Cart is Empty
by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.நடராஜ சுப்பிரமணியன்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகளோடு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.
RS. 245 More...by டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.
வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்பிடிக்க விரும்புபவர்களுக்கு அதை அடைய உதவும் வழிகளை, படிக்கும் அனுபவத்தை, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகளை ஒரு நண்பனைப் போல நின்று சுவையாக பேசியுள்ளார். படிப்பைச் சுமையாக நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாக மாற்றும் கலையை இந்த நூலில் கேலிச் சித்திரங்களுடன் கற்றுத் தருகிறார் நூல் ஆசிரியர். தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், நண்பர்கள், தன்னுடைய மேலதிகாரிகள் என்று அனைவரிடமும் இருந்தும் ஒவ்வொரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்ட இவர், அதையே வாசகர்களுக்கும் பயனுள்ள விதத்தில் எடுத்துக்கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. ‘எதிர்ப்படுகின்ற எல்லோரிடத்திலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற திரைப்பட வசனத்தைப் போல தான் கற்றுக்கொண்டதை பிறருக்கும் பயன்படும்விதத்தில் கற்றுத் தருகிறார்; கற்றுப் பயன்பெறுங்கள்.
RS. 70 More...by ராஜுமுருகன்
“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை! அதுவே செயல். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும். வாழும்போதே சிறப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்கு நம்முடைய செயல்கள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதோ... பத்திரிகையாளர், எழுத்தாளர்,- திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் போல. அவரது பயணத்தைப் போல செயல்கள் இருந்தால் அதுவே வாழ்வாகும். அதுவே பூரணத்துவம். ஆம்! ராஜுமுருகன் மேற்கொண்ட இலக்கு இல்லாத, இலக்குகளை கற்பித்த பயணம்தான், இதோ ‘ஜிப்ஸி’ என்ற பெயரில் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல். எந்த இடமும் சொந்த இடமாக இல்லாத, உயிரையும் உறவையும் தம்முடன் இணைத்து நிலம், நீர் ஆகியவற்றுடன் உறவாடி, காற்றுவழித் திரியும் நாடோடிகளைப் பற்றி நமக்கு தெரியாத- புரியாத வாழ்நிலைகளைத் தன் பயணத்தில் உணர்ந்து, அந்த உணர்வை வார்த்தைகளாக்கித் தந்துள்ளார் ராஜுமுருகன். ‘பச்சைத் தவளையைத் தின்னும் வாத்து பச்சை முட்டை போடும். தானியங்களைத் தின்னும் வாத்து பழுப்பு வண்ணத்தில் முட்டை போடும்’ & வாத்து மேய்க்கும் நாடோடிக் கூட்டத்திடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல் இது. இதுபோன்று ஏராளமான செய்திகளை, மனித மனத்தின் சொல்லாடல்களை, வரலாறுகளை தன்போக்கில் சொல்லிச் செல்லும்போது, ராஜுமுருகனும் ஜிப்ஸியாகவே உருமாறியிருக்கிறார். விகடனில் தொடராக வந்த ஜிப்ஸிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது நூல் வடிவெடுத்துள்ளது. ‘வட்டியும் முதலும்’ மூலம் சராசரி மனிதர்களின் நெகிழ்வைத் தந்த ராஜுமுருகன், ‘ஜிப்ஸி’ மூலம் நம்மை நெகிழ வைக்கிறார். காற்றுவழி மனிதர்களின் அற்புத தரிசனங்களைக் காண ஜிப்ஸியைத் தொடருங்கள்.
RS. 81 More...by டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா
யூ.பி.எஸ்.சி. மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் ஐந்தாவதாக வெளிவரும் நூல் இது. நடப்பு நிகழ்வுகளில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தகவல்களைத் தொகுத்து தந்துள்ளார்கள் டாக்டர் சங்கர சரவணன் & டாக்டர் ஆ.ராஜா. சமீபத்திய TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் ஒவ்வொரு அலகிலும் விடையோடு தரப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளின் குரூப்-I முதன்மைத் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் தரப்பட்டுள்ளது, தேர்வர்களுக்குப் பயிற்சி செய்துகொள்ள உதவியாக இருக்கும். குறிப்பிட்ட சில பகுதிகளுக்குப் பயிற்சி வினாக்களும் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வின் முதல் கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று அனைத்துக்கும் பயன்படக் கூடிய வகையில் தயாரித்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். அண்மை ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் பெரும்பாலான அலகுகளில் இடம் பெற்றுள்ளது இந்த நூலின் கூடுதல் சிறப்பம்சம். போட்டித் தேர்வில் வெல்வதற்கு இது போன்ற நூல்கள் உங்களுக்கு உற்ற துணைவனாக இருக்கும்.
RS. 347 More...by டாக்டர் சங்கர சரவணன்
குரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம், திறனறிதலும் அறிவுக்கூர்மையும் மற்றும் பொதுத் தமிழில் இலக்கணமும், இலக்கிய வரலாறும் மற்றும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட நூலாகத் தந்திருக்கிறார்கள் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் ஆ.ராஜா. இலக்கணம், இலக்கியம் அமைந்த பொதுத் தமிழ் பாடப் பயிற்சி வினாக்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பெருந்துணையாக அமையும். ஒவ்வொரு பகுதியிலும் தன்னறிவுச் சோதனை வினாக்களுடன் அவற்றுக்கு விடைகளைக் கொடுத்திருப்பதும் தேவையான இடங்களில் பயிற்சி வினாக்களைக் கொடுத்திருப்பதும் தேர்வு எழுதுவோருக்கு மிகுந்த பயன் அளிக்கும். தகவல்கள் அனைத்தும் 2015 செப்டம்பர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள்களை இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-4 தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.
RS. 350 More...by டாக்டர் சங்கர சரவணன்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். மத்திய அரசின் நிதி ஆயோக், ஜன் தன் யோஜனா, பிரதமரின் முத்ரா வங்கி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் தமிழ்நாடு தொலைநோக்கு-2023, உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015 போன்ற விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட இறுதியில் கொடுத்துள்ள, பட்டப்படிப்பு தர பொது அறிவு பயிற்சி வினாக்கள், தேர்வு எழுதுகிறவர்கள் எளிதில் நினைவுகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பாகும். விருது மற்றும் பரிசு விவரங்கள் 2015 வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் 2015 அக்டோபர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. வினா-விடைகளை தமிழ், ஆங்கிலத்தில் தந்திருப்பதோடு நூலின் இறுதியில் கலைச்சொல் அடைவும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-IIA தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.
RS. 319 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்தத் தேர்வை ஒரு காலத்தில் அதிக அளவில் எழுதுவார்கள். ஆனால் இப்போது பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இந்த தேர்வுக்கான வினாத்தாள்களின் தரமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வுப் பாடத்திட்டப்படி படித்தாலும், பொது அறிவு பாடங்களை மிகவும் நுணுக்கமாக, ஆழமாகப் படிக்க வேண்டி இருக்கிறது. தேர்வுப் பாடத்தை நூறு சதவிகிதம் படித்திருந்தாலும் தேர்வு எழுதும்போது ஒருவித பதற்றம் ஏற்பட்டு வெற்றியை கோட்டை விட்டவர்கள் ஏராளம். படித்த பாடத்தை கேள்விக்கு தகுந்தாற்போல் ஞாபகப்படுத்தி பார்ப்பது, மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது பயத்தைப் போக்கி வெற்றியை எளிதாக்கும். அதிலும் முந்தைய டி.என்.பி.எஸ்.சி வினாக்களுக்கு திரும்பத் திரும்ப விடை எழுதிப் பார்க்கும்போது, வினாக்களின் அமைப்பு, அதன் போக்குகளை நன்கு புரிந்துகொண்டு குழப்பம் இல்லாமல் விடையளிக்க பயிற்சி கிடைக்கும். அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சொல்லும் முக்கிய ரகசியம் ‘மாதிரித் தேர்வுகளை எழுதிப் பாருங்கள்’ என்பதுதான். அதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் தந்திருக்கிறோம். அதற்கான விடைகளையும் தேவையான இடங்களில் விளக்கங்களையும் கொடுத்துள்ளோம். இந்த வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி எடுக்கும்போது, தேர்வு எழுதும் நேர நிர்வாகத்தை கணித்து தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதுபோல உங்களின் தேர்வு திறத்தை நீங்களே சோதித்து, வெற்றிபெற இந்த டி.என்.பி.எஸ்.சி. ஒரிஜினல் வினாத்தாள் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பட்டப்படிப்புத் தரத்தில் பல்வேறு துறைகளில் 2014, 2015, 2016 (ஜனவரி வரை) ஆண்டுகளில் கேட்கப்பட்ட 2,350 வினாக்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன. பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!
RS. 263 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் திட்டம் மாற்றப்பட்ட பிறகு ‘பொதுத் தமிழ் வினாக்கள் மிகவும் கடினமாக இருக்கிறது, தேர்வு எழுத நேரம் போதாது’ என்று போட்டித் தேர்வர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். வினாக்களின் போக்குகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் படிக்கவும் தேர்வு எழுதும் நேரத்தை நிர்வாகம் செய்யவும் டி.என்.பி.எஸ்.சி பொதுத் தமிழ் ஒரிஜினல் வினாத்தாள்களை தொகுத்துத் தந்துள்ளோம். பொதுத் தமிழ்ப் பாடத்தை படிக்கும் முன்பும் படித்த பின்பும் இந்த வினாக்களை படித்துப் பார்க்கும்போது, பொதுத் தமிழ்ப் பாடத்தில் உங்களது திறனை நீங்களே எடைபோட்டு பார்க்க முடியும். விடைகளும் கேள்விக்கு அருகிலேயே தரப்பட்டுள்ளதால் உடனுக்குடன் விடைகளை சரிபார்த்துக்கொள்ள முடியும். தேவையான இடங்களில் விடைகளுக்குத் தேவையான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் 2013, 2014, 2015, 2016 (பிப்ரவரி வரை) டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தமிழ் வினாத்தாள்களை தந்துள்ளோம். இதில் மொத்தம் 1,060 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வர்கள் பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!
RS. 105 More...by டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.
ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம், இயற்கை, ஒழுக்கம் என பல கண்ணோட்டங்களின் மீது பயணித்த ஆசிரியரின் கட்டுரைகள் உரையாடல்கள் மூலமாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை அள்ளித் தருகிறது. கல்வி, வேலை, திருமணம், எதிர்காலம் என வாழ்க்கையின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. தேர்வின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு தடுமாற்றங்களை எதிர்கொள்ளவும் தைரியமும் மன உறுதியும் வேண்டும். சில நேரங்களில் இவையே வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைந்துவிடலாம். பொதுவாக தேர்வு எழுதும்போது எப்படி நம்மை தயார் செய்துகொள்வோமோ அதுபோல வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பண்பு இருந்தால் முடிவு சுபமே என்கிறது இந்த நூல். நிலத்தில் விளையாடும் கால்பந்தையும், வாழ்க்கையில் உருண்டோடும் காலப்பந்தையும் உதைத்து, தேர்வுக்கும் வாழ்க்கைக்கும் இந்த நூலை ஒரு வழிகாட்டியாக அமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் இரா.ஆனந்த குமார். தேர்வு செய்யுங்கள் இந்நூலை... வாழ்க்கையைத் தேர்வு செய்ய!
RS. 91 More...