Cart is Empty
by சிவதர்ஷினி
மதம் ஒரு அபின் என்றார் மாமேதை லெனின். உலகத்தில் மதத்தை மையமாக வைத்துப் பல போர்கள் மூண்டுள்ளன. ஆனால், மதக் கிளர்ச்சி ஒன்று சுதந்திரத்துக்கான வித்து ஒன்றை விதைத்தது. வேறெங்கும் இல்லை; இந்தியாவில்தான்! ஆம்! சிப்பாய்ப் புரட்சி! இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன் தனது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் அடிமைப்படுத்தினான். இரு மதத்தினரின் பிரிவினைக்கு தூபம் போட்டான். பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவன் இரு மதத்தினரின் பிடியிலும் சிக்கிக்கொண்டான். எப்படி நடந்தது இது? 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்’ என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள்? எத்தனை படுகொலைகள்? குதிரையில் தன் குழந்தையைச் சுமந்துகொண்டு வீரப் போர் புரிந்த ஜான்ஸி ராணியின் தியாகம் எத்தகையது? ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது? வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தில், சிப்பாய்க் கலகத்தின் ஒவ்வொரு நிலையையும், கலகம் நடந்த நாட்களின் திகில் சம்பவங்களையும் கால வரிசையோடு அழகான நடையில் நமக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர் சிவதர்ஷினி. இந்த நூலைப் படித்தால் சுதந்திரத்தைப் பெற, தியாகிகள் சிந்திய ரத்தத்தின் சிறப்புகளை நம் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும்; சுதந்திரத்தின் அருமை தெரியும் என்பது திண்ணம்.
RS. 50 More...by கே.டி.திருநாவுக்கரசு
தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. கல்வெட்டுகள், தொல்பொருள் சின்னங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், பழைய காசுகள் போன்றவை இராசராசனின் பெருமைகளை பறைசாற்றும் வரலாற்று ஆதாரங்களாக உள்ளன. தன் ஆட்சியில் நிழ்ந்த நிகழ்ச்சிகளைக் கால வரைமுறைப்படுத்தி, இனிய தமிழில் ‘மெய்க்கீர்த்தி’யாக அவன் வெளியிட்டுள்ளான். அவை, அரசியல் வரலாற்றை எழுதுவதற்கு உறுதுணையாக உள்ளன. இந்த மெய்க்கீர்த்தி முறையைப் பின்னால் வந்த அரசர்கள் பலரும் போற்றிப் பின்பற்றியுள்ளனர். சோழ நாடு, பெரிய மலைகள் இல்லாத பெருநிலப் பரப்பாக விளங்கியது. காவிரி, பல கிளையாறுகளாகப் பாய்ந்து அந்த நாட்டை வளமடையச் செய்தது. நீர் வளமும், நில வளமும் கொண்ட சோழ நாட்டைச் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று சான்றோர்கள் புகழ்ந்தனர். நீர் வளமும், நிலவளமும் இருந்தால் மட்டும் ஒரு பேரரசை ஆட்சி செய்துவிட முடியுமா? ‘கோன் எவ்வழியோ குடி அவ்வழி’ என்பதில்தானே ஒரு நாட்டின் வளமும், நலமும் அடங்கியுள்ளன! மாமன்னன் இராசராசனின் புகழுக்கு தஞ்சை பெரியகோயில் ஒன்றே போதும். அது வானுயர்ந்து நிற்கும் நற்சாட்சியாக உள்ளது. இராசராச சோழன் அரியணையில் ஏறிய காலத்தில் வட இந்திய அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன; எங்கும் உட் பகையாகிய புகை மண்டலம் படர்ந்திருந்தது. வெளி நாட்டவருக்குத் தாய்த் திருநாட்டைக் காட்டிக் கொடுக்கும் புல்லுருவிகள் நாட்டின் பல பகுதிகளில் பொறுப்புமிக்க பதவிகளில் இருந்தனர். இத்தகைய இன்னல்களும் இடர்பாடுகளும் நிறைந்திருந்த காலத்தில், விந்திய மலைக்குத் தெற்கே, இராசராசன் சோழப் பேரரசை நிறுவியது எப்படி? அவனது ஆட்சியில் தென்னாடு பொன்னாடாக மாறியது எப்படி? தமிழனின் பண்பாட்டை, தமிழனின் வாழ்வியலை இராசராசனின் ஆட்சி எவ்வாறு பிரதிபலித்தது என்பதை நூல் ஆசிரியர் கே.டி.திருநாவுக்கரசு விவரித்துள்ளார். வாருங்கள்! இராசராசனின் வரலாற்றை அறிவோம்! தமிழனின் வாழ்வியலை உணர்வோம்!
RS. 105 More...by ஜி.எஸ்.எஸ்.
மனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் போன்றவற்றை நாம் உலக அதிசயங்கள் என்கிறோம். மனிதனின் செயற்கறிய சிறந்த செயல்களும், அவனால் படைக்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த படைப்புகளும் அதிசயங்கள் என்றே அழைக்கப்பட்டுவருகின்றன. அறியப்படாத அதிசய ரகசியங்கள் உலகத்தில் இன்னும் எத்தனையோ உள்ளன & சிதம்பர ரகசியத்தைப்போல. ஆனால், சில ரகசியங்கள் ஆண்டுகள் பல கடந்து வெளியாகியிருக்கின்றன. அவ்வாறான அதிசயங்களில் பல்வேறு மர்மங்கள் புதைந்திருக்கின்றன. புகழ்பெற்ற மனிதர்களுக்குப் பின்னே ரகசியங்கள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. மாவீரன் நெப்போலியனின் இறுதி நாட்கள் எப்படி இருந்தன? அவன் மரணத்தின் மர்மம் என்ன? காலத்தை வென்று நிற்கும் கல்லறைகளான பிரமிடுகளில் ஒளிந்திருப்பவை எவை? சீனப் பெரும் சுவர் சொல்லும் கதை என்ன? விமானங்களை விழுங்கும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியம் எப்படிப்பட்டது? மூக்கின் மேல் விரலை வைக்கும் அதிசயங்களின் ரகசியங்களை இந்த நூலில் போட்டு உடைத்திருக்கிறார் நூல் ஆசிரியர். பொது அறிவுப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை படியுங்கள். மர்மங்கள் சூழ்ந்த அதிசய உலகின் ரகசிய தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்களும் அதிசயம் அடைவீர்கள்.
RS. 70 More...by டி.கே.இரவீந்திரன்
இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றினை, கலாசாரத்தை, மதம் மற்றும் மொழி சார்ந்த விஷயங்கள் என சகலத்தையும் மாற்றியமைத்தவர்கள் மொகலாயர்கள். மத்திய ஆசியப் பகுதியில் இருந்து 14-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த மொகலாயர்கள் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆதிக்கம் வரும் வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் இந்தியாவில் கோலோச்சியவர்கள். மொகலாயர்களின் ஆட்சி நிறைவடைந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற விஷயங்கள் இன்றும் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் தாஜ்மஹாலும், செங்கோட்டையும் அவர்களின் பெருமைகளைப் பறைசாற்றிக்கொண்டு, அழிக்கவொண்ணா சாட்சியங்களாக கம்பீரமாக காட்சி தந்துகொண்டிருக்கின்றன. பாபர் முதல் ஒளரங்கசீப் வரை மொகலாயர்கள் சந்தித்த துரோகங்கள், படையெடுப்புகள், பதவிக்காக தந்தை மகனுக்கு இடையே, சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள், அவர்களின் ஆட்சி முறைகள், செயல்பாடுகள், ஒளரங்கசீப் ஆட்சிக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்ஜியம் எப்படி சரிந்தது போன்றவற்றை, மொகலாய வரலாற்றில் நாம் அறியாத பல தகவல்களைத் தரும் நூல் இது. இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியை தன் ஆட்சிப் பகுதியாக வைத்திருந்த ஒளரங்கசீப், குல்லா தைப்பதில் கைதேர்ந்தவர். அப்படி அவர் தைத்த குல்லாக்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி, அதில் வந்த வருமானத்திலேயே தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டது போன்ற அரிய செய்திகளைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நானூறு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று மொகலாயர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளையும் வாழ்வியலையும் நமக்குக் காட்டும் இந்த நூல், வாசிப்பவர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் வாய்த்த வரப்பிரசாதம்!
RS. 165 More...by எம்.எஸ்.கோவிந்தசாமி
மாபெரும் நிலப் பரப்பை அரசாண்ட பெருமைக்கு உரியது மௌரியப் பேரரசு. இன்றைய இந்தியாவின் எண்பது சதவிகித நிலப் பரப்பையும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள நாடுகளையும் இணைத்து மாபெரும் பேரரசை உருவாக்கி ஆட்சி செய்தவர் பேரரசர் அசோகர். அசோகர் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கலிங்கப் போரும் கல் தூணும் அசோகச் சக்கரமும்தான். ஆனால், அதற்கும் மேல் அசோகர் தன் மக்களைக் குழந்தையாக பாவித்து ஆட்சி செய்தவர்! “எல்லா மாந்தரும் என்னுடைய குழந்தைகளே. என்னுடைய குழந்தைகளுக்கு எவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித வளங்களும் (பேறுகளும்) மகிழ்ச்சியும் ஏற்படவேண்டுமென விரும்புகிறேனோ அவ்வாறே எல்லா மாந்தருக்கும் கிட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என்றவர் அவர். ஒரு ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும்? மக்களுக்கு அவன் ஆற்ற வேண்டிய கடமை என்ன? அரசுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன? இப்படி அவன் ஆட்சி செய்ததும் தங்கள் கடமைகளை மக்களைச் செய்யவைத்ததும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பொருந்தும். அசோகர் வெளியிட்ட அரசாணைக் கல்வெட்டுகள் அவரைப் பற்றி நாம் அறிய உதவியாக இருக்கின்றன. இந்த நூல் அசோகருடைய வரலாற்றைக் கூறுகிறது. சந்திரகுப்தருக்கும், கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகேடருக்கும் இடையே நடந்த போருக்கு பின்னால், ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் சந்திரகுப்தர் கிரேக்க மன்னனுக்கு 500 போர் யானைகளை வழங்கினார். அதற்கு பதிலாக கிரேக்க மன்னன் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், காந்தாரம், இந்துகுஷ் மலைப் பகுதிகளை சந்திரகுப்தருக்கு வழங்கினார். இதைப் போன்ற பல வரலாற்று ஆதாரங்களை விளக்குகிறார் நூலாசிரியர். நாம் பாட புத்தகத்தில் படித்த, ‘குளம் வெட்டினார், மரம் நட்டார்’ போன்றவற்றைவிட, நாம் பொதுவாக அறிந்துவைத்திருப்பதைவிட அதிகமாகப் பல விஷயங்களை நூல் ஆசிரியர் எம்.எஸ்.கோவிந்தசாமி எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் சுவையாக அளித்துள்ளார். இந்தப் புத்தகம் வரலாற்று நூலாக இருந்தாலும் பல புதிய விஷயங்கள் புதிய கோணத்தில் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் என்பது திண்ணம்.
RS. 60 More...by அ.ராமசாமி, பி.ஏ.,
இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்தாலும் தன் நெஞ்சத்தில் தமிழ்நாட்டுக்கான தனி இடத்தை தாரை வார்த்தவர் மகாத்மா காந்தி. ‘நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே’ என்று வருந்தியவர். தமிழ் மொழியின் இலக்கியங்களையும் திருக்குறளையும் படிப்பதற்காக தமிழ் மொழி ஞானம் தனக்கு இல்லையே என்று ஏங்கியவர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழைக் கற்றவர். தமிழ் கற்றுத்தர ஒருவரை தனது ஆசிரமத்தில் வைத்திருந்தவர். காந்தி இத்தகைய பற்று, பாசத்தை வேறு எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழி மீதும் வைத்திருந்ததில்லை. இத்தகைய உள்ளார்ந்த ஈடுபாட்டின் காரணமாகத்தான் சாதாரண மனிதராக இருந்தபோதும், தேசத் தலைவராக மலர்ந்தபோதும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டுக்கு வருகை தருவதை மகாத்மா வழக்கமாகவே வைத்திருந்தார். 1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழ்நாட்டில் அண்ணலின் காலடி பட்டுள்ளது. அவர் ‘மகாத்மா’ எனக் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் அவரை மகானாக தரிசித்தார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். வாழ்த்து மடல்கள் குவிந்தன. கதருக்காகவா, தீண்டாமைக்கு எதிராகவா... எதற்கு நிதி கேட்டாலும் மறுக்காமல் அள்ளிக் கொடுத்தார்கள் தமிழ் மக்கள். காந்தியின் 50 ஆண்டு காலத் தமிழ்நாட்டுப் பயணத்தின் மூலமாக இதன் வரலாற்றை, சமூக சூழ்நிலையை, மக்களின் வாழ்க்கையை, அரசியல் விழிப்பு உணர்வை அறிய முடிகிறது. ஆசிரியர் அ.ராமசாமியின் இந்தப் புத்தகம் வருங்காலத் தலைமுறைக்கு காந்தியையும் தமிழகத்தையும் முழுமையாக உணர்த்தும்!
RS. 298 More...by ஐ.சண்முகநாதன்
‘‘வரலாற்றை அறியாதவர்கள் ஒருபோதும் வரலாற்றைப் படைக்க முடியாது!’’ என்பார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் உண்மைகளையும் அறிவதே நிகழ்காலத்தியவர்களின் முதல் பாடமாக இருக்க முடியும். அந்த விதத்தில் ஆகச்சிறந்த அறிவுக் களஞ்சியமாக - கடந்த காலத்தின் கண்ணாடியாக மிளிர்ந்திருக்கிறது இந்தப் புத்தகம்.உலகம் தோன்றிய நிகழ்வு தொடங்கி இன்றைய காலம் வரை உலகத்தில் நிகழ்ந்திருக்கும் அத்தனைவிதமான நிகழ்வுகளையும் ஆதாரபூர்வத்துடனும், புள்ளிவிவரக் குறிப்புகளுடனும் மிக அழகாகத் தொகுத்திருக்கிறார் நூல் ஆசிரியர் ஐ.சண்முகநாதன். மூத்த பத்திரிகையாளரின் ஆக்கபூர்வ முயற்சியால் உள்ளங்கையில் உலகம் புரட்ட உதவுகிற வரமாக இன்றைய தலைமுறைக்கு வாய்த்திருக்கிறது இந்த வரலாற்றுக் களஞ்சியம். மொழிகளின் தோற்றம், உலகளாவிய புகழ் பெற்றவர்களின் வரலாறு, உலகை உலுக்கிய நிகழ்வுகள், சிலிர்க்கவைத்த சிறப்புகள், உலகப்போர்கள் குறித்த தகவல்கள் என பல நூறு புத்தகங்களைப் படித்தாலும் அறிய முடியாத பேரற்புதத் தகவல் தொகுப்பாக வியக்கவைக்கிறது இந்தப் புத்தகம். மிகுந்த சிரத்தையோடு இந்தப் பதிவுகளைத் தொகுத்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு இன்றைய இளைய தலைமுறை நிறைய கடமைப்பட்டிருக்கிறது.உலகம் சுற்றிய மாவீரர்கள், விஞ்ஞான வித்தகர்கள், புகழ் பெற்ற புரட்சியாளர்கள் என மாணவர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் அறிய வேண்டிய அற்புத மனிதர்களைப் பற்றி சுவாரஸ்யம் மிகுந்த நடையில் விவரிக்கிறது இந்தப் பெருமைமிகு புத்தகம். இந்தியாவின் கடந்தகால நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் பதிவுகள் வரலாற்றுப் புத்தகங்களை விஞ்சத்தக்கவை. இதிகாச காலம் தொடங்கி இன்றைய அரசியல் நிலவரங்கள் வரை தேர்ந்த நடையில், தெளிவான முறையில் தொகுத்திருப்பது காலத்துக்கும் பாராட்டத்தக்கது. தமிழகத்தின் அடையாளங்களாக விளங்கும் சாலச்சிறந்த தமிழர்களை வகைப்படுத்தி, இன்றைய தலைமுறைக்கு அவர்களின் சிறப்புகளை விளக்கி இருப்பது காலத்திய கடமையாகச் சிலிர்க்க வைக்கிறது. வரலாறு, அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், போர், புரட்சி என அத்தனைவிதமான நிகழ்வுகளையும் நடுநிலைப் பார்வையோடு பதிவு செய்திருக்கும் இந்த நூல் அனைவரும் அறிய வேண்டிய தகவல் ஆயுதம்.
RS. 189 More...by கவிக்கோ அப்துல் ரஹ்மான்
இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் தமிழர் நிலமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த அரசன் ஒருவன், யாழ் மீட்டுவதில் வல்லமைமிக்க தொண்டை நாட்டு பாணன் ஒருவனுக்கு, மணற்றி என்ற பகுதியைப் பரிசாகத் தந்தான். அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் என்றாகியது என்றொரு கதையும் உண்டு. இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளின் தலைநகரமாகவும் இருந்தது யாழ்ப்பாணம். வரலாற்றுக் கால இலங்கை, யாழ்ப்பாணத்தின் பழம்பெருமை, அங்கு நிகழ்ந்த இனக் கலவரங்களைப் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் 2003-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இலங்கையின் வரலாறு பற்றியும் தமிழருக்கும் சிங்களருக்கும் இடையே ஆதியிலிருந்து நடந்துவரும் மோதல்கள் பற்றியும் தமிழ் மக்கள் எவ்வாறெல்லாம் தாக்கப்பட்டார்கள், போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த போர், சமாதானம் ஆகியன பற்றியும் பதிவு செய்திருக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஈழத் தமிழர்களின் இன்னல் வாழ்வைப் பதிவு செய்துள்ள ஆவணம், இந்த நூல்!
RS. 160 More...by தி.முருகன்
நடக்கவே முடியாத 77 வயது வீல் சேர் மூதாட்டி... நடைபயிலவே ஆரம்பிக்காத 9 மாதக் கைக்குழந்தை... இவர்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கத் துணியும் ஹமாஸ் அமைப்பின் போர்வெறி ஆபத்தானது. ஹமாஸ் அமைப்பிடம் அது இருக்கிறது. 23 லட்சம் பேர் வசிக்கும் காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை வீதம் பலியாகிக் கொண்டிருக்கிறது. பள்ளிகள், மருத்துவமனைகளையே குறிவைத்து குண்டுகள் வீசும் இரக்கமற்ற ராணுவம் உலகில் வேறு எந்த நாட்டிடமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இஸ்ரேலிடம் அது இருக்கிறது. இந்த இரண்டு தரப்பினருக்குமான போரில் பெரும்பாலும் பலியாவது அப்பாவிகளே! சென்ற நிமிடம் வரை மகிழ்ச்சியாகப் பேசிய மனைவி குண்டுவீச்சில் புதைந்துவிட, இடிபாடுகளின் மீது நின்று கதறும் கணவன்... குழந்தையின் பிறந்தநாள் கேக் வாங்கும் அந்த நொடியில் ரத்தம் கசியும் குழந்தையின் உடலை ஏந்தியபடி கண்ணீர் சிந்தும் தகப்பன்... இறந்து வெறும் புள்ளிவிவர எண்களாகப் பதிவாகியிருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு துயரக்கதை. போர்க்கருவிகளுக்கு உணர்வு கிடையாது, இதயமும் கிடையாது. எதிரே இருப்பது ஏதுமறியா குழந்தையா, படுக்கையில் கிடக்கும் நோயாளியா என்றெல்லாம் தெரியாது. எவரையும் கொல்லும். அவற்றைப் பயன்படுத்துவோரும் இதயங்களைக் கழற்றி வைத்துவிடுகிறார்கள். இதுவரை சுமார் 13,000 பேரைக் கொன்றிருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி உலகெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், மனசாட்சியற்ற போர் தொடர்கிறது. இந்தப் போரின் தொடக்கப்புள்ளி என்ன? பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன பிரச்னை? அண்டை நாடுகள் என்ன செய்கின்றன? இந்த மோதல் எப்போது நிற்கும்? எல்லாவற்றையும் விவரிக்கும் ஒரு தொகுப்பு இது.
RS. 49 More...by ஜி.விஜயபத்மா
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப் பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்ததன் விளைவே முல்லை பெரியாறு அணைக்கு பிள்ளையார் சுழி. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். பல்வேறு தடைகளுக்குப் பின், ராணுவப் பணிப் பொறியாளராக இந்தியாவுக்கு வந்த கர்னல் பென்னிகுயிக் முல்லை பெரியாறு திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்தார். பிரிட்டிஷ் ராணுவக் கட்டுமானத் துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப் பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்துக்குப் பண ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னிகுயிக் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துகள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்துவருகிறது. இந்த அணைக்குப் பின்னே பெரும் தியாகம் சுடராக ஒளிவிடுவது உங்களுக்குத் தெரியுமா? பென்னிகுயிக் நம் மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன? அணை கட்டப்படுவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் என்ன? நூலாசிரியர் ஜி.விஜயபத்மா இவற்றைத் தெளிவாகத் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறார். பல சர்ச்சைகளுக்கிடையே தமிழ் மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முல்லை பெரியாறு அணையின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? முல்லை பெரியாறு வரலாற்றைப் படியுங்கள். தியாகத்தை உணருங்கள்.
RS. 88 More...