Cart is Empty
by விகடன் பிரசுரம்
ஒரு நிமிடத்தில் எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது ராக்கெட். எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற நிகழ்வுகளை, அந்த நிமிடத்திலேயே உலகின் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சமிட்டுவிடுகிறது தொலைக்காட்சி . அந்த வகையில், மனித உணர்வுகளை நிமிடங்களில் சொல்லும் கதைகள் இவை. வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை சிறுசிறு தேன் துளிகளைப்போல் திரட்டிய தேன் அடைகள். வாழ்க்கையோடு பின்னப்பட்ட நடைமுறை சம்பவங்களை உருக்கமாகவும், நகைச்சுவை உணர்வோடும் ஒருசில மணித்துளிகளில் சொல்லி, நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்தக் கதைகள், மனச் சோர்வுக்கு மருந்தாகவும் விளங்கும். ஆனந்த விகடனில் பரிசுபெற்ற ஒரு நிமிடக் கதைகள் வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. புதிய வடிவத்தில் மினி ஓவியங்களுடன் மிளிர்ந்த அந்த மின்மினிக் கதைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. கையடக்கமான இந்த நூலை பஸ், ரயில் பயணங்களின் போது எளிதாக எடுத்துச் சென்று படிக்கலாம்... ரசிக்கலாம்... ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகை ஊடுருவிப் பார்க்கலாம்!
RS. 50 More...by விகடன் பிரசுரம்
சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல், சிறுகதைகளில் கையாளப்படாத விஷயங்களே கிடையாது. மனித உறவுகள், உணர்ச்சிகள், பாசப் போராட்டங்கள் என்று ஒரு பக்கமும், சமூக விழிப்பு உணர்ச்சிக் கதைகள், அரசியலை துகிலுரித்துக் காட்டும் கதைகள், மத நல்லிணக்கத்தைப் போதிக்கும் கதைகள் என்று இன்னொரு பக்கமும் விரிந்து கிடக்கும் களம் சிறுகதைகளுக்கு இன்று வரை உண்டு. படிப்பவர்களை வசீகரிக்கும் காதல் கதைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. தமிழ் பருவ இதழ்களில் சிறுகதைகளுக்கு என்றுமே சிறப்பான இடம் உண்டு. அவற்றைப் படித்து ரசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெரியது! இன்று காலத்தின் கட்டாயமாக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கலாமே தவிர, அவற்றின் தரம் குறைவது கிடையாது. இதுவரை பத்திரிகைகளில் வெளிவராத புத்தம் புதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தில் பிரபலமான பதினைந்து எழுத்தாளர்களைக் கேட்டபோது, அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டு மகிழ்ச்சியு
RS. 50 More...by தபூ சங்கர்
உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவேயில்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது காதல் ஆப்பிள். கடவுளையே காதலனாக்கியது ஆண்டாளின் காதல். தன் காதலி செல்மா கராமி இறந்த பிறகும் அவள் கல்லறை வழியே செல்பவர்களைப் பார்த்து 'பாதம் அதிராமல் செல்லுங்கள்... என் காதலியின் தூக்கம் கலைந்துவிடப் போகிறது' என்று பாட வைத்தது கலீல் ஜிப்ரானின் காதல். பெரும் செல்வங்களை விட்டுவிட்டு வறுமையிலும் காதலைக் கொண்டாடியது ஜென்னி மார்க்ஸின் காதல். காற்று புகாத இடங்களிலும் காதல் நுழைந்துவிடும். காதல் தீரும் இடத்தில் காலம் உறைந்துவிடும். காதலின் கண்களுக்குத்தான் கலைடாஸ்கோப்பில் வானவில் தெரியும். ஒரு குடம் நீரூற்றி ஓராயிரம் பூ பூப்பது காதல் செடியில்தான். காதல் மனதால்தான் பனித்துளியில் வானம் பார்க்க முடியும். காதல் சில நேரங்களில் அழகான முட்டாள்தனம், சிலநேரங்களில் அடம் பிடிக்கும் குழந்தைத்தனம். அதனாலென்ன... மழையையும் இசையையும் ரசிக்க காரண காரியங்கள் எதற்கு? காதல
RS. 70 More...by ரா.கண்ணன், ராஜுமுருகன்
காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வண்ணங்களின் கலவைதான் இந்தப் புத்தகம். கண்ணதாசனின் வரிகளைப் பிள்ளையார்சுழியாகக் கையாண்டு ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ... இந்தக் கதைகள் கடல் கடலாய்க் காதலை விரித்துப்போட்டு அழகு காட்டுகின்றன. ஜாலியும் கேலியுமாய் சரவெடி கொளுத்திய வித்தியாச எழுத்துநடைதான், இந்தக் கதைகளின் ஹைலைட். ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் நாமும் நம் சம்பந்தப்பட்ட சம்பவமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது. சமூகப் புழக்கங்களில் முழுக்க நனைந்தவர்களாக இன்றைய இளைய தலைமுறையின் நரம்புகளுக்குள் ஊடுருவி உள்மனம் அறிந்தவர்களாக ரா.கண்ணன், ராஜுமுருகன் இருவரும் காதலைத் திகட்டத் திகட்ட பந்தி வைத்திருக்கிறார்கள். மொட்டை மாடி, ஒயின் ஷாப், மருத்துவமனை, தெருமுனை என நாம் உலவிவந்த சகல இடங்களிலும் ஒளித்துவைத்துப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைப்போல் இந்தக் கதைகள் சொல்லும் சேதிகள் அத்தனையும் நமக்கே நமக்கேயானது. உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், ஒரு மலையாளி நர்ஸுக்குக்காக பேசிக்கொள்ளாமல் ரணமாகிக் கிடந்தது முதல் காதலில் தோற்றவன் ரவுடியாக உருமாறி நின்றதுவரை இந்தப் புத்தகத்தைப் புரட்டப் புரட்ட நீங்கள் சம்பந்தப்பட்ட நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே இந்தத் தனித்துவ எழுத்துக்களுக்குக் கிடைத்த வரவேற்பு எக்கச்சக்கம். மயிலிறகுத் தொகுப்பாக மலர்ந்திருக்கும் ‘ஒன்று’, உங்கள் மனதை நிச்சயம் வென்று காட்டும்!
RS. 70 More...by பாரதியார்
‘‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’’ - முண்டாசுக் கவிஞன் பாரதி அன்றே வைத்த கோரிக்கை இது. இறவாத புகழுடைய பாரதி கவிதைகளின் முழுத் தொகுப்பே இந்த நூல். தமிழ் மொழியின் தனிநிகர் அடையாளமான பாரதி பக்தி, காதல், கம்பீரம், சுதந்திரம் எனப் பன்முகத் தளங்களிலும் கவி பாடிய சிந்தனைக்காரன். அவன் ஊட்டிய உணர்வுக்கு ஈடாக & உண்மைக்கு நிகராக பெருங்கவிகள் இன்னும் பிறக்காத நிலையில், அவனுடைய பாடல்களின் தொகுப்பு அவசியமாகிறது இந்தத் தமிழ் மண்ணுக்கு. முடமையில் இருந்துப் பிடுங்கியும், முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைத்தும் பாரதி இந்த தேசத்துக்குப் பாடல்களின் வழியே ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானது அல்ல. கால ஆற்றில் அடித்துச் செல்லப்பட முடியாத அளவுக்கு மனசாட்சி வழிநின்று பாரதி படைத்த கவிதைகளை இன்றைய இளைய தலைமுறையின் கைகளில் சேர்க்கும் காரியமே இந்தப் புத்தக உருவாக்கம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவியாக விளங்கிய பாரதி, சமுதாய மேன்மைக்காக சமரசமற்றுப் போராடிய வல்லமைக்காரன். பன்மொழிப் புலமையும் எதற்கும் தலைவணங்காப் பெருங்குணமும் கொண்ட பாரதி, தமிழ்கூறும் நல்லுலகின் வீரிய வெளிச்சம். காலத்தை வென்று நிற்கும் அவருடைய கவிதைகளை அனைவருடைய பார்வைக்கும் எடுத்துச் செல்லும் விதமாக அழகிய வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்தப் பொக்கிஷப் புத்தகம். பாரதியின் கவிதைகளோடு மட்டும் அல்லாமல், அவருடைய அரிய புகைப்படங்கள், கையெழுத்து, கடிதம் எனப் போற்றிப் பாதுகாக்கத்தக்க ஆவணங்கள், அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் என இந்தப் புத்தகத்தில் பதியமிடப்பட்டிருக்கும் அம்சங்கள் அதியற்புதமானவை. காலப்பெருவெளியின் கம்பீர அடையாளமான பாரதியின் கவிதைகளைப் படியுங்கள்; பலருக்கும் பரிசாக அளியுங்கள்; கடைக்கோடி மக்களின் மனங்களிலும் கரங்களிலும் பாரதியைப் பதியுங்கள்!
RS. 168 More...by என். லிங்குசாமி
முதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற ஒற்றை ஆர்வத்தில் தன்னைச் சுற்றிய அத்தனை பரபரப்புகளையும் புறந்தள்ளிய அவருடைய தனித்தன்மை, ஒரு கவிதைபோல எனக்குள் படிந்த கணம் அது. அதன்பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்து லிங்குசாமியைச் சந்தித்தபோது, அவர் முன்னணி இயக்குநர்; முக்கியத் தயாரிப்பாளர். இவற்றை எல்லாம்விட அரிய அரியணையாக கவிஞர், ஓவியர் என்கிற கம்பீரத்தைச் சுமப்பதிலேயே அவருக்குப் பெருமிதம். சிறு குழந்தைச் சிலிர்ப்போடு அவர் ஓவியம் தீட்டும் அழகைக் கண்டபோது, பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த கவிதை கணம் அப்படியே இப்போதும்! தனக்குள் இருக்கும் பேரார்வம் கொண்ட ரசனைக்காரனை எந்தச் சூழலிலும் தன் இடுப்பைவிட்டு இறக்கிவிடவில்லை அவர். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு போஸ்ட் கார்டுக்குப் பதில் எழுதிய அப்துல் கலாமைப்போல், நிமிடங்களுக்கு விலை பேசும் அரியணையில் இருந்துகொண்டு கவிதைக்கும் ஓவியத்துக்கும் நேரம் ஒதுக்கும் லிங்குசாமி ஆச்சர்யக்காரர். ‘இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்?’ இந்த ஒரு கவிதை போதும்... லிங்குசாமி சாகா வரம் பெற்ற இளமைக்காரர் என்பதற்கு! ‘அரிசியைச் சுமந்து வரும் எறும்பு சிரிக்கிற மாதிரியே தெரிகிறது’ என்பதில் புரிகிறது லிங்குசாமியின் குழந்தைத்தன்மை. நதியோடும் இலையாக கவிதைகளில் நம்மைச் சுமந்து செல்லும் லிங்குசாமி, ஓவியங்களில் நதியாகவே மாறி நம்மை நனைக்கிறார். பார்ப்பதா படிப்பதா என்கிற ஆர்வத்தில் இதயமே இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுகிறது. ‘லிங்கூ’ படித்தால் நீங்கள் நனைவீர்கள்... ‘லிங்கூ’ பார்த்தால் நீங்கள் மூழ்குவீர்கள்!
RS. 67 More...by ம.காமுத்துரை
வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக இருக்கும். நுணுக்கமோ நூதனமோ அறியாத கிராமங்களின் வெள்ளந்தித்தனத்தை வெளிச்சமிட்டதில் இவருடைய பங்களிப்பு மகத்தானது! இந்தக் கதைகளில் காமுத்துரை, கிராமத்தின் சுத்தமான இதயத்தை எடுத்துவைக்கிறார். கவுண்டரம்மா தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பணத்தைக்கூட ஒரு கொள்கைக்காக உதறித் தள்ளுவது மனதைப் பிசைகிறது. அந்த மனதை இந்த நகரச் சந்தையில் எங்கே தேடுவது? பாத்திரங்களாக கிராமத்தின் இதயத்தை அடையாளம் காட்டுவது மட்டும் அல்ல... கிராமத்தின் அத்தனை விதமான சூழலைச் சுட்டிக்காட்டுவதிலும் சிலிர்த்தெழுகிறது காமுத்துரையின் எழுத்து. மாட்டுக்கு ஊசி போடும் சம்பவத்தை இவர் விவரிக்கும் கணம் சொந்த கிராமத்தின் சிறு வயது நினைவுகள் அப்படியே மனம் முழுக்க ஆக்கிரமிக்கிறது. நகைச்சுவைக்கும் குறைவே இல்லை. கம்பவுண்டர் இல்லாமல் மாட்டு டாக்டர் வெளியே வரமாட்டாராம். மாடு உதைக்குமா உதைக்காதா என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்குத்தான் கம்பவுண்டர் உதவி. எத்தகைய எழுத்து நயம்! சின்னச் சின்ன நுணுக்கங்களாக, சிலிர்க்கவைக்கும் விவரிப்பாக, உணர வேண்டிய நியாயமாக, பதற வேண்டிய இதயமாக இவருடைய கதைகள் நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. குல்பி ஐஸ்காரனின் காதலில் தயக்கமும் மயக்கமுமாக அலையடிக்கும் எண்ணங்களில் பரிதவிக்கிற மனது, இறுதியில் காசு கொடுக்காமல் ஐஸ் எடுத்துக்கொண்டு ஓடும் நாயகியாக மாறித் துள்ளுகிறது. ஜஸ்ட், ‘ஐ டூ லவ் யூ’தான்... ஆனால், அதில் எத்தனை பரவசம். அசாத்திய நடையில் மனதை அள்ளும் பெருமைமிகு சிறுகதைத் தொகுப்பு இது!
RS. 50 More...by அறிவுமதி
வாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடலின் ஆழத்துக்கும், வானின் உயரத்துக்கும் பயணித்து மிக நாகரிகமாக தந்திருக்கிறது இவரது தமிழ். இவருடைய சிந்தனா சக்தியும், படிம உவமானங்களும் அபாரம். மெல்லிய வண்ண மலர்களின் நறுமணமும், மனம் சில்லிடவைக்கும் புற்கள் நனைத்து ஓடிவரும் தெளிந்த நீரோடையும், கைதேர்ந்த சிற்பியின் நுட்பத்தில் ததும்பி நிற்கும் சிற்பம் போலவும், நிஜத்தைவிட ஆயிரம் காவியங் களைக் கொடுக்கும் அழகான ஓவியம் போலவும் ஒருசேரக் கலந்து இந்த நூலை வார்த்தையில் வார்த்திருப்பது படிப்பவரை வியக்கவும், பரவசத்தில் லயிக்கவும், இன்பத்தில் திளைக்கவும் வைக்கும். இருபால் இணைந்துதான் மூன்றாம் பாலைப் பருகலாம். ஆனால், இந்த நூல் ஆணுக்குப் பெண்ணாகவும், பெண்ணுக்கு ஆணாகவும் இருந்து திகட்டாத இன்பத்தைத் தருகிறது என்றால், இருவரும் சேர்ந்து படிக்கும்போது அடையும் பரவசத்தைச் சொல்லவும் வேண்டுமோ. இந்த நூலுக்கான கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னுரை, ஓர் ஆய்வுக்கான இலக்கணத்தோடு அழகு சேர்க்கிறது. மூன்றாம் பாலின் தொடர்ச்சியாக சுண்டக் காய்ச்சிய தமிழில் இந்த ‘மழைப் பேச்சு’ ஆனந்த விகடனில் வெளிவந்தபோது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில், இப்படி ஒரு நாகரிகமான மொழி இருப்பதை உணர்த்துகிறது இந்த நூல். ஆண்&பெண் உறவின் இயற்கை தொடர்ந்து உள்ள வரை சர்க்கரையாக இனிக்கும் இந்த நூல் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
RS. 60 More...by நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் ஊர் அறிந்த எழுத்தாளர். விருதுகள் வாங்கிய எழுத்தாளர். அவர் ஆனந்த விகடன், விகடன் தீபாவளி மலர், விகடன் பவழ விழா மலர் ஆகியவற்றில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். அவர் தனக்கே உரிய நடையில் கதைகளை எழுதியிருக்கிறார். அங்கங்கே கிண்டலுக்குக் குறைவேயில்லை. கிண்டலின் ஊடே எது நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் சாமானியர்கள் சந்திக்கும் அவலங்களை உற்று நோக்கி அதைக் கதைப்படுத்தியிருக்கிறார். வாழ்க்கையைத் தியாகம் செய்து பிள்ளையை வளர்த்த பிறகு முதுமைக் காலத்தில் மீண்டும் ஒரு வைராக்கிய வாழ்க்கையைத் தொடரும் பேச்சியம்மை கதை மனதைப் பிசைகிறது. இது கதையல்ல, வாழ்க்கையின் யதார்த்தம். இப்படிப்பட்ட தாய்மார்களை அடுத்தத் தெருவில், நாம் வாழும் ஊரில் பார்க்கத்தானே செய்கிறோம். நூல் ஆசிரியர் அலுவல் நிமித்தமாக வட நாட்டில் வாழ்ந்தவராதலால், மும்பை, தாணே, கோவா போன்ற ஊர்களையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் வைத்துக் கதையைப் பின்னியிருப்பதும், இந்தி, மராத்தி மொழிகளையும் தன் கதைகளில் கையாண்டிருப்பதும், அதன் மாந்தர்களை பாத்திரங்களாகப் படைத்திருப்பதும் சுவையை கூட்டுகிறது. ஆனால், தமிழகமானாலும் வட மாநிலமானாலும் உணர்வுகள் ஒன்றே என்ற இழை கதைகளில் சன்னமாக பின்னப்பட்டிருப்பது கதைகளின் வலிமை. கதைகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.
RS. 50 More...by சு.வெங்கடேசன்
இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே! ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம்? எத்தனை சோகம்? எத்தனை நெகிழ்ச்சி? இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் பரம்பரையாக உருவானது? அந்த மக்களின் வாழ்வியல் என்ன? இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன? கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின? ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்!
RS. 364 More...