Cart is Empty
வாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடலின் ஆழத்துக்கும், வானின் உயரத்துக்கும் பயணித்து மிக நாகரிகமாக தந்திருக்கிறது இவரது தமிழ். இவருடைய சிந்தனா சக்தியும், படிம உவமானங்களும் அபாரம். மெல்லிய வண்ண மலர்களின் நறுமணமும், மனம் சில்லிடவைக்கும் புற்கள் நனைத்து ஓடிவரும் தெளிந்த நீரோடையும், கைதேர்ந்த சிற்பியின் நுட்பத்தில் ததும்பி நிற்கும் சிற்பம் போலவும், நிஜத்தைவிட ஆயிரம் காவியங் களைக் கொடுக்கும் அழகான ஓவியம் போலவும் ஒருசேரக் கலந்து இந்த நூலை வார்த்தையில் வார்த்திருப்பது படிப்பவரை வியக்கவும், பரவசத்தில் லயிக்கவும், இன்பத்தில் திளைக்கவும் வைக்கும். இருபால் இணைந்துதான் மூன்றாம் பாலைப் பருகலாம். ஆனால், இந்த நூல் ஆணுக்குப் பெண்ணாகவும், பெண்ணுக்கு ஆணாகவும் இருந்து திகட்டாத இன்பத்தைத் தருகிறது என்றால், இருவரும் சேர்ந்து படிக்கும்போது அடையும் பரவசத்தைச் சொல்லவும் வேண்டுமோ. இந்த நூலுக்கான கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னுரை, ஓர் ஆய்வுக்கான இலக்கணத்தோடு அழகு சேர்க்கிறது. மூன்றாம் பாலின் தொடர்ச்சியாக சுண்டக் காய்ச்சிய தமிழில் இந்த ‘மழைப் பேச்சு’ ஆனந்த விகடனில் வெளிவந்தபோது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில், இப்படி ஒரு நாகரிகமான மொழி இருப்பதை உணர்த்துகிறது இந்த நூல். ஆண்&பெண் உறவின் இயற்கை தொடர்ந்து உள்ள வரை சர்க்கரையாக இனிக்கும் இந்த நூல் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்