Cart is Empty
வாழும் கலையை போதித்த மகான், வேதாத்திரி மகரிஷி. ஆன்மிக நெறிகளோடு லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களையும் உபதேசித்த அந்த மகான் கற்பித்த யோக கலைதான் இந்த ‘வாழ்க, வளமுடன்!’ இன்று செல்வச் செழிப்பில் வாழும் பலர், பத்துத் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தங்கம், வைரம், பணம், நிலம், வண்டி, வாகனம்... என கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வைரம் போன்ற உடலையும், தங்கமான மனசையும், நோயில்லாத வாழ்க்கையையும் பெற்றிருக்கிறார்களா என்றால்... அது கேள்விக்குறிதான்! நமது சந்ததிகளுக்குச் சொத்துகளைச் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, பரம்பரைக்கும் தொடரக்கூடிய நோய்களை-வியாதிகளை சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி வராமல் தடுக்க உடல்நலத்தையும், மனவளத்தையும் பேணிக் காக்க வேண்டியது அவசியம். வளமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமே பெரும் செல்வம். இந்த நூலில், ஆரோக்கியமான உணவுமுறைகளையும், அவற்றின் அளவு பயன்பாட்டையும், உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் எளிய உதாரணங்களோடு விளக்கி, புத்துணர்ச்சியோடு வாழ வழிகாட்டியிருக்கிறார், வேதாத்திரி மகரிஷி. கை, கால், மூச்சுப் பயிற்சிகளை எளிய முறையில் விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பு. அந்த மகானின் வேதவாக்கைக் கிரகித்து, அதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும், மனதைக் கவரும் வண்ணம் எழுத்தாக்கம் செய்திருக்கிறார் வி.ராம்ஜி. ‘சக்தி விகட’னில் தொடராக வந்த ‘வாழ்க, வளமுடன்!’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.