Cart is Empty
by ஸ்ரீநிவாஸ் பிரபு
“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் கல்வி நிலை. சுழன்றுகொண்டு இருக்கும் உலகில், நாமும் தினம் தினம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஓடுபவர்களின் வெற்றி இலக்கு என்ன, நல்லதொரு பணி; அதுவும் அரசுப் பணி. இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற நெக்குருகிப் படித்தாலும், ‘முடிவில் பாஸா... ஃபெயிலா? அதைச் சொல்லு’ என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் அதிவிரைவான எதிர்பார்ப்பு. இதை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தேர்வு என்றால் என்ன, எந்தெந்தத் துறை எப்படியெல்லாம் போட்டித் தேர்வை நடத்துகின்றது, தேர்வை சந்திக்கும் முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை, எந்தெந்தப் பாடப் பிரிவின் கீழ் இந்தப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்கிற விவரங்களின் தொகுப்புதான் இந்த நூல். மேலும், பல்வேறு தேர்வுக் குறிப்புகளுடன், போட்டித் தேர்வை GENERAL INTELLIGENCE, GENERAL LANGUAGE, NUMERICAL ABILITY, GENERAL KNOWLEDGE என, நான்கு பிரிவுகளாகப் பிரித்து அது அதற்கான விடைகளையும் கொடுத்து, உங்களைப் பயிற்சிக் களத்திலும் இறக்கியுள்ளார் நூலாசிரியர். அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு பாடத் திட்டம் தொடர்பான நுணுக்கமான சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டாலே வெற்றி நம்மை தொற்றிக்கொள்ளும். முடிந்தவரை முயற்சிப்பதைவிட, முடிக்கும்வரை முயற்சிப்பதே சிறப்பு!
RS. 88 More...by சி.கலா சின்னத்துரை
அரசுப்பணி என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகளின் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. வரும் காலங்களில் அரசு நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், முறையாகப் படித்து அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் அரசுப் பணி நிச்சயம் சாத்தியம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, விழுந்து விழுந்து படித்தால் மட்டும் போதாது. தேர்வு நுட்பம் அறிந்து, எத்தகைய கேள்விகளுக்கு ஒவ்வொரு தேர்வுகளின் போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சமீப காலங்களில் நடந்தப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பாடத் திட்டங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆறாம் வகுப்பிலிருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதன்படி கணிதப் பாடத்தின் அனைத்துவிதமான கேள்வி பதில்களும் இந்த நூலில் சீராகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கிறது. அதிகமாகக் கேட்க வாய்ப்பிருக்கும் கேள்விகளைச் சரியாக அனுமானித்து, அவற்றைச் சரியாக வரிசைப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர். கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்கும் நூதனம் அறிந்து, அதன் அடிப்படையிலான கேள்வி & பதில்களையும் தொகுத்திருப்பது தனிச்சிறப்பு. பாடத் திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் இளைய தலைமுறையினரின் கணித அறிவைத் திறம்பட மேம்படுத்தி, போட்டித் தேர்வுகளுக்கு ஆகச்சிறந்த உறுதுணையாக விளங்கும். மாதிரித் தேர்வுக்காகப் பயிற்சி வினாக்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC - CSE, TET,VAO உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்!
RS. 88 More...by டாக்டர் சங்கர சரவணன்
போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, புரிதலுடன் கூடிய படிப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரத்யேகமாக ‘போட்டித் தேர்வு களஞ்சியம்’ வரிசையில் புத்தகங்கள் வெளியிடத் தீர்மானித்தோம். அந்த வரிசையில் ‘இந்திய அரசமைப்பு’ முதல் புத்தகமாக வெளிவருகிறது. TNPSC-யின் புதிய பாடத்திட்டப்படி இந்த நூலைத் தொகுத்துள்ளார், நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். இதில் இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாகரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிழிறிஷிசி குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய அரசமைப்பு தொடர்பான வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் விடைகளுடன் உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம். சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக்கொண்ட புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சம். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வோர் இந்திய குடிமகனும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம் இது.
RS. 91 More...by டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.
ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம், இயற்கை, ஒழுக்கம் என பல கண்ணோட்டங்களின் மீது பயணித்த ஆசிரியரின் கட்டுரைகள் உரையாடல்கள் மூலமாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை அள்ளித் தருகிறது. கல்வி, வேலை, திருமணம், எதிர்காலம் என வாழ்க்கையின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. தேர்வின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு தடுமாற்றங்களை எதிர்கொள்ளவும் தைரியமும் மன உறுதியும் வேண்டும். சில நேரங்களில் இவையே வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைந்துவிடலாம். பொதுவாக தேர்வு எழுதும்போது எப்படி நம்மை தயார் செய்துகொள்வோமோ அதுபோல வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பண்பு இருந்தால் முடிவு சுபமே என்கிறது இந்த நூல். நிலத்தில் விளையாடும் கால்பந்தையும், வாழ்க்கையில் உருண்டோடும் காலப்பந்தையும் உதைத்து, தேர்வுக்கும் வாழ்க்கைக்கும் இந்த நூலை ஒரு வழிகாட்டியாக அமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் இரா.ஆனந்த குமார். தேர்வு செய்யுங்கள் இந்நூலை... வாழ்க்கையைத் தேர்வு செய்ய!
RS. 91 More...by சு.வெங்கடேசன்
வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு வணிகமும் எவ்வாறு, எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் ரோமாபுரியைச் சேர்ந்த மண்பாண்டங்களும் வட இந்திய பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் கைகோத்து நடந்த பெருநகரமாக விளங்கியது மதுரை மாநகரம் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர் சு.வெங்கடேசன். காவியத்தில் வருகிற குறிப்புகளை வைத்து, அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட நகரத்தையே பூர்வீகப் பெயர்கொண்டு குறிப்பிட்டது ஏன்? காப்பியங்களின் வழி கிடைத்த நிலக்குறிப்பை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் இருக்கும் நகரை ஆய்வாளர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு, பழங்கால வைகை நாகரிகத்தை நம் கண்முன் காட்டும் அரிய பொக்கிஷம் இது.
RS. 149 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் திட்டம் மாற்றப்பட்ட பிறகு ‘பொதுத் தமிழ் வினாக்கள் மிகவும் கடினமாக இருக்கிறது, தேர்வு எழுத நேரம் போதாது’ என்று போட்டித் தேர்வர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். வினாக்களின் போக்குகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் படிக்கவும் தேர்வு எழுதும் நேரத்தை நிர்வாகம் செய்யவும் டி.என்.பி.எஸ்.சி பொதுத் தமிழ் ஒரிஜினல் வினாத்தாள்களை தொகுத்துத் தந்துள்ளோம். பொதுத் தமிழ்ப் பாடத்தை படிக்கும் முன்பும் படித்த பின்பும் இந்த வினாக்களை படித்துப் பார்க்கும்போது, பொதுத் தமிழ்ப் பாடத்தில் உங்களது திறனை நீங்களே எடைபோட்டு பார்க்க முடியும். விடைகளும் கேள்விக்கு அருகிலேயே தரப்பட்டுள்ளதால் உடனுக்குடன் விடைகளை சரிபார்த்துக்கொள்ள முடியும். தேவையான இடங்களில் விடைகளுக்குத் தேவையான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் 2013, 2014, 2015, 2016 (பிப்ரவரி வரை) டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தமிழ் வினாத்தாள்களை தந்துள்ளோம். இதில் மொத்தம் 1,060 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வர்கள் பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!
RS. 105 More...by கா.பாலமுருகன்
கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது இவர்களது இயல்பாகிவிட்டது. நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி ஓட்டுநர்கள் படும் இன்னல்களை இந்த நூல் எடுத்துரைக்கிறது. அவற்றில் ஒன்று - கொள்ளை; விதவிதமாக பணம் பறிப்பவர்கள் மத்தியில் பணத்தைப் பிரித்து ஆங்காங்கே ஒளித்துவைத்து தன்னையும் தன் உடைமைகளையும் காப்பாற்றுவதற்கே அன்றாடம் போராடுகிறார்கள். விபத்து, வழக்கு, போலீஸ், கொலை, கொள்ளை, நோய் என அனைத்தையும் தாண்டி இந்தத் தொழிலை இவர்கள் நேசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகள் இப்பணியில் தங்களது ஈடுபாட்டைச் செலுத்தியிருப்பவர்களும் உண்டு. திறமையான, அனுபவம்கொண்ட டிரைவராக இருந்தாலும், பயணப்படும் சாலையில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கவனித்துப் பயணிப்பது இவர்களுக்கான சவாலான விஷயம். பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் தரைவழிப் போக்குவரத்தான லாரி பயணத்தில் ஏற்படும் இன்னல்களைக் களைய, தேசிய நெடுஞ்சாலைகளுக்குத் தனி பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் நூலாசிரியர் கா.பாலமுருகன். லாரி ஓட்டுநர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விலக்கி, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுடன் பயணித்துப் பதிவு செய்திருக்கிறார். மோட்டார் விகடனில் வெளியான நெடுஞ்சாலை வாழ்க்கை, நூலாக்கம் பெற்று இப்போது உங்களையும் அழைத்துச் செல்லக் காத்திருக்கிறது!
RS. 123 More...by டாக்டர் சங்கர சரவணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை மேற்கோள் காட்டுவதும் உண்டு. ஏனென்றால் புத்தக ‘ஸ்கோப்’பைத் தாண்டிய ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும். மேற்கொண்டு இருக்கும் விஷயங்களைப் பாடுபட்டுச் சேகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் அனைத்தையும் மொத்தமாகத் தருகிறது. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரதம், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவ்வப்போது எடுத்துப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிக்கவும் தேவையான ஒரு நூல்!
RS. 126 More...by விகடன் பிரசுரம்
‘விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டு அறிவுலகத்தின் திறவுகோலாக விகடன் இயர்புக் வெளியிடப்பட்டிருக்கிறது. தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கீழடி அகழாய்வு, தமிழ் எழுத்துரு பற்றிய ஆய்வுக் கட்டுரை கல் முதல் கணினி வரை, எம்.ஜி.ஆர். என்சைக்ளோபீடியா, இந்திரா இதிகாசம், ஜெயா கிராஃபி, மத்திய - மாநில அரசுகளின் புதிய திட்டங்கள், கொள்கைகள், முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள் என அனைத்தும் கொண்ட தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது. இவற்றோடு, ஐ.ஏ.எஸ். தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘தப்பான கற்பிதங்களில் இருந்து தப்பிப்போம்’ என்ற கட்டுரை, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பொது ஆங்கிலம், சர்வதேச அளவிலான விருதுகள், இந்திய, தமிழக விருது விவரங்கள், 2016 நோபல் பரிசுகள், ஐந்து நூல்கள் பற்றிய அலசல், 2016-ல் வெளியான புதிய புத்தகங்கள், இந்திய வரலாறு - தகவல் தொகுப்பு, உடற்செயலியல் தகவல் தொகுப்பு, தொல்காப்பியத் துளிகள், மின் ஆளுகை, அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகள் பங்கு... என இதில் இல்லாதது எதுவுமில்லை என வியக்கும் வகையில் அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது இந்த இயர்புக்! மேலும், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் விகடன் வழிகாட்டல் நிகழ்ச்சியின் விவரங்களும், வெற்றியாளர்கள் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வு வினா விடை களஞ்சியமும் இலவச இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கான ஆகச்சிறந்த வழிகாட்டிதான் விகடன் இயர்புக்!
RS. 126 More...