Cart is Empty
by சு.வெங்கடேசன்
இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே! ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம்? எத்தனை சோகம்? எத்தனை நெகிழ்ச்சி? இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது? அந்த மக்களின் வாழ்வியல் என்ன? இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன? கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின? ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்!
RS. 364 More...by விகடன் பிரசுரம்
பத்திரிக்கை உலகில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது ஆனந்த விகடன் என்றால், அதற்கு முழுமுதல் காரணம் வாசகர்கள்தான். ஆனந்த விகடனின் இதயத் துடிப்பான வாசகர்களுக்கு எனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பகுதிதான் ‘சொல்வனம்’. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களின் தரமான கவிதைகளை வெளியிட்டு வருகிறோம். தற்போது அந்தப் பகுதியில் இடம்பெற்ற அனைத்து கவிதைகளையும் தொகுத்து புத்தகமாக வடிவமைத்திருக்கிறோம். இதில் வெறும் கவிதைகள் மட்டுமல்ல, கலைநயமிக்க ஓவியங்களும், உணர்ச்சிமிகு புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இவை கவிதை தரும் வாசிப்பு இன்பத்துக்கு நிகரான காட்சிப் பரவசத்தையும் தரும். ஆனந்த விகடனில் ‘சொல்வனம்’ பகுதியில் பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் வாசகனுடைய வலி, வேதனை, சந்தோஷம், துக்கம் என ஏதேனும் ஓர் உணர்வு வசீகரிப்பதே இந்தக் கவிதைகளின் சிறப்பு. எல்லா வாசகர்களும் கவிஞர்களாக இருக்க முடியாது. ஆனாலும், அவர்களுடைய கவித்துவத்தை வெளிக்கொணர்ந்து, அங்கீகரித்து கவிஞர்களாகத் தூக்கிப்பிடிப்பதில் பெருமைகொள்கிறது விகடன். இலக்கிய மரபுகளை உடைத்து, யதார்த்த மனிதர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்புதான் தற்போது உங்கள் கைகளில் கவி வனமாக விரிந்து கிடக்கிறது. கவித்துவத்தின் மகத்துவத்தை உணர வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனெனில், இவை கற்பனைக் கவிதைகள் அல்ல; சாமானிய மக்களின் ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டம்!
RS. 347 More...by சு.வெங்கடேசன்
‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆதிச்சநல்லூர் மீள் அகழாய்வைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பெரும் நாகரீகம் சிறுகரண்டியால் மண்ணை துழாவுவதன் வழியே மேலேழுந்து கொண்டிருந்தது. படிந்துள்ள மண் அடுக்குகளை வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்ல? காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.’’ இயற்கையைப் பற்றி இப்படியாக ஒரு சிந்தனை. இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் சு.வெங்கடேசன். இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாவலாசிரியர். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் என்ற வரலாற்று நாவலுக்கு 2011-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றவர். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது ‘ஓட்டை இல்லாத புல்லாங்குழல்’ என்ற கவிதை நூலை எழுதியுள்ளார். இவைதவிர திசையெல்லாம் சூரியன், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் (கவிதை), கலாசாரத்தின் அரசியல், மனிதர்கள், நாடுகள், உலகங்கள், சமயம் கடந்த தமிழ் போன்ற நூல்களையும் படைத்துள்ளார். சிறந்த சொற்பொழிவாளர். இடதுசாரி சிந்தனையுள்ள இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். களஆய்வு மேற்கொண்டு காவல்கோட்டம் நாவலைப் படைத்த இவரின் எழுத்துக்களில் வெளிப்படும் சொல்லாடல்கள் தரம் மிகுந்தவை. இவர் சமகாலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த அலங்காரப்ரியர்கள். இதில் பல்வேறு தகவல்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என தெரிந்துகொள்வதற்கு ஏராளமான தகவல்கள் நிரம்பிக்கிடக்கின்றன. எழுத்தால் நிரப்பப்பட்ட சொற்சித்திரத்தை ரசிக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 63 More...by ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்! வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கிற ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன... அதாவது பிரசுரம் ஆன அழகிலேயே மீண்டும் வாசகர்களுக்குத் தரும் வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல். 1960-களில் ஆனந்த விகடனின் அழகிய பக்கங்களில் ஜெயகாந்தனின் முத்திரை எழுத்துகள் தொடர்ந்து பதிவாகிவந்தன. அது தமிழ் இலக்கிய உலகில் புதிய வசந்த காலமாகப் பரவியது. அந்தக் காலகட்டத்தைச் சொல்லிப் புரியவைப்பதைவிடக் காட்சிப்படுத்தி உணர்த்தத் திட்டமிட்டார்கள் டாக்டர் ராம் - வனிதா தம்பதியர். ஜெயகாந்தனின் படைப்புகள் ஆனந்த விகடனில் வெளியான அதே வடிவத்திலேயே, அதே பக்க வடிவமைப்பிலேயே புத்தகமாக்கி அதனை வெளியிடும் வாய்ப்பை மீண்டும் ‘விகடன்’ பிரசுரத்துக்கே வழங்கியுள்ளார்கள். அரை நூற்றாண்டு இடைவெளியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கது. வாசகர்களை, மீட்டெடுக்க முடியாத பழைய காலத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்லும் அனுபவத்தை, ‘ஜெயகாந்தனின் கதைகள் - ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்’ - என்ற இந்தப் பொக்கிஷம் நிச்சயம் வழங்கும்.
RS. 252 More...by தெய்வீகன்
மனிதன் பிறக்கும்போது தாயின் ஸ்பரிசம்தான் முதலில் கிடைக்கிறது. அடுத்தது தாய் மண்ணின் ஸ்பரிசம். ஒருவர் எந்த நிலைக்குச் சென்றாலும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சொந்த மண்ணின் மீதான பாசம் பட்டுப்போகாது. ஆனால் தங்கள் சொந்த மண்ணை விட்டு இன்னோர் நாட்டில் அகதிகளாக வாழ்வது என்பது பெரும்துயரம். உள்நாட்டுப் போர், இனவாதப் போர் போன்ற பல்வேறு காரணங்களால் சொந்த நாட்டில், தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் நாடு அவர்களை ‘அகதி' என்று அடையாளப்படுத்தி தனி முகாம்களில் அடைத்துவிடுகிறது. அகதி முகாமில் இருப்பது என்பது வேலிக்குள் வாழ்வது போன்றது. வேலி தாண்டி வேறெங்கும் சுதந்திரமாகச் சென்றுவர முடியாது. அப்படிப்பட்ட ஓர் அகதி முகாமில் வாழ்பவர்களைப் பற்றி விகடன் இணைய தளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அகதி முகாமில் வாழ்பவர்களின் மன நிலை, அவர்கள் எவ்வாறு அகதிகளானார்கள், தனிமையின் தவிப்புகள், தங்கள் சொந்த நாட்டின் நினைவுகளை ஏந்தி வருந்தும் நிலை.. என அகதிகளின் அத்தனை உணர்வுகளையும் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். அகதி முகாமில் பணியில் இருந்ததால் இப்படி அகதிகளின் அத்தனை உணர்வுகளையும் அவரால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. அகதிகளின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் அறிய முகாமுக்குள் செல்லுங்கள்.
RS. 150 More...by கொத்தமங்கலம் சுப்பு
பொதுவாக திறமையான கலைஞர்கள் தன்மானமும் சுயமரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பணம், புகழைவிட தான் கற்றறிந்த கலைக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு நாகஸ்வரக் கலைஞன்தான் இந்தப் புதினத்தின் நாயகன். நாகஸ்வரத்துக்கும் நாட்டியத்துக்கும் முதலில் போட்டி ஏற்பட்டு பின்னர் இரண்டும் ஒன்றாகக் கலப்பதே இந்தப் புதினத்தின் மையம். சிக்கல் சண்முக சுந்தரம் எனும் நாகஸ்வரக் கலைஞனின் வாழ்வில் ஏற்படும் புகழ், காதல், பிரச்னைகள், ஏற்படும் இடையூறுகள் இவற்றை சுவாரஸ்யமான புதினமாக வடித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு. ஆனந்த விகடனில் அவர் பணியாற்றியபோது 1956 முதல் 1958-ம் ஆண்டு வரை `கலைமணி' எனும் புனைபெயரில் `தில்லானா மோகனாம்பாள்' தொடரை எழுதினார். இத்தொடர் ஓவியர் கோபுலு வரைந்த அழகிய ஓவியங்களுடன் வெளிவந்தது. பின்னர் இது திரைப்படமாகவும் வெளிவந்து தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் தனித்த இடம்பிடித்தது. மோகனாம்பாள் எப்படி தில்லானா மோகனாம்பாள் ஆனாள் என்பதை அறிந்துகொள்ள வாருங்கள்.
RS. 700 More...by அகரமுதல்வன்
ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். இலங்கையில் அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் தொடங்கி இறுதிப் போர் தொடங்கும் வரையிலான காலகட்டம்தான் இந்தக் கதையின் களம். ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து அந்த காலகட்டத்தில் நடந்ததை, பல பாத்திரங்களுடன் பயணித்தபடியே செல்கிறது இந்தப் புனைவு. உண்மையும் கற்பனையும் கலந்து, போராளிகளின் வாழ்க்கையையும் அரசின் தந்திரங்களையும் அந்தச் சிறுவன்வழியே கதை நகர்கிறது. ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த `கடவுள் பிசாசு நிலம்' தொடரின் தொகுப்பு நூல் இது. இறுதிப் போர் தொடங்கியபோது ஈழத் தமிழர்களின் மனநிலை, போராளிகளின் முடிவு, அரசு செய்த சூழ்ச்சி என அத்தனையையும் பல கதாபாத்திரங்கள் வழியே சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். கடவுளும் பிசாசும் வாழும் நிலத்துக்குள் வாருங்கள்!
RS. 315 More...by பிரபஞ்சன்
நாடாளும் ராஜாக்களின் வீரதீரங்களையும், காதலையும், கம்பீரத்தையும், ராஜ்யங்களின் வளங்களையும், வரைபடங்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே வரலாற்றுப் புனைவாக சொல்லப்பட்டு வந்த காலத்தில், வரலாற்று நாவலுக்கான கோட்பாட்டை வரையறுத்தது பிரபஞ்சனின் எழுத்துகள். வரலாற்றையும், புனைவையும் கலந்து எப்படி புதிய ஒரு வரலாற்றை சுவைபடக் கூறுவது என்பது பிரபஞ்சனுக்கு கைவந்த கலை. வானம் வசப்படும், மானுடம் வெல்லும் போன்ற நாவல்கள் இவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். ஏக இந்தியாவை ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி அடிமைப்படுத்தி ஆண்டபோது, சின்னஞ்சிறு பிரதேசங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், சந்திரநாகூர் ஆகியவற்றை பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தன்வசம் வைத்து ஆட்சி செலுத்தியது. அடிமைப்படுத்தி ஆள்வதில், ஆங்கிலேயர்களை மிஞ்சக்கூடியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மீட்க பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கியது. பிரெஞ்சுக்காரர்களை விரட்ட விடுதலை இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. தன்னலமற்ற தியாகிகள் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். சிலர் தலைமறைவு வாழ்க்கை நடத்தி விடுதலை வேள்வியை வளர்த்தார்கள். இவ்வாறாக புதுச்சேரி மண் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பல்வேறு தியாகங்களை சுமந்தது. புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட வ.சுப்பையா உள்ளிட்ட தியாகசீலர்களின் அறவாழ்வை இந்த நாவலில் எழுதி, இப்படிப் பட்ட மாமனிதர்களின் தியாகங்களை நமக்கு நினைவூட்டுகிறார் பிரபஞ்சன். இந்நாவல் தொடராக வெளிவந்து பின்னர் நூலாக வெளியானது. இந்நாவலின் தேவை கருதி, விகடன் பிரசுரம் இதனை மறுபதிப்பு செய்வதில் பெருமை கொள்கிறது. வாருங்கள் வாசிக்கத் தொடங்குவோம்.
RS. 150 More...by டி.கே.இரவீந்திரன்
`சுங்கம் தவிர்த்த சோழன்' என வரலாறு சொல்லும் முதலாம் குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய ராஜேந்திரனாக இருந்து அநபாயச் சோழனாக ஆனவன். சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழ மரபைத் தூக்கி நிறுத்தியவன் இவன்தான். இந்தக் குலோத்துங்கச் சோழனின் இளமைக் கால சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று நாவல் இது. மாமன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் ஏற்பட்ட சோழ - சாளுக்கிய திருமண உறவின் வழிவந்த சாளுக்கிய ராஜேந்திரன், வேங்கி நாட்டை அரசாட்சி செய்து கொண்டிருக்கும்போது அங்கு சாளுக்கியர்கள் ஏற்படுத்திய அரசியல் கலகங்களால் அரசாளும் உரிமையை இழக்கிறான். பின்னர் கங்கைகொண்ட சோழபுரம் வரும் சாளுக்கிய ராஜேந்திரன், தன் மாமன் இரண்டாம் ராஜேந்திர சோழனால் `அநபாயச் சோழன்' என்ற பெயர் பெறுகிறான். தன் மருமகன் அநபாயனுக்காக இரண்டாம் ராஜேந்திர சோழனும் அவரின் மகனும் வேங்கி நாட்டின் மீது போர் தொடுக்கின்றனர். இதை வரலாறு `கொப்பம் போர்' என்கிறது. சாளுக்கியர்களை விரட்டிவிட்டு வேங்கி நாடு மீட்கப்படுகிறது. ஆனாலும் வேங்கி நாட்டை ஆளும் உரிமையை அநபாயன் பெறவில்லை. யாருக்கு அரசுரிமை கிடைக்கிறது, அநபாயச் சோழன் மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஏன் அழைத்துவரப்படுகிறான் என்பதை விறுவிறுப்பான மொழிநடையில் சுவை குழைத்துச் சொல்லி யிருக்கிறார் நூலாசிரியர். வரலாற்று மாந்தர்களும் நூலாசிரியரின் கற்பனை மனிதர்களும் கைகோத்து நடந்து, வாசிப்பவர்களை வரலாற்றுக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றனர். இனி, இருமுடிச் சோழனோடு உலா வாருங்கள்!
RS. 269 More...by விளாதீமிர் கொரலேன்கோ
ரஷ்ய எழுத்தாளர் கொரலேன்கோ எழுதிய பிரசித்தி பெற்ற குறுநாவல்களில் முக்கியமானது ‘கண் தெரியாத இசைஞன்’. 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஒரு வருடத்தில் எழுதி முடித்த இந்தக் கதை பதினைந்து முறை பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. வெளிவந்தபோதெல்லாம் கொரலேன்கோ சிறு திருத்தங்கள் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியைத் தேடும் வேட்கை பார்வையற்றவர்களிடம் இருப்பதை வலியுறுத்துவதே இந்தக் கதை என்று கொரலேன்கோ கூறுகிறார். இது முற்றிலும் கற்பனைக் கதையன்று. தாம் சந்தித்த பார்வையற்ற திறமைசாலிகளை முன்வைத்து இதைப் பட்டை தீட்டியுள்ளார். மனித மகிழ்ச்சியும், அதனை அடையக்கூடிய வழிகளும் இந்தக் கதையில் அலசப்படுகின்றன. கதாநாயகனான கண் தெரியாத இசைஞன், பியோத்தரைச் சுற்றி நடமாடக்கூடிய, நம்பிக்கையளிக்கக்கூடிய அவனது தாய், காதலி, மாமா ஆகியோர் சமூகத்தில் அவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டங்கள். அன்பைப் பொழியும் ஆற்றலைக்கொண்ட இந்தக் கதை மனித சமுதாயத்தின் உயர்ந்த தன்மையை உணர்த்தக் கூடியது. ரஷ்ய மொழியில் படித்தவர்கள் எப்படி ரசித்து, லயித்து இந்தக் கதையைச் சுவைத்தார்களோ... அந்தச் சுவை சிறிதும் கெடாமல் மொழிபெயர்ப்பாளர் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். படிக்கும்போது, கதைக் களம், இயற்கை அழகு வர்ணிப்பு, அன்பு, காதல், பிரிவு, சாதனை ஆகியவற்றில் பல்வேறு பரிமாணங்களில் ரஷ்ய இலக்கியம் மிளிர்வதை உணர்வீர்கள். பக்கத்தைப் புரட்டுங்கள். கண் தெரியாத இசைஞன்... உங்கள் அக விழியைத் திறந்து ஊடுருபவன் என்பதை அறிவீர்கள்.
RS. 81 More...