Cart is Empty
by சுஜாதா
இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன. அதன்படியே, இன்றைக்கு அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் நன்றாகவே அதை அமல்படுத்தவும் செய்கின்றன. அதை உள்வாங்கிக் கொண்டுதான் விகடன் குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்துகொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில், சுஜாதாட்ஸ் என்ற தொடர் வெளிவந்தது. அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் சம்பவங்களையும் தன் சிந்தனை ஓட்டத்தில் இருந்து எழுத்தாளர் சுஜாதா எழுதிவந்தார். அப்போது, ஜூனியர் போஸ்ட் வாசகர்கள் மத்தியில், அது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இலக்கியம், அரசியல், சினிமா, ஊடகம் என்று பல்வேறு துறைகளையும் சுஜாதா அந்தக் கட்டுரைகளில் அலசியிருக்கிறார். முன்பு சொன்ன மாதிரி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற முறையே அந்தக் கட்டுரைகளின் சிறப்பு. தனது சரளமான எழுத்து நடையால் வாசகர்களை மீண்டும் மீண்டும் தன் பக்
RS. 91 More...by எஸ்.கே.முருகன்
வேடதாரிகளும் போலிகளும் பெருகிவிட்ட ஆன்மிக உலகுக்கு லௌகீகத்தின் இயல்பைப் புரிந்துகொண்ட ஒரு நிதர்சன மனிதன் பிரவேசித்தால் எப்படியிருக்கும்? இந்தக் கேள்விக்கு ஞானகுருவில் பதில் இருக்கிறது. தனக்கு முன் மிதக்கும் இலைகளைக்கூட வாஞ்சையுடன் ஏந்திக்கொள்ளும் காதல் மிகுந்த துறவி இந்த ஞானகுரு! மடங்களையும் ஆசிரமங்களையும் கட்டிக்கொண்டு ஏமாற்றும் போலிச் சாமியார்களுக்கு நடுவே, ரகசியங்களோ அதிசயங்களோ எதுவும் இல்லாமல் நம்மை நெருங்குகிற புதிய ஆன்மிக அனுபவம் இது. சாதகமாகவே எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் மனித இயல்புகளை மீறாத தத்துவ விசாரணைகளைப் பேசும் இந்த ஞானகுரு, விதவிதமான கேள்விகளோடு நெருங்குபவர்களை பரிகசிப்பதில்லை. மாறாக, அவர்களின் பலவீனங்களுக்கு தீர்வுகள் சொல்கிறார். மனிதன் திருப்தியடைகிற மாதிரி நிறைய பதில்களை இவர் வைத்திருக்கிறார். தேடி வருபவர்களைப் பதில்களால் குழப்பி, திரும்பத் திரும்ப தன்னைச் சரணடைய வைக்கும் சிலருக்கு மத்தியில், வாழ்வின் ருசியைக் கற்றுக் கொடுத்து அனுப்பி வைக்கிறார் இந்த ஞானகுரு. வழிபாடு என்பது அப்படியே பின்பற்றுவதில்லை, பின்பற்றிப் போவதற்கு சரியான வழியைக் கண்டுபிடிப்பது! என்று நமக்கு
RS. 50 More...by வெ.நீலகண்டன்
பசிக்கு உணவு என்பது எப்படி அவசியமோ அப்படி நாவுக்கு ருசி அவசியமாகிறது. சுவையான உணவு வகைகள் எங்கு கிடைக்குமோ தேடிச்சென்று அங்கு ருசி பார்ப்பவர்கள் ஏராளம் உள்ளனர். சில உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு களின் மணமும் ருசியும் நம்மை அங்கேயே அழைத்துச் சென்றுவிடும். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு - இந்த ஆறு சுவைகளின் சங்கமம் நம் நாவுக்கு ருசியையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. மதுரை இட்லி, தஞ்சாவூர் சாம்பார், திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாட்டு மசாலா.. இப்படி தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், ஒவ்வொரு உணவு தயாரிப்புக்குப் பெயர்பெற்றவை. அப்படி தமிழ்நாடெங்கும் உள்ள பல உணவகங்களுக்கு நேரில் சென்று அங்கு தயாரிக்கப்படும் விதவிதமான உணவுகளைப் பற்றி ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. கூடவே உணவுப் பொருள்கள் பற்றிய சில சந்தேகங்களுக்கு உணவு நிபுணர்களின் விளக்கங்களும் இதில் உள்ளன. எந்த ஊரில் எந்த உணவு பிரசித்தம், அது எங்கு கிடைக்கும் என ஒவ்வொரு உணவகம் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளதால், வெளியூர்களுக்குச் செல்வதையே பணியாகக் கொண்டவர்களுக்கு இந்த நூல் பேருதவியாக இருக்கும். உணவுகளை ருசிக்க உள்ளே செல்லுங்கள்...
RS. 160 More...by காயத்ரி சித்தார்த்
தாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அது செய்த குறும்புகளிலும் பேசிய மழலைப் பேச்சுகளிலும் மயங்கிய அன்னை தமிழ்மொழியில் அதை வர்ணித்து, வடித்து எழுதிய பிள்ளைத்தமிழ் நூல் இது. பிறந்த குழந்தை தனது பிஞ்சு விரலால், தத்தி தத்தி நடக்கும் பஞ்சு கால்களால், கொஞ்சி கொஞ்சி பேசும் மழலை மொழியால், சில நேரங்களில் பொய்யாய் ஏமாற்றி பேசுவதும்... பல நேரங்களில் தன் சுட்டித்தனத்தால் எல்லோரையும் வியந்து பார்த்து ரசிக்கும் வகையில்... என நடந்த மொத்த நிகழ்வுகளையும் பொக்கிஷமாக இந்த அன்னை வடித்துத் தந்திருப்பது நூலின் சிறப்பாகும். “ ‘க்’ மாதிரி சம்மணம் போட்டு உட்காரு...” என்ற அன்னையிடம் “அம்மா, இன்னிக்கு ஒரு நாள் ‘த்’ மாதிரி காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறேனே” என்கிறபோது இங்கே தாய்க்கும் மகளுக்குமான தமிழ்மொழியின் உரையாடல் வியங்கவைப்பதோடு மயங்கவும் வைக்கிறது. பல நேரங்களில் தன் அன்னையை குழந்தையாகவும் தன்னைத் தாயாகவும் நினைத்து சீராட்டுவதைக் கண்ட அன்னையின் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இருக்காது. மயக்குறு மகளின் குறும்புகள் அடங்கிய இந்த நூல், உங்களது மழலைப் பருவத்தையும் உங்கள் பிள்ளையின் பொன்னான குழந்தை பருவத்தையும் நினைப்பூட்டி கண் முன்னால் திரையிட்டுக் காட்டும் என்பதில் ஐயமில்லை.
RS. 98 More...by பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை இந்த நூலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தன்னம்பிக்கை ஊட்டும், வெற்றி டானிக்கை நாளைய வெற்றியாளர்களாகிய உங்களுக்கு இந்த நூலில் தாராளமாக வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் படியுங்கள். தவறாமல் பள்ளிக்குச் சென்று, எல்லா வகுப்புகளையும் நன்கு கவனித்து வந்தாலே போதும், கல்வியில் உயர்ந்த இடத்தை அடைந்துவிடலாம். அதிலும், வகுப்புகளில் குறிப்பு எடுத்துக்கொள்கிற பழக்கமும் இருந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கலாம் என நட்சத்திர ஐடியாக்களை தருகிறது இந்தப் புத்தகம். தேர்வுக் காலம் முடிந்த பின்னும், தொடர்ந்து அதே உத்வேகத்துடன் படிப்பதற்கு என்று நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியே தீருவோம். உணவும் உறக்கமும் போலவே, வாசிப்பும் இன்றியமையாத தேவையாக மாறட்டும். நல்ல நல்ல நூல்களாகத் தேடித் தேடிப் படிக்கிற பழக்கம் தானாகவே வரவேண்டும் என்று வாசிப்பின் அவசியத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது. அறிவு வளர்ச்சிக்காக வாசியுங்கள். வெற்றி எனும் தேவதை வீடு தேடி வர, நூறு வெற்றிகளை நீங்கள் ருசிக்க இப்போதே பக்கத்தைப் புரட்டுங்கள். நீங்களே அந்த வெற்றியாளர்!
RS. 50 More...by மல்லை சி.ஏ.சத்யா
காதல் மணம் புரிந்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதியும் மதமும் குறுக்கே நிற்பது மட்டும் இவர்கள் தயக்கத்துக்குக் காரணமல்ல. தாங்கள் இந்த சமூகத்தில் அனுபவித்த கஷ்டங்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதாலும்தான். ‘காதல் வயப்பட்டால் மாணவ-மாணவிகள் தங்கள் படிப்பை, எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு அல்லல்படுவார்களே... என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இயற்கை. அந்தக் கவலையை போக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. படிக்கும் காலத்தில் படிப்பை மட்டுமே காதலிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் நூல் ஆசிரியர் மல்லை சத்யா. ‘பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்குக் காதலையும் அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளையும் எடுத்துச்சொல்லி இருதரப்புக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் இடித்துரைக்கிறார். காவியக் காதலான அம்பிகாபதி-அமராவதி காதலில் தொடங்கி, ரோமியோ-ஜூலியட், அனார்கலி-சலீம், லைலா-மஜ்னு, அபிராமி பட்டர் அன்னை அபிராமி மீது கொண்ட பக்தி; ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட காதல் கதைகளையும் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இளவரசன் - திவ்யா காதல் வரை அலசியிருக்கும் நூல் ஆசிரியர், சாதிப் பேயை விரட்ட ‘காதல் செய்வீர்!’ என்கிறார். காதலை எதிர்பார்த்துக் காத்திருப்போரும், காதலை எதிர்ப்போரும் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும். பெற்றோரையும், உற்றாரையும், உறவினரையும் காதலிப்போம்! கலவரமில்லா சமுதாயத்தைப் படைப்போம்!
RS. 50 More...by எஸ்.கே.முருகன்
கதவைத் திற காற்று வரட்டும், அத்தனைக்கும் ஆசைப்படு என சோர்ந்து கிடக்கும் மனம் எனும் வீணையை மீட்ட மந்திரங்கள் நம் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறி அல்லது இயற்கைக்கு ஒவ்வாத லௌகீக வாழ்வில் திளைக்க முற்படும் ஒவ்வொரு மனிதனும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் என்பது உண்மை. மகிழ்ச்சி என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்காக மனிதகுலம் ஏங்கிக் கிடக்கிறது. தினந்தோறும் தியானங்கள், வாரந்தோறும் யோகா வகுப்புகள் என மனித மனம் தவம் கிடக்கிறது. ஆனால், மகிழ்ச்சியை கைக்கொள்ள இந்த பகீரதபிரயத்தனங்கள் எல்லாம் தேவையில்லை என்கிறது மகிழ்ச்சி தரும் மந்திரங்கள் கொண்ட இந்த அபூர்வ நூல். சிந்தனை செய்யும் மனிதன் சிறப்பாக செயல்படத் தொடங்குவான். சிறப்பாகச் செயல்படுபவன் நிம்மதியாகவும் நீண்டநாள் சந்தோஷ மாகவும் இருப்பான். ஆனால் சந்தோஷமாக இருப்பது எப்படி? உடம்பின் முக்கியமான நோக்கம் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதுதான். வாழும் வரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்காகப் போராடுகிறது உடல். அதனால் உடலைத்தான் முதலில் மதிக்க வேண்டும். இந்த உடம்பு அழிந்துவிடும் என்ற கருத்தும் உண்மை யல்ல. இந்த உலகில் எதுவுமே அழிவதில்லை. ஒன்று வேறு ஒன்றாக மாறிவிடும் என்பதை ஆன்மிகமும் விஞ்ஞானமும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதனால் வாழும் வரையிலும் இந்த உடம்பை புனிதமாக போற்றிப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் உள்ள மனிதனால் மட்டும்தான் வெற்றிகளைத் தொடவும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும் என்கிறார் நூலாசிரியர். இதுபோன்ற சில அற்புத மந்திரங்களையும், அவை செயல்பட்டு வெற்றியடைந்த ரகசிய கதைகளையும் இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர். மகிழ்ச்சியில் திளைக்க விரும்பிய உங்கள் கையில் தவழ்கிறது இந்த நூல். இனி வாழ்வெல்லாம் வசந்தமே.
RS. 102 More...by ஜி.எஸ்.எஸ்.
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்துபவை. உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதை அமானுஷ்யம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது? யாருக்கும் தீங்கு விளைவிக்காத காக்கைகள்கூட மனிதனை பழிவாங்குகின்றன. உயிரற்ற கார் கூட மனிதனை விரட்டி கொல்கிறது. ஏன் மரம், செடிகள் கூட மனிதனுக்கு எமனாக வாய்க்கின்றன. ஏன்? எப்படி? இது சாத்தியமா? இந்தப் புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதிர்ந்து போவீர்கள். உயிரற்ற பொருட்களுக்கு பழிவாங்கும் தன்மை இருக்க முடியுமா? அந்தப் பொருட்களின் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிக்கும் தொழிலாளியின் மனநிலை அந்தப் பொருளை ஓரளவு பாதிக்க வாய்ப்பிருக்கிறதாம். அதனால் அந்த மனிதனின் எண்ண ஓட்டப்படி அந்தப் பொருளின் தன்மையும் இருக்கும் என்பன போன்ற பகீர் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. மனித எண்ணங்களுக்கு ஒரு காந்த சக்தி உள்ளது. அது, மற்ற மனிதர்களையும் தாக்கும். ஜடப் பொருட்கள் மீது படியும் வாய்ப்பு இருக்கலாம். தனக்குப் பிடிக்காததைச் செய்யும் மனிதர்களை, காக்கைகள் திட்டுவதும் உண்டாம். தன் இனத்தவரை அழைத்துக் கொண்டு வந்து அந்த மனிதரைச் சுற்றி வளைப்பதும் உண்டாம். மரம், செடிகளுக்கும் அதிசய சக்தி இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். நம்மைப்போல் செடிகள் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. ஆனால் ஒரு செடி சிக்னல் அனுப்புவதும் அதை மற்றொரு செடி புரிந்துகொள்வதும் நடக்குமாம். இப்படி அமானுஷ்ய தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த நூலை சத்தம் போட்டு படிக்காதீர்கள். உங்கள் வீட்டுச் சுவருக்கும்கூட காதுகள் இருக்கலாம்!
RS. 70 More...by அ.முத்துலிங்கம்
தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தஞ்சம் அடையும் அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்... குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக்குக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம்விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. உயிரைப் பிழைக்க வைக்க மனிதர் எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது என்பதுதான் நாவலின் உயிர் நாடி. எழுத்தாளர் முத்துலிங்கம் அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர். ஒவ்வொரு வாக்கியத்தையும் தங்க நகை போல அலங்கரிக்கும் வித்தைக்காரர். படியுங்கள்... விறுவிறு அனுபவம் காத்திருக்கிறது. கடவுள் தொடங்கிய இடத்தைக் கண்டடையுங்கள்.
RS. 109 More...by சுமதி ஸ்ரீ
நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிரிக்க வைக்கிறது, சில நேரம் அழவைக்கிறது. முடிவாக வாழ்க்கை நம்மை பெரிதும் சிந்திக்கவும் வைக்கிறது. சிலரது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நீங்காத வடுக்களாகவும், ஒரு சில சம்பவங்கள் நினைக்கும்போதே சுகமாக அமைந்து விடுகின்றன. இங்கே நூலாசிரியர் சுமதிஸ்ரீ தன் வாழ்வில் நிகழ்ந்த பலவித அனுபவங்களை, நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளை, மனதில் காயம் ஏற்படுத்திய சங்கடங்களை அழகான நடையில் இலக்கிய நயத்தோடு, வார்த்தை ஜாலங்களின் கலவையோடு இங்கே நம் சிந்தனையைத் தூண்டும் நூலாக கொடுத்திருக்கிறார். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டிய மன உறுதியும், உத்வேகமும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விளையாட்டில்கூட ஆண்கள் & பெண்கள் என பாகுபடுத்தப்பட்டுள்ள நிலை, இறுதிப் பயணத்தில் எரியூட்டப்படும்போது, ‘ஆண்கள் உடலைவிட பெண்களின் உடல் எளிதில் எரிந்துவிடும். காரணம், அடுப்படியில் கிடந்து ஏற்கெனவே பாதி வெந்திருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுமிடத்தில் பெண்ணியத்துக்கான ஆதரவை, உள்ளத்தில் அழுத்தமாகப் பதியும்படி வார்த்தைகளால் வடித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிபூர்வமாக கொட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். பள்ளிப் பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.
RS. 56 More...