Cart is Empty
வியாபாரிகளுக்கான நூல் இது. வியாபாரத்தில் என்னதான் ‘அலர்ட் ஆறுமுகமாக’ இருந்தாலும், ஒரு சில விஷயத்தில் அலர்ட்டாக இருக்கும் சமயத்தில் நமக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்களை நாம் கோட்டை விடுவது சகஜம்! பொதுவாகவே, வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், தங்கள் பணத்தை முதலீடு செய்வதால் அதி ஜாக்கிரதையாகவே இருப்பார்கள். ஆனால், பணம் செலவாகும்போது, கண்ணுக்குத் தெரியும் ஓட்டைகளை அடைப்பதில் மட்டும்தான் ஜாக்கிரதையாக இருப்பார்களே தவிர, சட்டென்று எழும் பிரச்னைகளிலும், லாபம் வரும் விஷயங்களிலும், மெதுவாக வியாபாரத்தை அரிக்கும் விஷயங்களிலும் ஜாக்கிரதையாக இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, வியாபாரத்தை நிலைநிறுத்தி லாபம் அள்ளித்தரும் நுணுக்கமான விஷயங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. ‘இது தெரிந்த விஷயம்தானே, இதெல்லாம் வியாபாரத்தைக் கவிழ்த்து விடுமா என்ன?’ என்று அக்கறை இல்லாமல், கவனக்குறைவாக இருந்து தோல்வி அடைந்த வியாபாரிகளுக்கும் பல ‘டிப்ஸ்’கள் தரப்பட்டுள்ளன. நாம் நினைக்கும் ‘அல்ப’ விஷயம் எப்படி வியாபாரத்தைச் சாய்த்துவிடும் என்பதை உணர்த்தும் விதமாக ஏராளமான வியாபார தந்திரங்கள் தரப்பட்டிருக்கின்றன. பல வியாபாரிகளின் அனுபவங்கள் நிறைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு. நாணயம் விகடனில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. பயப்படாமலும் ஆர்வத்துடனும் வியாபாரம் செய்ய ஊக்கம் தரும் நூலாக இது அமைந்திருக்கிறது.