Cart is Empty
by எஸ்.எல்.வி.மூர்த்தி
விளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவரொட்டிகள், திரையரங்குகள் மூலம் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.அப்படி வணிகத்துக்கு உயிர்நாடியாகிவிட்ட விளம்பரத் துறை கோடிகள் புரளும் கனவுத் தொழிற்சாலை.இந்தத் துறையின் ஆரம்ப காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்தையும் இங்கே அற்புதமாகப் படைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.விளம்பர வியூகம் எங்கிருந்து எப்போது தொடங்கியது, அது படிப்படியாக எப்படி பல மாற்றங்களைக் கண்டுள்ளது, பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் விளம்பரங்களை துணை கொண்டு தங்கள் பொருட்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக வருடங்களின் புள்ளிவிவரங்களோடு கொடுத்திருப்பது மகத்தானது.செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்று தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்தே விளம்பர உலகம் வளர்ந்து, இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப இணையதளம் வரை மாறியிருப்பதை அழகாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.ஒரு பொருளின் தரம், விலை நிர்ணயம், அந்தப் பொருளின் பயன்பாடு, எந்தப் பொருளுக்கு விளம்பரத்தை எப்படி கையாண்டால் மக்களை அது கவரும், மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்பது போன்ற பல தகவல்கள் உள்ளன. மார்க்கெட்டிங் பற்றி அறியாதவர்களும்கூட புரிந்துகொள்ளும் விதமாக, சுவாரஸ்யமாக, எளிமையான நடையில் இந்த நூலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வணிக வியூகத்தை அழகாகச் சொல்லித் தரும் இந்த நூல் அனைவரும் படித்து பயன்பெறக்கூடிய செய்திகளைக் கொண்ட விளம்பர உலகின் வழிகாட்டி.
RS. 56 More...by நெல்லை விவேகநந்தா
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தைக் கவிதையாகக் கண்டவர் கவிஞர் வைரமுத்து. எது, எத்தகையது என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. ஒரே வரிசையில் வைக்க முடியாத வெவ்வேறு விஷயங்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சியாக இந்தக் கதம்பக் கொத்தை நூலாக்கி இருக்கிறார் நெல்லை விவேகநந்தா. பூமியைப் படைத்த பெருந்தகையின் பின்னணி, உலகப்போரில் கொடுங்கோலன் ஹிட்லரின் நிலை, வைரத்தின் வீரியத்தை விவரிக்கும் ‘வைரம் வந்த கதை’, விண்வெளியில் நடந்த முதல் அதிசயம், வியக்கவைக்கும் சீனப் பெருஞ்சுவர், உலக அழகிப் போட்டி பிறந்த கதை, குங்குமப்பூவின் உண்மையான குணாதிசயம், தாயைப் புறக்கணித்த காமராஜர், காதலனுக்கு, காதலி கட்டிய நினைவுச்சின்னம், கிளுகிளுப்பை உண்டாக்கும் விருந்து! என அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளிவந்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு. மேலும், ‘சில சந்தேகங்களும் தீர்வுகளும்!’ என்ற தலைப்பில், மக்களின் பல்வேறு மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அதற்கான சரியான விளக்கத்தையும் தந்திருப்பது, இந்த நூலின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வு, பொது அறிவு என விதவிதமான தகவல்களை ஒருங்கே தொகுத்து அறிவுக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரின் அறிவு விசாலத்துக்கும் நிச்சயம் துணை புரியும்!
RS. 56 More...by மல்லை சி.ஏ.சத்யா
காதல் மணம் புரிந்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதியும் மதமும் குறுக்கே நிற்பது மட்டும் இவர்கள் தயக்கத்துக்குக் காரணமல்ல. தாங்கள் இந்த சமூகத்தில் அனுபவித்த கஷ்டங்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதாலும்தான். ‘காதல் வயப்பட்டால் மாணவ-மாணவிகள் தங்கள் படிப்பை, எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு அல்லல்படுவார்களே... என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இயற்கை. அந்தக் கவலையை போக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. படிக்கும் காலத்தில் படிப்பை மட்டுமே காதலிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் நூல் ஆசிரியர் மல்லை சத்யா. ‘பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்குக் காதலையும் அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளையும் எடுத்துச்சொல்லி இருதரப்புக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் இடித்துரைக்கிறார். காவியக் காதலான அம்பிகாபதி-அமராவதி காதலில் தொடங்கி, ரோமியோ-ஜூலியட், அனார்கலி-சலீம், லைலா-மஜ்னு, அபிராமி பட்டர் அன்னை அபிராமி மீது கொண்ட பக்தி; ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட காதல் கதைகளையும் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இளவரசன் - திவ்யா காதல் வரை அலசியிருக்கும் நூல் ஆசிரியர், சாதிப் பேயை விரட்ட ‘காதல் செய்வீர்!’ என்கிறார். காதலை எதிர்பார்த்துக் காத்திருப்போரும், காதலை எதிர்ப்போரும் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும். பெற்றோரையும், உற்றாரையும், உறவினரையும் காதலிப்போம்! கலவரமில்லா சமுதாயத்தைப் படைப்போம்!
RS. 50 More...by வேங்கடம்
இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள்! அப்படித்தான் சொல்ல முடியும். இந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20தான். அந்த இருபது குடும்பத்தின் கையில்தான் உலகமே அடங்கியிருக்கிறது என்பதை நூல் ஆசிரியர் வேங்கடம் விளக்கியுள்ளார். இந்த உலகத்தில் 752 கோடி பேர் மக்கள்தொகையில் வெறும் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ‘மிக மிக...’ ரெக்கரிங் பணக்காரர்கள். அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 6 ஆயிரம் பேர்தான். உலகில் உள்ள மொத்த அசையும் அசையாச் சொத்துகளில் பாதி இந்த 6 ஆயிரம் பேரிடம் இருக்கிறது. அதாவது பாதி உலகம் அவர்கள் கையில்; மீதிப் பாதி உலகம் அவர்களுக்கு அடங்கி இருக்கிறது. இந்தியா, சீனாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்த 6 ஆயிரம் பேரில், முதல் ஆயிரம் பேரிடம் மட்டுமே இருக்கிறது. இந்த 20 குடும்பங்கள்தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ‘பேஸ்ட்’ முதல் பெஸ்ட் வரை கொடுத்து உலகை ஆட்டிப்படைக்கிறார்கள். வகையாகச் சிக்கிய எலியைப் பூனைக்குட்டி கவ்வுவதுபோல அவர்கள் நம்மைக் கவ்வியிருக்கிறார்கள். இந்த நூலைப் படித்தால் அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளவாவது முயற்சிக்கலாம்!
RS. 102 More...by சுமதி ஸ்ரீ
நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிரிக்க வைக்கிறது, சில நேரம் அழவைக்கிறது. முடிவாக வாழ்க்கை நம்மை பெரிதும் சிந்திக்கவும் வைக்கிறது. சிலரது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நீங்காத வடுக்களாகவும், ஒரு சில சம்பவங்கள் நினைக்கும்போதே சுகமாக அமைந்து விடுகின்றன. இங்கே நூலாசிரியர் சுமதிஸ்ரீ தன் வாழ்வில் நிகழ்ந்த பலவித அனுபவங்களை, நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளை, மனதில் காயம் ஏற்படுத்திய சங்கடங்களை அழகான நடையில் இலக்கிய நயத்தோடு, வார்த்தை ஜாலங்களின் கலவையோடு இங்கே நம் சிந்தனையைத் தூண்டும் நூலாக கொடுத்திருக்கிறார். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டிய மன உறுதியும், உத்வேகமும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விளையாட்டில்கூட ஆண்கள் & பெண்கள் என பாகுபடுத்தப்பட்டுள்ள நிலை, இறுதிப் பயணத்தில் எரியூட்டப்படும்போது, ‘ஆண்கள் உடலைவிட பெண்களின் உடல் எளிதில் எரிந்துவிடும். காரணம், அடுப்படியில் கிடந்து ஏற்கெனவே பாதி வெந்திருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுமிடத்தில் பெண்ணியத்துக்கான ஆதரவை, உள்ளத்தில் அழுத்தமாகப் பதியும்படி வார்த்தைகளால் வடித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிபூர்வமாக கொட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். பள்ளிப் பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.
RS. 56 More...by நா.முத்துக்குமார்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விகடனில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைக்கும் ‘அணிலாடும் முன்றில்’ மூலமாக நமக்கு சிறந்த உரைநடையாளராக அறிமுகமான முத்துக்குமார் ‘வேடிக்கை பார்ப்பவன்’ மொழிநடையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். வடிவத்திலும், உத்தியிலும், மொழி நடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை. இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்கு வரப் பாடுபட்ட தருணங்கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த அனுபவங்கள், முதல் கவிதை எழுதியது, பின்னர் கவி மேடைகளுக்குத் தலைமை தாங்கியது, பத்திரிகைத் துறையில் பணி ஆற்றியது, உதவி இயக்குனராகப் பணி ஆற்றியது, பணி ஆற்றிக் கொண்டே சில காலம் படித்தது, பிரபலமான நண்பர்களைப் பற்றி எனப் பரவலாக தன் அனுபவங்களை வாசகர்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்ற தலைப்பில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.
RS. 116 More...by அ.முத்துலிங்கம்
தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தஞ்சம் அடையும் அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்... குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக்குக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம்விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. உயிரைப் பிழைக்க வைக்க மனிதர் எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது என்பதுதான் நாவலின் உயிர் நாடி. எழுத்தாளர் முத்துலிங்கம் அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர். ஒவ்வொரு வாக்கியத்தையும் தங்க நகை போல அலங்கரிக்கும் வித்தைக்காரர். படியுங்கள்... விறுவிறு அனுபவம் காத்திருக்கிறது. கடவுள் தொடங்கிய இடத்தைக் கண்டடையுங்கள்.
RS. 109 More...by விகடன் பிரசுரம்
தலைசிறந்த மனிதர்களை மேடையேற்றிப் பாராட்டி அழகு பார்ப்பதுதான் தமிழர்களின் தொன்றுதொட்ட மரபு. திரைத் துறை, அரசியல், சமூகம், எழுத்து, சேவை... என ஒவ்வொரு தளத்திலும் உச்சாணிக்கொம்பில் வைத்து கொண்டாடப்படவேண்டிய மனிதர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களின் கேள்விகளோடு மேடையேற்றிய பகுதிதான் ஆனந்த விகடனில் வெளிவந்த ‘விகடன் மேடை’. வாசகர்களின் ‘நச்’ கேள்விகளுக்கு, பிரபலங்களின் ‘பளிச்’ பதில்கள் தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியது. சினிமா பிரபலங்களை, அரசியல் சாணக்கியர்களை, சமூகப் போராளிகளை, எழுத்துலக ஜாம்பவான்களை எமது வாசகர்களோடு இணைத்த பாலம் ‘விகடன் மேடை’ என்றால் அது மிகையாகாது. கடுமையான பணிகளுக்கு இடையிலும் வாசகர்களின் சரவெடி கேள்விகளுக்கு நிதானத்தோடு, பகட்டின்றி பதில் அளித்த அனைத்துப் பிரபலங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்வதில் கடமைப்பட்டுள்ளோம். திரைப் பிரபலங்கள் கடந்து வந்த பாதை எவ்வளவு சிரத்தைக்கொண்டது என்பதை அழுத்தந்திருத்தமாகவும் நேர்மையாகவும் பதிவுசெய்துள்ளார்கள். ‘‘நேர்மையாகச் செயல்படுவதால் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?” என ‘விகடன் மேடை’யில் வாசகி ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அவர், ‘‘20 ஆண்டு காலப் பணியில் 18 முறை மாறுதல். குழந்தைகளின் கல்வி பாதிப்பு. சக ஊழியர்களின் வெறுப்பு. ‘பிழைக்கத் தெரிந்தவர்’களின் பரிகாசம். நண்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவது. சின்னச் சின்ன அவமானங்கள். தனிமைப்படுத்தப்படுதல். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி மக்களிடம் பெற்றிருக்கக்கூடிய நம்பிக்கை. அது கொடுக்கும் ஆத்ம திருப்தி. குறைவாக இருந்தாலும் லட்சிய தாகம் உள்ள நண்பர்கள். அதைக் காட்டிலும், தமிழ் மக்களின் அளப்பரிய நம்பிக்கையைப் பெற்ற ஆனந்த விகடனில் லட்சக்கணக்கான வாசகர்களுடன் அளவளாவும் வாய்ப்பு. இவையே, நான் நேர்மையாக இருந்ததால் பெற்றவை. இழந்தது எனப் பார்த்தால், கடினமான சில சூழல்களில் நிம்மதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!” என்று பதில் அளித்திருந்தார். எத்தனை அரசு அதிகாரிகளிடம் இருந்து இதுபோன்ற ஒரு நேர்மையை எதிர்பார்க்க முடியும்? ‘விகடன் மேடை’யில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அதுதான் உங்கள் கைகளில் தற்போது தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஆளுமைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகள், சந்தித்த வெற்றி&தோல்விகள், தனிப்பட்ட விருப்பு& வெறுப்புகள்.... போன்றவற்றைக் காண அவர்களின் பிரத்யேக பக்கங்களைப் புரட்டத் தயாராகுங்கள்!
RS. 305 More...by ஜி.எஸ்.எஸ்.
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்துபவை. உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதை அமானுஷ்யம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது? யாருக்கும் தீங்கு விளைவிக்காத காக்கைகள்கூட மனிதனை பழிவாங்குகின்றன. உயிரற்ற கார் கூட மனிதனை விரட்டி கொல்கிறது. ஏன் மரம், செடிகள் கூட மனிதனுக்கு எமனாக வாய்க்கின்றன. ஏன்? எப்படி? இது சாத்தியமா? இந்தப் புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதிர்ந்து போவீர்கள். உயிரற்ற பொருட்களுக்கு பழிவாங்கும் தன்மை இருக்க முடியுமா? அந்தப் பொருட்களின் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிக்கும் தொழிலாளியின் மனநிலை அந்தப் பொருளை ஓரளவு பாதிக்க வாய்ப்பிருக்கிறதாம். அதனால் அந்த மனிதனின் எண்ண ஓட்டப்படி அந்தப் பொருளின் தன்மையும் இருக்கும் என்பன போன்ற பகீர் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. மனித எண்ணங்களுக்கு ஒரு காந்த சக்தி உள்ளது. அது, மற்ற மனிதர்களையும் தாக்கும். ஜடப் பொருட்கள் மீது படியும் வாய்ப்பு இருக்கலாம். தனக்குப் பிடிக்காததைச் செய்யும் மனிதர்களை, காக்கைகள் திட்டுவதும் உண்டாம். தன் இனத்தவரை அழைத்துக் கொண்டு வந்து அந்த மனிதரைச் சுற்றி வளைப்பதும் உண்டாம். மரம், செடிகளுக்கும் அதிசய சக்தி இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். நம்மைப்போல் செடிகள் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. ஆனால் ஒரு செடி சிக்னல் அனுப்புவதும் அதை மற்றொரு செடி புரிந்துகொள்வதும் நடக்குமாம். இப்படி அமானுஷ்ய தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த நூலை சத்தம் போட்டு படிக்காதீர்கள். உங்கள் வீட்டுச் சுவருக்கும்கூட காதுகள் இருக்கலாம்!
RS. 70 More...by பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை இந்த நூலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தன்னம்பிக்கை ஊட்டும், வெற்றி டானிக்கை நாளைய வெற்றியாளர்களாகிய உங்களுக்கு இந்த நூலில் தாராளமாக வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் படியுங்கள். தவறாமல் பள்ளிக்குச் சென்று, எல்லா வகுப்புகளையும் நன்கு கவனித்து வந்தாலே போதும், கல்வியில் உயர்ந்த இடத்தை அடைந்துவிடலாம். அதிலும், வகுப்புகளில் குறிப்பு எடுத்துக்கொள்கிற பழக்கமும் இருந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கலாம் என நட்சத்திர ஐடியாக்களை தருகிறது இந்தப் புத்தகம். தேர்வுக் காலம் முடிந்த பின்னும், தொடர்ந்து அதே உத்வேகத்துடன் படிப்பதற்கு என்று நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியே தீருவோம். உணவும் உறக்கமும் போலவே, வாசிப்பும் இன்றியமையாத தேவையாக மாறட்டும். நல்ல நல்ல நூல்களாகத் தேடித் தேடிப் படிக்கிற பழக்கம் தானாகவே வரவேண்டும் என்று வாசிப்பின் அவசியத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது. அறிவு வளர்ச்சிக்காக வாசியுங்கள். வெற்றி எனும் தேவதை வீடு தேடி வர, நூறு வெற்றிகளை நீங்கள் ருசிக்க இப்போதே பக்கத்தைப் புரட்டுங்கள். நீங்களே அந்த வெற்றியாளர்!
RS. 50 More...