Cart is Empty
by ஜி.எஸ்.எஸ்.
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்துபவை. உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதை அமானுஷ்யம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது? யாருக்கும் தீங்கு விளைவிக்காத காக்கைகள்கூட மனிதனை பழிவாங்குகின்றன. உயிரற்ற கார் கூட மனிதனை விரட்டி கொல்கிறது. ஏன் மரம், செடிகள் கூட மனிதனுக்கு எமனாக வாய்க்கின்றன. ஏன்? எப்படி? இது சாத்தியமா? இந்தப் புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதிர்ந்து போவீர்கள். உயிரற்ற பொருட்களுக்கு பழிவாங்கும் தன்மை இருக்க முடியுமா? அந்தப் பொருட்களின் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிக்கும் தொழிலாளியின் மனநிலை அந்தப் பொருளை ஓரளவு பாதிக்க வாய்ப்பிருக்கிறதாம். அதனால் அந்த மனிதனின் எண்ண ஓட்டப்படி அந்தப் பொருளின் தன்மையும் இருக்கும் என்பன போன்ற பகீர் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. மனித எண்ணங்களுக்கு ஒரு காந்த சக்தி உள்ளது. அது, மற்ற மனிதர்களையும் தாக்கும். ஜடப் பொருட்கள் மீது படியும் வாய்ப்பு இருக்கலாம். தனக்குப் பிடிக்காததைச் செய்யும் மனிதர்களை, காக்கைகள் திட்டுவதும் உண்டாம். தன் இனத்தவரை அழைத்துக் கொண்டு வந்து அந்த மனிதரைச் சுற்றி வளைப்பதும் உண்டாம். மரம், செடிகளுக்கும் அதிசய சக்தி இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். நம்மைப்போல் செடிகள் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. ஆனால் ஒரு செடி சிக்னல் அனுப்புவதும் அதை மற்றொரு செடி புரிந்துகொள்வதும் நடக்குமாம். இப்படி அமானுஷ்ய தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த நூலை சத்தம் போட்டு படிக்காதீர்கள். உங்கள் வீட்டுச் சுவருக்கும்கூட காதுகள் இருக்கலாம்!
RS. 70 More...by மாரி செல்வராஜ்
ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாகப் பார்க்கலாம். வெறும் நிகழ்வாக அதன் போக்கில் பார்ப்பது ஒன்று. நம் விருப்பு வெருப்புகளை அதன் மேல் சாயம் ஏற்றிப் பார்ப்பது இரண்டு. அதை ஓர் அனுபவமாகப் பார்ப்பது மூன்றாவது. என்ன நிகழ்ந்ததோ அதை மட்டும் பார்ப்பது மிகவும் கஷ்டம்; மேலும், உள்ளதை உள்ளபடியே பார்க்கும் திறமை உள்ளவர்கள் சொற்பம். நூற்றுக்குத் தொண்ணூறு பேர், தங்களுக்கு பிடித்ததையும் பிடிக்காததையும், சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில் சாயம் ஏற்றி, இதில் இப்படி இப்படிப் பிழைகள் இருக்கின்றன; இன்னின்ன விதத்தில் இது நன்றாக இருக்கிறது என்று கருத்தைப் பூசி பிடித்ததை நிகழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள்; பிடிக்காததை ஆட்கள் மேல் ஏற்றி விமர்சிப்பார்கள். இது உலகத்துக்காக தன்னை வெளிக்காட்டிக்கொள்வது. இது மனமும் மூளையும் இழுக்கும் இழுப்பு. உள்ளத்தின் வெளிப்பாடு அல்ல. இன்னொரு வகையில் நிகழ்ச்சிகளை அனுபவமாக உணர்வது. அனுபவமாக உணர்பவர்கள் அதில் சாயம் ஏற்றுவதில்லை. ஏனெனில் அனுபவம் என்பது உண்மை. நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே இவ்வளவு குழப்பம் இருக்கும்போது என்ன நிகழ்ந்ததோ அதை எடுத்துச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. அதிலும் இதைப் படிப்பவர் விமர்சனம் செய்வார்களே என்று, சொல்பவர் அனேகமாகச் சில விஷயங்களைத் தவிர்ப்பார்கள். தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளில் சிலவற்றை அனுபவமாக உணர்ந்து அவற்றை இந்த நூலில் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் மாரி செல்வராஜ். ஆனந்த விகடனில் வந்த தொடர் இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இது தவறு, நான் தவறு செய்துவிட்டேன் என்றோ இது நல்லது, இந்த நன்மையை நான் செய்தேன் என்றோ அதற்கு ஒரு விமர்சனத்தை அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. இதுதான் நடந்தது அதை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படிப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார். அவர் வாழ்வில் நடந்தவற்றை அதன் போக்கில் மட்டும் பார்த்தால் அது சுவையான ஓர் அனுபவமே. ஒவ்வொரு அனுபவத்தையும் திடீர்த் திருப்பத்துடன் சொல்லியிருக்கும் நடை அவர் ஒரு கைதேர்ந்த கதைசொல்லி என அறிவிக்கிறது. சுவையான அவர் வாழ்க்கை அனுபவங்களை ரசித்துப் படிக்கலாம்!
RS. 105 More...by அ.முத்துலிங்கம்
தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தஞ்சம் அடையும் அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்... குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக்குக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம்விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. உயிரைப் பிழைக்க வைக்க மனிதர் எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது என்பதுதான் நாவலின் உயிர் நாடி. எழுத்தாளர் முத்துலிங்கம் அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர். ஒவ்வொரு வாக்கியத்தையும் தங்க நகை போல அலங்கரிக்கும் வித்தைக்காரர். படியுங்கள்... விறுவிறு அனுபவம் காத்திருக்கிறது. கடவுள் தொடங்கிய இடத்தைக் கண்டடையுங்கள்.
RS. 109 More...by பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை இந்த நூலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தன்னம்பிக்கை ஊட்டும், வெற்றி டானிக்கை நாளைய வெற்றியாளர்களாகிய உங்களுக்கு இந்த நூலில் தாராளமாக வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் படியுங்கள். தவறாமல் பள்ளிக்குச் சென்று, எல்லா வகுப்புகளையும் நன்கு கவனித்து வந்தாலே போதும், கல்வியில் உயர்ந்த இடத்தை அடைந்துவிடலாம். அதிலும், வகுப்புகளில் குறிப்பு எடுத்துக்கொள்கிற பழக்கமும் இருந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கலாம் என நட்சத்திர ஐடியாக்களை தருகிறது இந்தப் புத்தகம். தேர்வுக் காலம் முடிந்த பின்னும், தொடர்ந்து அதே உத்வேகத்துடன் படிப்பதற்கு என்று நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியே தீருவோம். உணவும் உறக்கமும் போலவே, வாசிப்பும் இன்றியமையாத தேவையாக மாறட்டும். நல்ல நல்ல நூல்களாகத் தேடித் தேடிப் படிக்கிற பழக்கம் தானாகவே வரவேண்டும் என்று வாசிப்பின் அவசியத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது. அறிவு வளர்ச்சிக்காக வாசியுங்கள். வெற்றி எனும் தேவதை வீடு தேடி வர, நூறு வெற்றிகளை நீங்கள் ருசிக்க இப்போதே பக்கத்தைப் புரட்டுங்கள். நீங்களே அந்த வெற்றியாளர்!
RS. 50 More...by நெல்லை விவேகநந்தா
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தைக் கவிதையாகக் கண்டவர் கவிஞர் வைரமுத்து. எது, எத்தகையது என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. ஒரே வரிசையில் வைக்க முடியாத வெவ்வேறு விஷயங்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சியாக இந்தக் கதம்பக் கொத்தை நூலாக்கி இருக்கிறார் நெல்லை விவேகநந்தா. பூமியைப் படைத்த பெருந்தகையின் பின்னணி, உலகப்போரில் கொடுங்கோலன் ஹிட்லரின் நிலை, வைரத்தின் வீரியத்தை விவரிக்கும் ‘வைரம் வந்த கதை’, விண்வெளியில் நடந்த முதல் அதிசயம், வியக்கவைக்கும் சீனப் பெருஞ்சுவர், உலக அழகிப் போட்டி பிறந்த கதை, குங்குமப்பூவின் உண்மையான குணாதிசயம், தாயைப் புறக்கணித்த காமராஜர், காதலனுக்கு, காதலி கட்டிய நினைவுச்சின்னம், கிளுகிளுப்பை உண்டாக்கும் விருந்து! என அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளிவந்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு. மேலும், ‘சில சந்தேகங்களும் தீர்வுகளும்!’ என்ற தலைப்பில், மக்களின் பல்வேறு மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அதற்கான சரியான விளக்கத்தையும் தந்திருப்பது, இந்த நூலின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வு, பொது அறிவு என விதவிதமான தகவல்களை ஒருங்கே தொகுத்து அறிவுக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரின் அறிவு விசாலத்துக்கும் நிச்சயம் துணை புரியும்!
RS. 56 More...by எஸ்.கே.முருகன்
கதவைத் திற காற்று வரட்டும், அத்தனைக்கும் ஆசைப்படு என சோர்ந்து கிடக்கும் மனம் எனும் வீணையை மீட்ட மந்திரங்கள் நம் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறி அல்லது இயற்கைக்கு ஒவ்வாத லௌகீக வாழ்வில் திளைக்க முற்படும் ஒவ்வொரு மனிதனும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் என்பது உண்மை. மகிழ்ச்சி என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்காக மனிதகுலம் ஏங்கிக் கிடக்கிறது. தினந்தோறும் தியானங்கள், வாரந்தோறும் யோகா வகுப்புகள் என மனித மனம் தவம் கிடக்கிறது. ஆனால், மகிழ்ச்சியை கைக்கொள்ள இந்த பகீரதபிரயத்தனங்கள் எல்லாம் தேவையில்லை என்கிறது மகிழ்ச்சி தரும் மந்திரங்கள் கொண்ட இந்த அபூர்வ நூல். சிந்தனை செய்யும் மனிதன் சிறப்பாக செயல்படத் தொடங்குவான். சிறப்பாகச் செயல்படுபவன் நிம்மதியாகவும் நீண்டநாள் சந்தோஷ மாகவும் இருப்பான். ஆனால் சந்தோஷமாக இருப்பது எப்படி? உடம்பின் முக்கியமான நோக்கம் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதுதான். வாழும் வரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்காகப் போராடுகிறது உடல். அதனால் உடலைத்தான் முதலில் மதிக்க வேண்டும். இந்த உடம்பு அழிந்துவிடும் என்ற கருத்தும் உண்மை யல்ல. இந்த உலகில் எதுவுமே அழிவதில்லை. ஒன்று வேறு ஒன்றாக மாறிவிடும் என்பதை ஆன்மிகமும் விஞ்ஞானமும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதனால் வாழும் வரையிலும் இந்த உடம்பை புனிதமாக போற்றிப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் உள்ள மனிதனால் மட்டும்தான் வெற்றிகளைத் தொடவும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும் என்கிறார் நூலாசிரியர். இதுபோன்ற சில அற்புத மந்திரங்களையும், அவை செயல்பட்டு வெற்றியடைந்த ரகசிய கதைகளையும் இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர். மகிழ்ச்சியில் திளைக்க விரும்பிய உங்கள் கையில் தவழ்கிறது இந்த நூல். இனி வாழ்வெல்லாம் வசந்தமே.
RS. 102 More...by கலாப்ரியா
படைப்பு மனம் கொண்டவர்களின் வாழ்வனுபவம் அலாதியானது. நினைவுப் பாதையைக் கடக்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலாப்ரியா வாழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி... எத்தனை மனிதர்கள்... எத்தனை அபூர்வங்கள். கவிஞர் கலாப்ரியா, மண் சார்ந்த கவிதைகளின் கர்த்தா. அவர் சார்ந்த தெற்கத்தி சீமையில் தாமிரபரணிக் கரைகளை மனதால் தழுவிச் செல்கின்றன கலாப்ரியாவின் வரிகள். பிரபஞ்சன் சொல்வது போல, கலாப்ரியாவின் மன வயல்களில் தாமிரபரணி நதி பாய்ந்து அவரைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, இன்னமும். கவிஞர்கள் பொதுவாக, வார்த்தை ஜாலம் கொண்டவர்கள். வர்ணனையில் கைதேர்ந்தவர்கள். ஆனால், பெருவரி கொண்டு கட்டுரை வடிப்பார்களா என்பது ஐயமே. இந்த ஐயத்தை உடைத்தெறிந்திருக்கிறார் கலாப்ரியா. ‘நினைவின் தாழ்வாரங்கள்’ மூலம் தனது இளம்பிராயத்து நினைவுகளை நம் மன அடுக்கில் நிலைநிறுத்தியவர் கலாப்ரியா. அதற்கு அடுத்தபடியாக இந்த ‘உருள் பெருந்தேர்’ கட்டுரைத் தொகுப்பு கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. எழுத்துலக முன்னோடிகள் பிரபஞ்சன், ஜெயமோகன் முன்னுரையில் சொன்னபடி, இந்நூலில் நம்மை வசப்படுத்துகிறார் கலாப்ரியா. இந்த கட்டுரைத் தொகுப்பில் வண்ணமயமான மனித உள்ளங்கள்... மனதை வருடும் இடங்கள் என அனைத்திலும் ஊடுருவி தன்னுடைய இருப்பை வார்த்தைகளில் உணர்த்தியிருக்கிறார். இந்த நூலை வாசிக்கும்போது நாமும் நம் கடந்த காலத்தை நோக்கி பயணிப்போம். ரசிப்போம். சுவைப்போம். நம் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் தரையைத் தொடும். நெஞ்சாங்கூடு நிறையும். வாருங்கள்.. கலாப்ரியாவோடு பயணிப்போம்.
RS. 91 More...by காயத்ரி சித்தார்த்
தாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அது செய்த குறும்புகளிலும் பேசிய மழலைப் பேச்சுகளிலும் மயங்கிய அன்னை தமிழ்மொழியில் அதை வர்ணித்து, வடித்து எழுதிய பிள்ளைத்தமிழ் நூல் இது. பிறந்த குழந்தை தனது பிஞ்சு விரலால், தத்தி தத்தி நடக்கும் பஞ்சு கால்களால், கொஞ்சி கொஞ்சி பேசும் மழலை மொழியால், சில நேரங்களில் பொய்யாய் ஏமாற்றி பேசுவதும்... பல நேரங்களில் தன் சுட்டித்தனத்தால் எல்லோரையும் வியந்து பார்த்து ரசிக்கும் வகையில்... என நடந்த மொத்த நிகழ்வுகளையும் பொக்கிஷமாக இந்த அன்னை வடித்துத் தந்திருப்பது நூலின் சிறப்பாகும். “ ‘க்’ மாதிரி சம்மணம் போட்டு உட்காரு...” என்ற அன்னையிடம் “அம்மா, இன்னிக்கு ஒரு நாள் ‘த்’ மாதிரி காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறேனே” என்கிறபோது இங்கே தாய்க்கும் மகளுக்குமான தமிழ்மொழியின் உரையாடல் வியங்கவைப்பதோடு மயங்கவும் வைக்கிறது. பல நேரங்களில் தன் அன்னையை குழந்தையாகவும் தன்னைத் தாயாகவும் நினைத்து சீராட்டுவதைக் கண்ட அன்னையின் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இருக்காது. மயக்குறு மகளின் குறும்புகள் அடங்கிய இந்த நூல், உங்களது மழலைப் பருவத்தையும் உங்கள் பிள்ளையின் பொன்னான குழந்தை பருவத்தையும் நினைப்பூட்டி கண் முன்னால் திரையிட்டுக் காட்டும் என்பதில் ஐயமில்லை.
RS. 98 More...by விகடன் பிரசுரம்
தலைசிறந்த மனிதர்களை மேடையேற்றிப் பாராட்டி அழகு பார்ப்பதுதான் தமிழர்களின் தொன்றுதொட்ட மரபு. திரைத் துறை, அரசியல், சமூகம், எழுத்து, சேவை... என ஒவ்வொரு தளத்திலும் உச்சாணிக்கொம்பில் வைத்து கொண்டாடப்படவேண்டிய மனிதர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களின் கேள்விகளோடு மேடையேற்றிய பகுதிதான் ஆனந்த விகடனில் வெளிவந்த ‘விகடன் மேடை’. வாசகர்களின் ‘நச்’ கேள்விகளுக்கு, பிரபலங்களின் ‘பளிச்’ பதில்கள் தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியது. சினிமா பிரபலங்களை, அரசியல் சாணக்கியர்களை, சமூகப் போராளிகளை, எழுத்துலக ஜாம்பவான்களை எமது வாசகர்களோடு இணைத்த பாலம் ‘விகடன் மேடை’ என்றால் அது மிகையாகாது. கடுமையான பணிகளுக்கு இடையிலும் வாசகர்களின் சரவெடி கேள்விகளுக்கு நிதானத்தோடு, பகட்டின்றி பதில் அளித்த அனைத்துப் பிரபலங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்வதில் கடமைப்பட்டுள்ளோம். திரைப் பிரபலங்கள் கடந்து வந்த பாதை எவ்வளவு சிரத்தைக்கொண்டது என்பதை அழுத்தந்திருத்தமாகவும் நேர்மையாகவும் பதிவுசெய்துள்ளார்கள். ‘‘நேர்மையாகச் செயல்படுவதால் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?” என ‘விகடன் மேடை’யில் வாசகி ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அவர், ‘‘20 ஆண்டு காலப் பணியில் 18 முறை மாறுதல். குழந்தைகளின் கல்வி பாதிப்பு. சக ஊழியர்களின் வெறுப்பு. ‘பிழைக்கத் தெரிந்தவர்’களின் பரிகாசம். நண்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவது. சின்னச் சின்ன அவமானங்கள். தனிமைப்படுத்தப்படுதல். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி மக்களிடம் பெற்றிருக்கக்கூடிய நம்பிக்கை. அது கொடுக்கும் ஆத்ம திருப்தி. குறைவாக இருந்தாலும் லட்சிய தாகம் உள்ள நண்பர்கள். அதைக் காட்டிலும், தமிழ் மக்களின் அளப்பரிய நம்பிக்கையைப் பெற்ற ஆனந்த விகடனில் லட்சக்கணக்கான வாசகர்களுடன் அளவளாவும் வாய்ப்பு. இவையே, நான் நேர்மையாக இருந்ததால் பெற்றவை. இழந்தது எனப் பார்த்தால், கடினமான சில சூழல்களில் நிம்மதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!” என்று பதில் அளித்திருந்தார். எத்தனை அரசு அதிகாரிகளிடம் இருந்து இதுபோன்ற ஒரு நேர்மையை எதிர்பார்க்க முடியும்? ‘விகடன் மேடை’யில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அதுதான் உங்கள் கைகளில் தற்போது தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஆளுமைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகள், சந்தித்த வெற்றி&தோல்விகள், தனிப்பட்ட விருப்பு& வெறுப்புகள்.... போன்றவற்றைக் காண அவர்களின் பிரத்யேக பக்கங்களைப் புரட்டத் தயாராகுங்கள்!
RS. 305 More...