Cart is Empty
by ம.செந்தமிழன்
நமது மண்ணின் மரபு, கலாசாரம், பண்பாடு, மூல ஆதாரங்கள், பண்டைய பழக்கவழக்கங்களுள் மறைந்துபோன மரபுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த நூல். தற்போதைய வேகமான கால ஓட்டத்தில் உணவு, உடை, பணி தொடங்கி நமது அனைத்து செயற்பாடுகளும் அதிவேகமாக மாறிவிட்டன. நவீனம், புதுமை, ட்ரெண்ட் என்கிற பெயரில் மனிதனின் வாழ்க்கை ஓட்டங்கள் எங்கோ துரத்திச் செல்லப்பட்டிருப்பது உண்மை. வாழ்வியல் கூறுகளை விட்டுவிட்டோமே என்கிற கதறுதலின் விளிம்பில் நிற்கிறோம். சற்றே திரும்பிப் பார்ப்போம், திரும்பிச் செல்வோம் நம் உலகத்திற்கு. பல மைல் தூரங்களைக் கடந்து வந்துவிட்டோம். சரி... என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் முன்பு, என்ன நடந்தது எனத் தெரிந்துகொண்டால் இழந்தவற்றை மீட்டுக்கொள்ளலாம். இன்று விவசாய நிலங்களின் பாதிப்பு, ஓசோன் ஓட்டை, உணவில் கலப்படம், மருந்தே உணவாகிய நிலை போன்ற அபாய கட்டத்துக்குள் நின்றுகொண்டு திண்டாடிக் கொண்டிருப்போர் ஒரு கூட்டத்தார். இந்த நிலையைக் கண்முன் நிறுத்தி விழிப்புஉணர்வை ஏற்படுத்துகிறது இந்த நூல். சுய வரலாறு, சமூக வரலாறு, பூமியின் சரித்திரம், ஆதி கால தொடக்கங்களின் தோற்றங்களையும் வரலாற்றையும் புரிந்து கொள்ளாமல், எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது! `வாழ்வியலுக்கான ஒழுங்குமுறைகள் மிக மிக அவசியம். வாழ்வியலை ஒழுங்கு செய்யாமல், மனதுக்கு மருந்து தேடினால் ஒரு காலத்திலும் கண்டறிய முடியாது' போன்ற உண்மைகளையும் நவீனமயமாக்கலின் ரகசிய கூறுகளையும் இனிதே எடுத்துரைத்து புத்துணர்வூட்டியிருக்கிறார் ஆசிரியர் ம.செந்தமிழன். ஆனந்த விகடனில் `ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி' என்ற பெயரில் வெளிவந்த தொடர் இப்போது நூலாக்க வடிவில் உங்கள் கைகளில்... வாழ்வில் மறைந்த ஸ்வாரஸ்யங்களையும் இழந்த நலன்களையும் மீட்டெடுக்கும் வழியையும் அறிய புரட்டுங்கள்...
RS. 175 More...by மு.நியாஸ் அகமது
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை என்றாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் ஆளுமையாகத் திகழ்ந்தார் அவர்தான் ஜெயலலிதா. தன் வழிகாட்டி எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்னும் பின்னும் தனக்கு ஏற்பட்ட சோதனைகளைத் தாங்கி, தாண்டி தமிழக அரசியலிலும் ஏன் இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் ஜெயலலிதா. சிறு வயது முதலே தனிமை வாழ்க்கை வாழ்ந்ததால்தான் என்னவோ ‘நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்’ என்று அவர் ஒருமுறை சொன்னார். அந்த சொற்றொடரில் பொதிந்திருக்கும் வேதனைகளை அவரே அறிவார். ஜெயலலிதாவை அவ்வளவு எளிதில் யாரும் சந்திக்க முடியாது என்ற பிம்பத்தை அவரே உருவாக்கினாரா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது வேறு. ஆனால் இந்த நூலைப் படிக்கும்போது அவர், இந்த ஆணாதிக்கச் சமுகத்தில் எத்தனை இடர்களைச் சந்தித்து உச்ச இடத்தைத் தொட்டார் என்பதை அறியமுடியும். விகடன் இணைய தளத்தில் தொடராக வெளிவந்தவை இப்போது நூலாகியிருக்கிறது. இது ஜெயலலிதா பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முக்கிய ஆவணமாகத் திகழும்!
RS. 120 More...by ஆர்.பாலகிருஷ்ணன்
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போதும் இனிமையானவையே. தமிழில் படித்து தமிழைப் பிடித்து உயர்நிலைக்குச் சென்ற ஓர் உயர் அதிகாரி, இந்தத் தமிழ் நெடுஞ்சாலை முழுதும் தன் அனுபவங்களைப் பகிர்ந்தபடி பயணிக்கிறார். ஒவ்வோர் அத்தியாயமும் ஒவ்வொரு மைல் கல்லாக பல செய்திகளைத் தருகின்றன. தமிழ் வழியில் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி ஒடிசா மாநில அரசின் உயர் பொறுப்புகளிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் பொறுப்பிலும் இருந்து தம் கடமையைச் சரிவர செய்து பலரின் பாராட்டுப் பெற்றவரின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. ஆனந்த விகடனில் வெளிவந்த தமிழ் நெடுஞ்சாலைத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் வாக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, ‘கேரள மாநிலம் காக்கயம் அணைப்பகுதியில் ஒரே ஒருவரின் வாக்கைப் பதிவு செய்வதற்காக, அடர்ந்த காட்டுக்குள் ஆறு ஊழியர்கள் மின்னணு இயந்திரத்தைக் கொண்டு சென்று வாக்கைப் பதிவு செய்து வந்தனர்' என்ற செய்தி நமக்குக் காட்டுகிறது. இதுபோல பல சுவையான சம்பவங்களைத் தன் அனுபவங்களோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன். தகவல்கள் பல அறிய இனி தமிழ் நெடுஞ்சாலையில் பயணிப்போம் வாருங்கள்!
RS. 300 More...by து.கணேசன்
கடலும் கப்பலும் எப்போதுமே அழகானவை. ‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு கப்பல் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகமானது உண்மை. கடலின் மீது மிதக்கும் பிரமாண்டமான கவிதையாகத்தான் கப்பலை நாம் பார்க்கிறோம். ஆனால், கப்பலில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிக்க வாய்ப்பு இல்லை. காரணம், ‘அவர்களுக்கு என்ன குறை? நல்ல வருமானம். சுகமான வாழ்க்கை...’ என நினைப்போம். இந்த எண்ணத்தைத் திருப்பிப்போடும் விதமாக, கடலும் கப்பலுமாக வாழும் து.கணேசன் எழுதி இருக்கும் அதிநுட்பப் பதிவு இது. பல வருடங்களுக்கு முன்னால் ‘கற்றது கடலளவு’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பல கற்பனைகளோடும், கனவுகளோடும் விரும்பி ஏற்றுக்கொண்ட பணியில் கிடைத்த அனுபவங்களை ஒரு நண்பனிடம் சொல்வதைப்போல் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கப்பல் பணியில் உள்ள நிறைகளையும் குறைகளையும் ஒளிவுமறைவின்றி நிதர்சனமாக எடுத்து வைத்திருக்கிறார். கப்பலில் இன்ஜினீயராக சேர்வது, வெவ்வேறு கப்பலுக்கு பணியை மாற்றிக்கொள்வது, கப்பல் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் விசா என பணியின் நடைமுறைகளையும் எல்லோருக்கும் விளங்கும் விதமாகப் புரியவைக்கிறார். நிலநடுக்கோட்டைக் கடக்கும் விழா, கப்பலில் கிடைக்கும் உணவு வகைகள், சரக்குக் கப்பல் பணிக்கும், பயணிகள் கப்பல் பணிக்கும் உள்ள வேறுபாடுகள், வசதிகள் என நாம் அறியாத பல தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. கப்பலில் பயணிக்கும் அனுபவம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு நாவலுக்கு சற்றும் குறையாத இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்கையில் கப்பலில் பல நாட்கள் பயணித்த நிறைவு கிடைக்கும் என்பது நிச்சயம்!
RS. 81 More...by பட்டுக்கோட்டை பிரபாகர்
அலமாரியில், பீரோவில், மேசை இழுப்பறையில் ஏதோ ஒன்றைத் தேடினால் நம் கண்ணில்படுவது பழைய கடிதங்களாக இருக்கும்! தாத்தா பேரனுக்கு... அம்மா மகனுக்கு... மகள் அப்பாவுக்கு... மனைவி கணவனுக்கு... அண்ணன் தங்கைக்கு... என ஆண்டாண்டு காலமாக எழுதப்பட்ட கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தால், எழுதியவரின் முகம் பல உணர்வுகளோடு கண்முன்னால் விரியும். நேரில் பேசுவதுபோல உணர்ச்சிக் கொந்தளிப்போடு இருக்கும். அத்தனையும், அந்த நேரத்தில் அதை எழுதியவரின் மனம் வடித்த நிஜங்கள்! மனிதநேயம், பேராசை, கோபம், நன்றி, நட்பு போன்ற பண்புகளும் குணங்களும் நமக்கு எதையோ உணர்த்த நினைக்கின்றன. நம்மைச் சார்ந்து இருக்கும் செல்போன், ரயில், பணம், மைக் போன்ற பொருட்கள் நம்முடன் உறவு கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றன. அவை, ஏதோ ஒன்றை நமக்குச் சொல்ல நினைக்கின்றன. இவை அனைத்தும் நமக்கு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்..? அந்த உண்மை வடிவத்தை - பரபரப்பான கடித நடையில் நமக்கு அளித்திருக்கிறார், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் படைக்கும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம், மேடைப் பேச்சு நாகரிகம், மனிதஉயிரைக் காத்தல், உறுப்பு தானம், முதியோரைப் பேணுதல், சுற்றுச்சூழல் காத்தல், விருந்தோம்பல் கலாசாரம், சேமிப்பு... இப்படி அன்றாட வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை அதி உன்னதக் கருத்துகளாகப் பதிவுசெய்திருக்கிறார் நூல் ஆசிரியர். பிரச்னைகள், சிந்தனைகள், உணர்வுகள், தகவல்கள் என அனைத்தையும் பிறர் மனதில் பதிவுசெய்ய சிறந்த வடிவம் கடிதம். உங்கள் நலம் விரும்பும் இந்தக் கடித நூலும் உங்களை நல்வழியில் நடத்திச் செல்லும் என்பது உறுதி.
RS. 70 More...by காஞ்சி எஸ்.சண்முகம்
ஜோதிடம், கைரேகை போன்ற புராதன சாஸ்திரங்களின் துணையோடு, மூன்று காலங்களுக்கும் உரிய பலன்களையும் பக்கவாட்டில் வைத்தபடியே ஓடிக்கொண்டு இருக்கிறது இன்றைய தலைமுறை. இவற்றுள் ‘கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம் என்றுகூட சொல்வார்கள். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்சியை உறவுகளோடு பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பதுதான், மனித சமுதாயத்தின் மாண்பு. இதற்கு உள்ளங்கைகளில் பதிந்துள்ள ரேகைகள் துணை புரியுமா? என்ற கேள்வி, அநேகரிடம் இருப்பதை காண முடிகிறது. பல்வேறுவிதமான வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்து பொருள் ஈட்டவேண்டிய இன்றைய சூழலில், ஒவ்வொருவரின் ரேகை அமைப்பும் என்ன சொல்கிறது, ரேகை சொல்லும் வணிகம் எது, வணிகம் செய்வதற்கான காலம் எது, எந்த வணிகத்தைத் தொடங்கினால் சிறப்படையலாம், தனி வணிகமா... கூட்டு வணிகமா... குடும்ப வணிகமா? என்பதையெல்லாம் ஆய்வின் அடைப்படையில் இந்த நூல் விளக்குகிறது. மேலும், ரேகை அமைப்பு முறைகளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வரைபடங்களுடன் எளிமையாக விவரித்துள்ளார் நூலாசிரியர். ரேகை மற்றும் கிரக மேடுகளின் அடிப்படையில் பலன்களை விவரித்துள்ள இந்த நூல், வணிகம் தொடங்கி வளம் பெற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் காட்டும்.
RS. 50 More...by விகடன் பிரசுரம்
சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் பாதையில் பயணிக்க வைத்த அசகாய சூரர் சுஜாதா அத்தகைய தனித்தன்மைக்காரர். சுவாரஸ்ய நடையில், ஜெட் வேக விறுவிறுப்பில், சட்டெனச் சிலிர்க்க வைக்கும் புதுமையில், வியக்க வைக்கும் நவீனத்தில் படைப்புகளைக் கொடுத்துத் தமிழுக்குத் தனி மரியாதை ஏற்படுத்தியவர் சுஜாதா. விகடன் வாசகர்கள் அத்தனை பேராலும் அறியப்பட்ட அறிவுப் பேராயுதம். வாசிப்பு உலகமே வணங்கிக் கடன்பட வேண்டிய அளவுக்கு எல்லாவிதத் தளங்களிலும் எழுதிக் குவித்த எழுத்துலக எந்திரன். ‘கி.பி.2000&க்கும் அப்பால்’, ‘ஏன், எதற்கு, எப்படி?’, ‘கற்றதும் பெற்றதும்’, ‘கண்ணீர் இல்லாத யாப்பு’, ‘யவனிகா’, ‘எப்போதும் பெண்’, ‘பதவிக்காக’, ‘பேசும் பொம்மைகள்’, ‘இரயில் புன்னகை’, ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’, ‘ஆயிரத்தில் இருவர்’, ‘கொலை அரங்கம்’, ‘நிர்வாண நகரம்’, ‘நைலான் கயிறு’, ‘கொலையுதிர் காலம்’ என வியக்கவைத்த சுஜாதாவின் படைப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1953ம் ஆண்டு ‘சிவாஜி’ என்ற பத்திரிகையில் சிறுகதை எழுதி தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய சுஜாதா பத்திரிகைகள், இணையம், சினிமா என எங்கெங்கோ விரிந்து பறந்தபோது பேனா பிடித்தவர்கள் அனைவருக்குமான வெற்றியாகவே அது பார்க்கப்பட்டது. சுஜாதா மறைந்தாலும், அறிவும் செறிவும் அழகியலும் கொண்ட அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை. விகடன் வாசகர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை... சுஜாதாவின் படைப்பை மறு பிரசுரம் செய்தாலும் தீபாவளிக் கொண்டாட்டம்தான் அவர்களுக்கு. காலத்துக்கும் கொண்டாடத்தக்க சுஜாதாவின் படைப்புகளில் விகடனில் வெளியான பன்முகத் தளத்திலானவற்றைத் தொகுத்து இந்த மலரை உருவாக்கி இருக்கிறோம். சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவர்களின் நினைவலைகள், சுஜாதாவின் விதவிதமான புகைப்படங்கள் ஆகியவற்றோடு இந்தப் படைப்புகளைப் படிக்கையில் ‘சுஜாதா உலக’த்தில் நிச்சயம் நீங்கள் ரீ என்ட்ரியாகலாம்.நிறைவு செய்ய முடியாத அசாத்திய படைப்புகளைத் தமிழுக்கு வார்த்துத் தந்த சுஜாதாவுக்கு சிறப்பு மலர் வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது. காலப் பெருவெளியின் கௌரவ அடையாளமாக நெஞ்சம் சிலிர்க்கவைத்த படைப்பாளரின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதுதானே அவருக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.
RS. 116 More...by எஸ்.எல்.வி.மூர்த்தி
விளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவரொட்டிகள், திரையரங்குகள் மூலம் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.அப்படி வணிகத்துக்கு உயிர்நாடியாகிவிட்ட விளம்பரத் துறை கோடிகள் புரளும் கனவுத் தொழிற்சாலை.இந்தத் துறையின் ஆரம்ப காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்தையும் இங்கே அற்புதமாகப் படைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.விளம்பர வியூகம் எங்கிருந்து எப்போது தொடங்கியது, அது படிப்படியாக எப்படி பல மாற்றங்களைக் கண்டுள்ளது, பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் விளம்பரங்களை துணை கொண்டு தங்கள் பொருட்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக வருடங்களின் புள்ளிவிவரங்களோடு கொடுத்திருப்பது மகத்தானது.செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்று தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்தே விளம்பர உலகம் வளர்ந்து, இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப இணையதளம் வரை மாறியிருப்பதை அழகாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.ஒரு பொருளின் தரம், விலை நிர்ணயம், அந்தப் பொருளின் பயன்பாடு, எந்தப் பொருளுக்கு விளம்பரத்தை எப்படி கையாண்டால் மக்களை அது கவரும், மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்பது போன்ற பல தகவல்கள் உள்ளன. மார்க்கெட்டிங் பற்றி அறியாதவர்களும்கூட புரிந்துகொள்ளும் விதமாக, சுவாரஸ்யமாக, எளிமையான நடையில் இந்த நூலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வணிக வியூகத்தை அழகாகச் சொல்லித் தரும் இந்த நூல் அனைவரும் படித்து பயன்பெறக்கூடிய செய்திகளைக் கொண்ட விளம்பர உலகின் வழிகாட்டி.
RS. 56 More...by நெல்லை விவேகநந்தா
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டத்தைக் கவிதையாகக் கண்டவர் கவிஞர் வைரமுத்து. எது, எத்தகையது என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது. ஒரே வரிசையில் வைக்க முடியாத வெவ்வேறு விஷயங்களின் ‘மெய்ப்பொருள்’ காணும் முயற்சியாக இந்தக் கதம்பக் கொத்தை நூலாக்கி இருக்கிறார் நெல்லை விவேகநந்தா. பூமியைப் படைத்த பெருந்தகையின் பின்னணி, உலகப்போரில் கொடுங்கோலன் ஹிட்லரின் நிலை, வைரத்தின் வீரியத்தை விவரிக்கும் ‘வைரம் வந்த கதை’, விண்வெளியில் நடந்த முதல் அதிசயம், வியக்கவைக்கும் சீனப் பெருஞ்சுவர், உலக அழகிப் போட்டி பிறந்த கதை, குங்குமப்பூவின் உண்மையான குணாதிசயம், தாயைப் புறக்கணித்த காமராஜர், காதலனுக்கு, காதலி கட்டிய நினைவுச்சின்னம், கிளுகிளுப்பை உண்டாக்கும் விருந்து! என அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளக்கூடிய சுவாரஸ்யமான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளிவந்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு. மேலும், ‘சில சந்தேகங்களும் தீர்வுகளும்!’ என்ற தலைப்பில், மக்களின் பல்வேறு மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அதற்கான சரியான விளக்கத்தையும் தந்திருப்பது, இந்த நூலின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வு, பொது அறிவு என விதவிதமான தகவல்களை ஒருங்கே தொகுத்து அறிவுக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரின் அறிவு விசாலத்துக்கும் நிச்சயம் துணை புரியும்!
RS. 56 More...by சுமதி ஸ்ரீ
நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிரிக்க வைக்கிறது, சில நேரம் அழவைக்கிறது. முடிவாக வாழ்க்கை நம்மை பெரிதும் சிந்திக்கவும் வைக்கிறது. சிலரது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நீங்காத வடுக்களாகவும், ஒரு சில சம்பவங்கள் நினைக்கும்போதே சுகமாக அமைந்து விடுகின்றன. இங்கே நூலாசிரியர் சுமதிஸ்ரீ தன் வாழ்வில் நிகழ்ந்த பலவித அனுபவங்களை, நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளை, மனதில் காயம் ஏற்படுத்திய சங்கடங்களை அழகான நடையில் இலக்கிய நயத்தோடு, வார்த்தை ஜாலங்களின் கலவையோடு இங்கே நம் சிந்தனையைத் தூண்டும் நூலாக கொடுத்திருக்கிறார். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டிய மன உறுதியும், உத்வேகமும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விளையாட்டில்கூட ஆண்கள் & பெண்கள் என பாகுபடுத்தப்பட்டுள்ள நிலை, இறுதிப் பயணத்தில் எரியூட்டப்படும்போது, ‘ஆண்கள் உடலைவிட பெண்களின் உடல் எளிதில் எரிந்துவிடும். காரணம், அடுப்படியில் கிடந்து ஏற்கெனவே பாதி வெந்திருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுமிடத்தில் பெண்ணியத்துக்கான ஆதரவை, உள்ளத்தில் அழுத்தமாகப் பதியும்படி வார்த்தைகளால் வடித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிபூர்வமாக கொட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். பள்ளிப் பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.
RS. 56 More...