Cart is Empty
by ஜெயஸ்ரீ சுரேஷ்
கோடை, மழை, குளிர், பனி என காலங்களுக்கு ஏற்ப உணவு முறைகள் மாறுகின்றன. என்றாலும் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் அம்மாக்களுக்கு சவாலான விஷயமே! குழந்தைக்கு பால் கொடுப்பது முதற்கொண்டு காய்கறிகள், கீரைகள், பழங்கள், கிழங்குகள் என சத்தான உணவுகளை சுவையாக சமைத்தாலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவை கண்டுபிடிக்க ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் மூளைக்குள் புகுந்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அப்படி யோசித்து, தயாரித்து - பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்குக் கொடுத்தனுப்பினால் அவர்கள் திரும்ப அப்படியே கொண்டு வரும்போது அதைப்பார்த்து கோபப்படுவதா, பிள்ளை சாப்பிடவில்லையே என வருத்தப்படுவதா அல்லது சுவையாகக் கொடுக்கவில்லையோ என குழம்பி நிற்கிற நிலைமைதான் ஒவ்வோர் அம்மாவுக்கும். அப்படிப்பட்ட அம்மாக்களின் கவலையைப் போக்கி, காலை உணவு, மதிய உணவு, மாலை நேரச் சிற்றுண்டி என மூன்று வேளையும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு என்ன பிடிக்கும்? குடிப்பதற்கு என்ன பிடிக்கும்? என யோசித்து, குழந்தைகள் விரும்பும் வகையில் உணவு வகைகளைத் தயாரிக்கும் முறைகளைக் கூறுகிறார் நூலாசிரியர். இந்த உணவு வகைகளை ஆறு வயது முதல் இருபது வயதினர் வரை அனைவரும் விரும்பி உண்ணலாம் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். எல்லா வகை சத்தான பொருட்களையும் இணைத்து, குழந்தைகள் சாப்பிட மறுக்கும் பீட்ரூட்டை தோசையுடனும், கீரையை பூரியுடனும், முட்டைக்கோஸை வடையுடனும் வெண்டைக்காயை மசாலாவுடனும் இணைத்து, வெஜிடபுள் ராப்ஸ், சாக்லேட் பான் கேக், பிஸ்கட் மில்க் ஷேக், புராக்கோலி பனீர் பரோட்டா, ஃப்ரூட் பேல் பூரி, உருளைக்கிழங்கு முறுக்கு, ரோஸ் குல்கந்த் லஸி என குழந்தைகளைக் கவரும் விதத்தில் சொல்லியிருப்பது நூலின் கூடுதல் சிறப்பாகும். சத்தான உணவை குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டால், தாய்மார்கள் அடையும் திருப்தியை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்?
RS. 98 More...by கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்
அரிசி சாதம் சர்க்கரை நோய்க்கு அதிகம் வழிவகுக்கிறது என்று மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால் எந்த அரிசி அந்த அபாயத்துக்குக் காரணமாகிறது? தமிழர்களின் பாரம்பர்ய அரிசி வகைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்தபோது அந்த அரிசி வகைகள் அனைத்தும் எந்த நோயையும் ஏற்படுத்தியதில்லை. இரண்டு தலைமுறைக்கு முன்னால் இருந்த நம் முன்னோடிகளுக்கு சர்க்கரை நோய் என்றால் என்னவென்றே தெரியாது... காரணம் அவர்கள் உண்டது உன்னதமான, ஆரோக்கியத்தை அள்ளித் தந்த தமிழர்களின் பாரம்பர்ய அரிசி வகைகளைத்தான். பல்லாயிரம் வகை பாரம்பர்ய அரிசி வகைகள் மறைந்துபோனாலும் இன்னும் சில அரிசி வகைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தவிர்த்துவிட்டு பாலிஷ் போடப்பட்ட பளபளப்பான அரிசியை உண்பதால்தான் சர்க்கரை நோய் போன்ற சகல நோய்களுக்கும் காரணம். நம் நலம் காக்கும் பாரம்பர்ய அரிசிகளையும் அவை தரும் பல நன்மைகளையும் விளக்குகிறது இந்த நூல். ‘புரதம், விட்டமின்கள், தாது உப்புகள் உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம்போல மினுமினுக்கும்...’ இப்படி ஏராளமான ஆரோக்கியங்களை மட்டுமே தந்து உடலுக்கு வலிவும் பொலிவும் தரும் பாரம்பர்ய அரிசி வகைகளால், சுவையான பல உணவு வகைகளை செய்யலாம் என்பதை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். பாரம்பர்யத்தோடு நம் ஆரோக்கியத்தையும் காப்போம்!
RS. 88 More...by கே.ஸ்ரீதர்
சமீபகாலமாக ‘உணவே மருந்து’ என்னும் சொல் உலகெல்லாம் ஓங்கி ஒலித்து வருகிறது. நம் முன்னோர்களும் இதைத்தான் சொன்னார்கள். இதையே செய்தார்கள். உணவை மருந்தாக உட்கொண்டார்கள். உடலைப் பேணிக் காத்தார்கள். ஒரு நூற்றாண்டையும் கடந்து உயிர் வாழ்ந்தார்கள். இயற்கை உணவு நம்மை வாழவைக்கும். குறிப்பாக, கடலில் இருந்து கிடைக்கும் மீன் உணவு நமக்கு வலிமை சேர்க்கும். இன்று ‘அவசியம் மீன் சாப்பிடுங்கள்' என்று சொல்லாத மருத்துவர்களே இல்லை. இதய நோய் உள்ளவர்கள், கொழுப்பு அதிகரித்து உடல் பருமனாகிப் போனவர்கள் யாவருக்கும் மீன் உணவு ஒரு வரப்பிரசாதமாகும். மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, உடல் திடம், புத்திக் கூர்மை என்று மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மீன் உணவு. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்ற ஒரு வகை திரவ சக்தி, வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்த நோயும் அண்டாமல் இருக்க, இந்த திரவ சக்தி பெரிதும் உதவுகிறது. அமெரிக்காவில் தாய்மார்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளைவிட, அறிவுக்கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. நெய்தல் நிலமான கடலில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, கனவா போன்ற அசைவ உணவு வகைகளை சுவையாக பல விதங்களில் சமைப்பது எப்படி? அதாவது நாவிற்கு இனிய ருசியாக சமைப்பது எப்படி? என்ற ரகசியத்தை இந்த நூல் நமக்குச் சொல்லித் தருகிறது. புகழ்பெற்ற சமையற் கலை வல்லுநர் செஃப் தர் அவர்கள் பல்வேறு சுவை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர். எண்ணற்ற கடல் உணவு வகைகள் நமக்காக காத்திருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சுவை அறிய... பக்கத்தைப் புரட்டுங்கள்!
RS. 172 More...by தொகுப்பு: SEED அறக்கட்டளை
ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், பர்கர், பீஸா, பப்ஸ், பரோட்டா என உணவு என்கிற பெயரில் உடலின் குடல் இயக்கத்தை தடைசெய்யும் இந்த பண்டங்களால் பாதிப்படைந்தோர் பலர். நோயுற்றோர் சிலர். அவர்கள் புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களை சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வை அருளும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. கேப்பை, கம்பு இவற்றை மாவாக்கி முள்ளுருண்டை, கொழுக்கட்டை, அல்வா, பர்பி, இனிப்பு பண்டங்கள் மற்றும் கூட்டு, கிச்சடி, அவியல், துவையல், நவதானிய இட்லி, முடக்கத்தான் தோசை, அத்தி அல்வா, சிறுதானியங்களில் புட்டு, பாயசம், கூழ், பொங்கல், காலை உணவுகளை வரிசைப்படுத்தி, சோள மிக்சர், கொள்ளு ரசம், கருப்பட்டி பானம் பலவகையான பாரம்பர்ய உணவுகளை சமைக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது இந்த நூல். சிறுதானிய மற்றும் பெருந்தானிய, பழம்பெரும் அரிசி உணவுகள் சமைக்கத் தூண்டும் வகையில் படங்களுடன் இந்த நூல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். விதவிதமான பெயர்களில் அமைந்திருக்கும் இந்த உணவுகள் சிறுவர்களை ஈர்ப்பதோடு பெரியவர்களுக்கும் மாலைநேர உணவாக அமையும். சிறுதானிய உணவில் சமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் நல்ல வரப்பிரசாதம். நோயுற்றோர் மட்டுமன்றி, உணவு முறையை மாற்ற நினைப்பவர்களுக்கும், இந்த நூல் வழிகாட்டுவதோடு பாரம்பர்ய உணவு வகைகளை நம் கைக்குள் அடக்கிக் கொடுக்கிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற பாரம்பர்ய உணவுத் திருவிழாவில் சமையல் கலையில் தேர்ந்த வாசகிகள், பாரம்பர்ய உணவுகளின் செய்முறைகளை விளக்கி தங்கள் திறனை வெளிப்படுத்தினர். அந்த உணவு வகைகளை, புகைப்படங்களுடன் பரிமாறுகிறது இந்த நூல்.
RS. 130 More...by பாலு சத்யா
நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் ஒட்டுமொத்த இணையால் விளைந்தவையே உணவுப் பொருள். உயிராகவும் உணவாகவும் மருந்தாகவும் ஊட்டமாகவும் கருதப்படுகிறது. நாகரிக மாற்றங்களின்படி மனித முன்னேற்றத்துடன் வளர்ந்து, மாறி, பெருகி, கலந்து, உருக்கொண்டு, பிறந்து வருவதும் உணவுதான். உயிர்காக்கும் ஓர் உன்னத படைப்பில் மனித மாசுகளால் நச்சுக்கலந்த உணவும் ஒருபுறம் விஸ்வரூபம் எடுத்து வருவதும் உண்மை. இயற்கை முழுவதும் கெட்டு செயற்கையின் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தக் காலத்தில், ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் தட்டில் இருக்கும் உணவு இயற்கையா, செயற்கையா - கொல்லுமா, காக்குமா எனப் பல கேள்விகளோடு உண்டு முடிக்கிறோம். கம்பங்கூழ், இடியாப்பம், தோசை, பழைய சோறு, மீன், சாம்பார், புட்டு என இந்த நூலில் பட்டியலிடப்பட்டிருக்கும் உணவு வகைகளில் அச்சமின்றி உண்ணும் உணவு எது? அளவோடு உண்ணும் உணவு எது, தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை, நோயுற்றோர் அறவே அகற்ற வேண்டிய உணவு எது? அனைத்துத் தரப்பினரும் உட்கொள்ளும் உணவு எது என்று விளக்கமாகக் கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். இது வரை நாம் உண்டு மகிழ்ந்த உணவை ஒதுக்க முடியாது. அதற்கு மாற்று உணவு என்ன... நல்ல உணவு எது... விரும்பிய உணவை எந்த அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்... எந்த உணவை எந்த நேரத்தில் மட்டும் உண்ணலாம் என்பதை விளக்கியிருக்கும் நூலாசிரியர், உணவு வகைகள் தொடர்பான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உணவு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகளையும் இந்த நூலில் தந்திருக்கிறார். எது கெடாத உணவோ, அது கெட்ட உணவு. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஒருவித வாசனையுடன் கெட்டுப்போன தன்மையை வெளிப்படுத்தும் உணவுகளே நல்ல உணவுகள் என பல்வேறு தரப்பு ஆய்வின் முடிகள் கூறுகின்றன. தற்காலத்துக்கு ஏற்ப ஓர் உணவு புரட்சி ஏற்படுத்தி விழிப்புஉணர்வு தரும் நூல் இது.
RS. 110 More...by அ.உமர் பாரூக்
பண்டைய மரபு, கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியன உணவிலிருந்தே தொடங்கியது என்றால் மறுக்கமுடியாது. வாழ்க்கையின் மையமே வயிறுதான். தாயின் வயிற்றிலிருந்துதான் உணவு தொப்புள்கொடி வழியாக குழந்தைக்குச் செல்கிறது. அவ்வகை உணவில் நஞ்சு கலக்கப்பட்டால்? குழந்தைக்கு அடிப்படையான உணவு பால். அந்தப் பாலில் தொடங்கி, அனுதினம் உண்ணும் உணவில் பாதி விஷம் என்றால் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? ஆனால் அதுதான் நிஜம். உணவுப் பொருள் கலப்படங்களை அம்பலப்படுத்தி நம்மை அதிரவைத்து எச்சரிக்கிறது இந்த நூல். ‘ஆக்சிடோசின்’ - மாடு மூலம் மனிதன் உடலிலும் கலந்த ஒரு நச்சு. ‘ஹெக்சேன்’ - பெட்ரோலிய கச்சா எண்ணெயின் கழிவுப்பொருள். இது உணவு சமைக்கும் எண்ணெயில் கலக்கப்படுகிறது. ‘அலோக்சான்’ - எலிக்கு சர்க்கரை நோயை வரவழைக்கும் ரசாயனம். இதை சேர்த்துதான் மைதா மாவை மென்மையாக்குகிறார்கள். பாப்கார்னின் சுவையைக் கூட்ட, சேர்க்கப்படும் ரசாயனம் ‘டைஅசிட்டைல்’. நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க `வேக்ஸ்’ எனும் மெழுகு தடவப்படுகிறது. இதுபோன்ற அதிர்ச்சி தரும் தகவல்களைக் கொடுப்பதோடு எந்தெந்த உணவுகளில் எந்தவகை நச்சுகள் கலந்திருக்கின்றன, அதனால் என்னென்ன நோய் உண்டாகிறது? அவற்றுக்கு மாற்று என்ன? என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் உமர் பாரூக். டாக்டர் விகடனில் வெளியான தொடர் இதோ உங்கள் கைகளில் நூல் வடிவில். இயந்திரங்களும் நாகரிகங்களும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் இயற்கையோடு இணைந்து வாழாமலும், உணவு குறித்த விழிப்பு உணர்வை மக்கள் பெறாமலும் இருப்பது எதிர்காலத் தலைமுறையை நிச்சயம் பாதிக்கும். நச்சு கலப்பட உணவை அறிந்துகொள்ளச் செய்து நம் ஆரோக்கியம் காக்க வழிகாட்டுகிறது இந்த நூல்.
RS. 77 More...by ஜெ.கலைவாணி
தமிழ்நாட்டில் இப்போது அனைத்துத் துறைகளிலும் நம் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு முதல் சிறுதானிய சமையல் வரை அது நீள்கிறது. வெளிநாட்டு உணவு வகைகளிலும் பளீர் வெண்மை அரிசியிலும் மயங்கி அசிடிட்டி போன்ற பிரச்னைகளில் சிக்கிய தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக சென்னை போன்ற நகர மக்கள் சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை விரும்பி சாப்பிடும் நிலை விரைந்து பரவி வருவது வரவேற்கத்தக்கது. ‘நோய்நாடி நோய் முதல்நாடி' என்றான் வள்ளுவன். நோய்க்கான முதல் காரணமே நாம் உண்ணும் உணவுதான். புறச்சூழல்கள் எப்படியிருந்தாலும் நாம் உண்ணும் உணவு சரியானதாக இருந்தால் ஆரோக்கியத்துக்கு என்றும் ஏற்படாது ஆபத்து. சிறுதானிய உணவுகளில் ஆரோக்கியமான உடல்நிலைக்கு உத்தரவாதம் உண்டு. சிறுதானியங்களால் மூன்று வேளை உணவு வகைகள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற வகையில் மாலை நேர சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள், பானங்கள் என எல்லாவற்றையும் செய்யலாம் என்கிறார் இந்த நூலாசிரியர் கலைவாணி. சிறுதானியத்தைக்கொண்டு புதுவித சுவையில் கோலா உருண்டை, பஜ்ஜி, மஞ்சூரியன், ஸ்வீட்ஸ், சாலட்ஸ் என பல வகை ருசியான உணவுகளைச் சமைத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை அப்டேட் செய்துகொள்ளுங்கள்!
RS. 140 More...