரவீந்திரன்
மைசூர் புலி என்றும் மாவீரன் எனவும் வரலாற்றில் வீரமாக நிலைத்த பெயர், திப்பு சுல்தான். இந்திய தேசம், வீரத்தின் சின்னமாக இன்னமும் திகழ்ந்து வருவதற்கு திப்பு சுல்தான் போன்ற மாவீரர்கள் அன்னிய ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்ததே காரணம். இந்தியாவின் இயற்கை வளங்களான அகில், சந்தனம், மிளகு, ஏலம், லவங்கம் ஆகியவற்றின் மீது தீராத மோகம் கொண்ட ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கான கடல் மார்க்கத்தைக் கண்டறிந்தனர். போர்ச்சுகல் நாட்டின் மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவுக்குப் புதிய கடல் வழியைக் கண்டறிந்தான். கேரளத்தில் உள்ள கோழிக்கோடு எனப்படும் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கி வியாபாரம் என்ற பெயரில் தனது கடையை விரித்தான். டச்சுக்காரர்களும், ஃபிரெஞ்சுக்காரர்களும், இவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் உள்ளே நுழைந்தார்கள். ஆங்கிலேயர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் பெயரால் இங்கே அரசியல் நடத்தினர். நாடு பிடிக்கும் திட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசர்களை தங்களது சதித் திட்டத்தால் வெல்ல முயன்றனர். சில அரசர்கள் ஆங்கிலேயர் பக்கம் சாய்ந்தனர். சில அரசுகள் அந்நியரை எதிர்த்துப் போரிட்டன. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என தென்னிந்தியாவில் பெரும் பகுதிகளைப் போரிட்டு வென்ற ஹைதர் அலியையும், அவரது மகன் திப்பு சுல்தானையும் வெல்ல ஆங்கிலேயர்கள் செய்த சதிகள் எத்தனை, எத்தனை? மாவீரன் திப்புசுல்தான் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்ட வீரம் எத்தகையது? இந்த நூலில் விவரிக்கிறார் டி.கே.இரவீந்திரன். திப்பு சுல்தானுக்கு ‘நசீப் உத்தௌலா’ என்ற ஒரு பட்டம் இருக்கிறது. நசீப் உத்தௌலா என்றால் நாட்டின் அதிர்ஷ்டம் என்று பொருள். ஆம், தாய்த் திருநாட்டின் அதிர்ஷ்டமாகத் திகழ்ந்த திப்பு சுல்தானின் வீரத்தையும், தீரத்தையும் இளைய சமுதாயத்தினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நூல். வாசித்துப் பாருங்கள்! திப்புவின் தீரத்தை உணர்வீர்கள்!
RS. 84 More...