Cart is Empty
by டாக்டர் வி.எஸ்.நடராசன்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள் அளித்தும் தான் பெற்ற அனுபங்களை வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் டாக்டர் வி.எஸ்.நடராசன். முதியவர்களுக்கு வரும் நோய்கள், அவற்றுக்குச் செய்ய வேண்டிய தற்காப்பு முறைகள், பரிசோதனைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் என்று முதியோர் மருத்துவம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழிவகை சொல்கிறது இந்த நூல். முதுமை எப்போது ஆரம்பிக்கிறது தொடங்கி இறப்பு வரை முதியவர்களுக்கு வரும் நோய்களான மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்க வாதம், மறதி நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, மலச்சிக்கல், தோல் நோய்கள், கண் நோய்கள், காது&மூக்கு&தொண்டை நோய்கள் என்று பல்வேறு நோய்களுக்கும், முதுமையில் நலமாக வாழ உதவும் பரிசோதனைகள், உணவுகள், உடற்பயிற்சிகள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை குறித்தும், முதுமையை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் சந்தோஷமாக வாழலாம் - முதுமையும் ஒரு சுகமே என்பதையும், மிகவும் இயல்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி எழுதியுள்ளார் டாக்டர். வி.எஸ்.நடராசன. முதியவர்களில் பலரும் தங்களின் சிறு சிறு சந்தேகங்களுக்கு டாக்டர்களிடம் ஆலோசனை பெறத் தயங்குகிறார்கள். அப்படி கேட்டாலும் அவர்களுக்கு தெளிவாக, சுருக்கமாக சொல்லத் தெரிவதில்லை. டாக்டர்களுக்கும் மிகவும் பொறுமையாக அவர்களுக்கு எடுத்துக் கூற நேரம் கிடையாது என்பதைப் புரிந்துகொண்ட டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியவர்களிடம் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளித்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர் மருத்துவர் என்றால், நோய் வராமல் இருக்க தகுந்த உணவு, உடற்பயிற்சி, பாதுகாப்பு போன்ற நோய்த் தடுப்பு முறையால் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துபவர் சிறந்த மருத்துவர். டாக்டர் வி.எஸ்.நடராசன் சிறந்த மருத்துவர் என்பதை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. நூறு மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை. அரிய பயனை அள்ளித் தரும் இந்த நூல், உங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டியதும் நலமே!
RS. 105 More...by செ.கார்த்திகேயன்
இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும். இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.
RS. 105 More...by செ.திவான்
தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன. தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லி வரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்...’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார்? சமணர்கள் கழுவேற்றப்பட்டது எப்படி? பாண்டிய மாமன்னர் இலங்கைத்தீவை பிடித்தது எப்படி-? என பல்வேறு வரலாற்று சம்பவங்களின் சுவையான பின்னணிகளை எடுத்துக்கூறுகிறார் செ.திவான். ஆக, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்... தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக வரலாறு. படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள்!
RS. 112 More...by பி.சுவாமிநாதன்
இறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களுள் மலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. வழிபாட்டில் கயிலாய மலை, பர்வத மலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி மலை, திருவண்ணாமலை என்று ஏராளமான மலைப் பிரதேசங்கள் போற்றிப் புகழப்படுகின்றன. இத்தகைய மலைத் தலங்களுள் சதுரகிரியும் குறிப்பிடத்தக்க ஒன்று. சதுரகிரியின் மலைப்பகுதிக்கு மேலே இருக்கும் நூற்றுக் கணக்கான குகைகளில் சித்தர் பெருமக்கள் எண்ணற்றோர் இன்றைக்கும் அரூபமாக வீற்றிருந்து சித்து விளையாட்டுகள் புரிகிறார்கள். சக்தி விகடன் இதழில் புராண முக்கியத்துவம் வாய்ந்த சதுரகிரி பற்றி சிறப்பான தொடர் ஒன்று வெளியானது. 'குடந்தை ஸ்யாமா' என்ற புனைபெயரில் பி.சுவாமிநாதன் எழுதிய அந்தத் தொடர் வெளியாகும்போதே, அது தொடர்பான ஆன்மிக அன்பர்கள் பலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். உலகெங்கும் உள்ள எத்தனையோ பக்தர்க
RS. 116 More...by மதன்
நான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் படத்துடன் நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக் கூடியது கார்ட்டூன். அதுமட்டுமல்ல... நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் அரசியல் மற்றும் சமூக கார்ட்டூன்கள், சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்! சில சமயங்களில், சம்பந்தப்பட்டவர்களை முகம் சிவக்கவும் செய்துவிடும். ஆரம்பக் காலத்திலிருந்தே கார்ட்டூன்களில் தனி முத்திரை பதித்து வந்திருக்கிறது ஆனந்த விகடன். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆரம்பித்து இன்று வரையில் விகடன் கார்ட்டூன்களுக்கு தனி மவுசு உண்டு. முக்கியமாக, தேர்தல் காலங்களில் விகடனில் வெளியாகும் கார்ட்டூன்கள், வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்திக்க வைத்ததும் உண்டு! 1969_ல் விகடனுடன் இணைந்தவர் மதன். தொடக்கத்தில் கேரிகேச்சர்கள் வரைந்து, படிப்படியாக முன்னேறி, கார்ட்டூன்கள் வரைவதில் தனக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக் கொண்டவர். கார்ட்டூன்களில் மெலிதாக, சிக்கனமாக கோடுகளைப் (Strokes) பயன்படுத்துவது அவருடைய ஸ்டைல். பின்னாட்களில் ஓர் எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இன்றுவரையில
RS. 133 More...by விகடன் பிரசுரம்
நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் முடிவுப் பகுதியை சுவாரஸ்யமாக எழுதும் போட்டியை அறிவித்து, சாமான்ய வாசகர்களுக்குள் மறைந்துகிடக்கும் எழுத்தாற்றலைத் தூண்டிவிட்டுள்ளது விகடன். திருக்குறள் கதைகள், பொன்மொழிக் கதைகள், நவரசக் கதைகள், தூண்டில் கதைகள், புதிய ஆத்திசூடிக் கதைகள், மகாகவி பாரதியின் வரிகளைக் கருப்பொருளாக வைத்து பாரதி கதைகள் எனப் பலவிதமான தலைப்புகளில், பல்வேறு சுவைகளில் சிறுகதைகளை வெளியிட்டு, வாசகர்களிடம் சிறுகதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நாளில், பக்க எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு கதைக்கான சன்மானத்தைத் தீர்மானிப்பதே வழக்கம். இதை மாற்றி, கதையின் தரத்தை அளவுகோலாக வைத்து சன்மானம் அளிக்கும் முறையை விகடனில் கொண்டுவந்தார் அதிபர் எஸ்.எஸ்.வாசன். கூடவே, சிறுகதை உலகுக்கு ஒரு புரட்சித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். பரிசீலனைக்கு வரும் சிறுகதைகளில் பிரசுரத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட கதைகளிலிருந்து மிகச்சிறந்த கதையை ‘முத்திரைக் கதை’ என்னும் அறிமுகத்தோடு, அதிக சன்மானம் அளித்து, ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளியிட்டார். இப்படித் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, 300 சிறுகதைகளுக்கும் மேல் ‘முத்திரைக் கதை’களாக வெளியாகின. சிறுகதை மன்னன் என்று போற்றப்பட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் பல இப்படி ‘முத்திரைக் கதை’கள் என்று மகுடம் சூட்டப்பட்டு, விகடனில் வெளியாகி, எழுத்துலகில் ஒரு புகழ் வெளிச்சத்தை அவர் மீது பாய்ச்சியதை சிறுகதை ஆர்வலர்கள் நன்கறிவார்கள். அப்படி அந்நாளில் ஆனந்த விகடனில் ‘முத்திரைக் கதை’ என்னும் சிறப்பு முத்திரையோடு வெளியாகி, வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளிலிருந்து 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு தொகுப்பாக வழங்குகிறது விகடன் பிரசுரம். முத்து, பவழம், வைரம் எனப் பலவிதமான விலையுயர்ந்த பொருள்களையும் கற்களையும் கொண்டு தொடுக்கப்பட்ட அபூர்வமான நவரத்தின மாலையைப் போன்றது இந்தப் புத்தகம் என்பதை, இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையைப் படிக்கும்போதும் உங்களால் உணர முடியும். நல்ல படைப்புகள் எங்கிருந்தாலும் நாடிச் சென்று படித்து இன்புறும் வாசகர்கள் அத்தனை பேரும் இந்த அரிய தொகுப்பையும் போற்றிக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
RS. 199 More...by மருத்துவர் கல்பனாதேவி
மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்!
RS. 140 More...by ப.திருமாவேலன்
அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்திருக்கிறது, எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதற்காக உழைத்த(!)வர்களையும் பார்த்திருக்கிறது. ஊழல் தேசியமயமாகிவிட்டது என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிச் சொல்லிடலாம். அதிகாரத்துக்கு வருவதே ஊழல் பணத்தை அள்ளிக்கட்டத்தான் பேரவல நிலையில்தான் இன்றைய அரசியல் சூழல் உள்ளது. ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று பாரதிதாசன் புகழ்ந்த பெரியார் அரசியல்வாதி அல்ல. அந்தப் பெரியாரின் அடித்தளத்தைக் கொண்டு தோன்றிய கட்சிகளைச் சேர்ந்தோர் சிலர், மக்கள் பணியை மறந்து, சொத்து சேர்ப்பதற்கு முதலில் வழியமைத்துக்கொடுத்தது யார் என்று தங்களுக்குள் தர்க்கம் செய்கின்றனர். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்களையும் பற்றிச் சாட்டை சொடுக்கும் கட்டுரைகள் இவை. சமரசம் இல்லாமல் உள்ள நிலையை உள்ளபடி, அந்தந்த நேரத்து அரசியல் நிகழ்வுகள் பற்றி, ஆனந்த விகடனில், ப.திருமாவேலன் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஊழல்வாதிகளையும் சுயநல அரசியல் வியாபாரிகளையும், அவர்கள் மீது விமர்சன வெளிச்சம் பாய்ச்சி உலகுக்குக் காட்டிடும் இந்த நூல், அரசியல் களத்தைத் தூய்மையாக்கிடத் தூண்டுகோலாக இருக்கும்!
RS. 150 More...by ப.திருமாவேலன்
அரசியல், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நிகழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்குப் பணி செய்ய உருவாக்கப்பட்ட அரசியலை, சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாப நிலைதான் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் சுயமரியாதையோடு இருக்கவேண்டும் என மூச்சு பிரியும் வரை தொண்டாற்றிய பெரியார் நினைத்திருந்தால் அரசியல்வாதியாகி லாபம் அடைந்திருக்கலாம். ஆனால், அவர் இயக்கவாதியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டினார். பெரியாரையும் ‘திராவிட’ என்ற அடையாளத்தையும் வைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் இருக்கின்றன, தோன்றுகின்றன. ஆனால், அந்தக் கட்சியினர் பெரியார் பெயரையும் அவர் படத்தையும் பயன்படுத்துவதோடு மட்டும் நிறுத்திவிடுகிறார்கள். பொது வாழ்வில் பெரியாரைப் போல தூய்மைத் தொண்டாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அரசியல் லாபத்துக்காக தடம்மாறும் அரசியல்வாதிகள், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுபவர்கள்... என அனைத்து அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளை விமர்சித்து ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் நூலாசிரியர் ப.திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சோனியா காந்தி, மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியக் கட்சிகளின் தலைவர்கள்; கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ்... என மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவரும் தப்பவில்லை - இவரின் விமர்சனக் கணைகளுக்கு! ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சுட்டுவதைப்போல, அறம் தவறி அரசியல் செய்பவர்களின் மனச்சாட்சியை உலுக்கி கேள்வி எழுப்பும் கட்டுரைகள் இவை. ‘போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’ - கவியரசு கண்ணதாசனின் இந்தக் கருத்துவழி நின்று, அரசியல் போர்வையில் அடாத செயல்புரிபவர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களின் சுயநல சந்தர்ப்பவாதங்களை உலகுக்கு உணர்த்தும் அரசியல் ஆவணமாகத் திகழ்கிறது இந்த நூல்!
RS. 229 More...by பூ.கொ.சரவணன்
எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்று பிரமிக்க வைத்தவர்கள் உருவானது எப்படி? வெற்றி சும்மா இருந்தால் வருமா? வெற்றியாளர்களின் மறுபக்கம் என்ன? வரலாற்றில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய சுவாரசியங்கள் நிறைந்த தகவல்களைத் தருகிறது இந்த நூல். வெற்றி பெறத்துடிக்கும் உங்களுக்குத்தான் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் போற்றப்படும் ஒருவர் பெர்னாட்ஷா. அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்குத் தகவல் சொன்னார்கள், “உங்களுக்கு நோபல் பரிசு ஷா” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்குக் கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை; “அது போன வருடம் எழுதியது, உயிருக்குத் தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்குக் கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ளப் போகவே இல்லை. இதுபோன்ற வரலாற்று மேதைகளின் மகத்துவம் நிறைந்த வாழ்வியலைப் பற்றி நிறைய தகவல்களை அள்ளித் தந்துள்ளார் நூலாசிரியர். பெர்னாட்ஷா சொன்னது போல.. வாழ்க்கை உங்களைக் கண்டடைவது இல்லை; உங்களைப் படைத்துக்கொள்வது என்பதற்கேற்ப உங்களை நீங்கள் படைத்துக் கொள்ள நீங்கள் படிக்க வேண்டியது இந்த வரலாற்று நாயகர்களை பற்றித்தான் என்பது இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்து கொள்வீர்கள். வாசியுங்கள்.. உங்களுக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்திருக்கின்றன.
RS. 172 More...