Cart is Empty
தமிழ் திரையுலகில், கதை கேட்பது முதல் க்ளைமாக்ஸ் காட்சியை முடிப்பது வரை எல்லாமே சகுனம் பார்த்து செய்வார்கள். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், கோடிகளை முதலீடு செய்யும் துறை என்பதே முக்கிய காரணம். `சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ என் படங்கள் பாதியில் நின்றுபோயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். இந்த விஷயங்களை எல்லாம் ராஜாவிடம் சொல்லி, அவரைத் தேற்றினேன்' என்று சொன்னவர் பஞ்சு அருணாசலம். இப்பேர்ப்பட்ட பஞ்சு அருணாசலத்தால்தான் நமக்கு இசைஞானி இளையராஜா கிடைத்துள்ளார். ஸ்டுடியோ உதவியாளராகவும், பின்னர் கவியரசர் கண்ணதாசனின் கற்பனைகளை, தத்துவங்களை எழுத்தாக்கும் பணியின் மூலமும் தன் திரை வாழ்வுப் பயணத்தைத் தொடங்கி கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வெற்றி கண்டவர் பஞ்சு அருணாசலம். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழ் திரையுலகில் கோலோச்சிய பஞ்சு அருணாசலம், தன் திரைப் பயணத்தில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் பற்றி ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். அந்தத் தொடர் நூலாகியிருக்கிறது. திரைத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்தாலும் தன்முனைப்பு சிறிதும் இல்லாமல் தொண்டராகவே வாழ்ந்த பஞ்சு அருணாசலத்துக்கு ‘திரைத்தொண்டர்' என விகடன் சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தமானது என்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் உணரலாம்.