Cart is Empty
சினிமா உலகம் விசித்திரமானது. வெற்றி - தோல்வி தொடங்கி விதவிதமான திருப்பங்கள் வரை நாம் அனுமானிக்க முடியாத சகலமும் சினிமாவில் அரங்கேறும். 35 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய விசித்திரங்களை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்துப் பதிவு செய்தவர் மதுரை தங்கம். நடிகர் ரஜினிகாந்த்தை முதன் முதலில் பேட்டி எடுத்த பத்திரிகையாளர். அவருடைய திரைத் துறை அனுபவத் தொகுப்பே இந்த நூல். முதன்முதலில் மதுரை தங்கத்தைச் சந்தித்தபோது, கம்பீரம் குலையாத ஒரு பத்திரிகையாளர் எப்படி இருப்பார் என்பதற்கான உதாரணமாக இருந்தார். பேச்சினூடாக அவர் பகிர்ந்துகொண்ட அத்தனை சம்பவங்களுமே சுவாரஸ்யம் மிக்கவை. இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பை அவரை அணுகிய ஒவ்வொரு சந்திப்பிலும் உணர்ந்தவன் நான். இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி நாகேஷ், ரஜினி, கமல் என திரையுலகின் உயரிய தகையாளர்களைப்பற்றி மதுரை தங்கம் விவரிக்கும் விதம் அலாதியானது; யாரும் அறிந்திராத அபூர்வமானது. நமக்கு மிகத் தெரிந்தவர்களைப்பற்றிய புத்தகம்தான்; ஆனால், மொத்தமாக இதனை வாசித்து முடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான மரியாதை வெகுவாக உயர்கிறது. கே.பி. சாரின் பகிர்வு, ரஜினியின் பணிவு, கமலின் கூர்மை, இளையராஜாவின் எளிமை, வைரமுத்துவின் நட்பு, பாக்யராஜின் உறுதி என ஒவ்வொரு பிரபலத்தைப்பற்றிய செய்திகளும் இதுவரை கேள்விப்படாதவை. அந்த விதத்தில் சுவாரஸ்யச் செய்திகளின் சுரங்கம் இந்தப் புத்தகம்.