Cart is Empty
by விகடன் பிரசுரம்
நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் முடிவுப் பகுதியை சுவாரஸ்யமாக எழுதும் போட்டியை அறிவித்து, சாமான்ய வாசகர்களுக்குள் மறைந்துகிடக்கும் எழுத்தாற்றலைத் தூண்டிவிட்டுள்ளது விகடன். திருக்குறள் கதைகள், பொன்மொழிக் கதைகள், நவரசக் கதைகள், தூண்டில் கதைகள், புதிய ஆத்திசூடிக் கதைகள், மகாகவி பாரதியின் வரிகளைக் கருப்பொருளாக வைத்து பாரதி கதைகள் எனப் பலவிதமான தலைப்புகளில், பல்வேறு சுவைகளில் சிறுகதைகளை வெளியிட்டு, வாசகர்களிடம் சிறுகதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நாளில், பக்க எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு கதைக்கான சன்மானத்தைத் தீர்மானிப்பதே வழக்கம். இதை மாற்றி, கதையின் தரத்தை அளவுகோலாக வைத்து சன்மானம் அளிக்கும் முறையை விகடனில் கொண்டுவந்தார் அதிபர் எஸ்.எஸ்.வாசன். கூடவே, சிறுகதை உலகுக்கு ஒரு புரட்சித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். பரிசீலனைக்கு வரும் சிறுகதைகளில் பிரசுரத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட கதைகளிலிருந்து மிகச்சிறந்த கதையை ‘முத்திரைக் கதை’ என்னும் அறிமுகத்தோடு, அதிக சன்மானம் அளித்து, ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளியிட்டார். இப்படித் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, 300 சிறுகதைகளுக்கும் மேல் ‘முத்திரைக் கதை’களாக வெளியாகின. சிறுகதை மன்னன் என்று போற்றப்பட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் பல இப்படி ‘முத்திரைக் கதை’கள் என்று மகுடம் சூட்டப்பட்டு, விகடனில் வெளியாகி, எழுத்துலகில் ஒரு புகழ் வெளிச்சத்தை அவர் மீது பாய்ச்சியதை சிறுகதை ஆர்வலர்கள் நன்கறிவார்கள். அப்படி அந்நாளில் ஆனந்த விகடனில் ‘முத்திரைக் கதை’ என்னும் சிறப்பு முத்திரையோடு வெளியாகி, வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளிலிருந்து 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு தொகுப்பாக வழங்குகிறது விகடன் பிரசுரம். முத்து, பவழம், வைரம் எனப் பலவிதமான விலையுயர்ந்த பொருள்களையும் கற்களையும் கொண்டு தொடுக்கப்பட்ட அபூர்வமான நவரத்தின மாலையைப் போன்றது இந்தப் புத்தகம் என்பதை, இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையைப் படிக்கும்போதும் உங்களால் உணர முடியும். நல்ல படைப்புகள் எங்கிருந்தாலும் நாடிச் சென்று படித்து இன்புறும் வாசகர்கள் அத்தனை பேரும் இந்த அரிய தொகுப்பையும் போற்றிக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
RS. 199 More...by விகடன் பிரசுரம்
ஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவங்களாக, பாசாங்கு பாசத்தோடே வாழ்வது, விரிசல் விழுந்த கண்ணாடிப் பாதையில் பயணிக்கும் வாழ்க்கையாகவே அமைந்துவிடும். ஆண்-பெண் சிக்கல்கள், மூன்றாம் பாலினம் அடையும் தொந்தரவுகள், குழந்தைப் பருவ சிநேகிதம், பாலியல் குமுறல்கள் என இந்த நூலில் பதிவாகியிருப்பவை, வாசகர்களின் மனதில் அழியாத தாக்கம் தந்து ஆண்பாலும் பெண்பாலும் அன்பால் கடந்து வெற்றி வாழ்க்கையின் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்பது உறுதி. ஆண் பெண் உறவு குறித்து பிரபலங்கள், திரைத்துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களின் கருத்துகளையும், கவிதைகளையும் ஆங்காங்கே தந்திருப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது. போலியான அறிவுஜீவித்தனம் இல்லாத, பட்டறிவு, அனுபவ ஞானமிக்க, வெள்ளந்தித்தனமும், எளிமையான நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பும் உள்ள, கொஞ்சம் அறவுணர்வும் கொண்ட, என்னைப் புரிந்துகொண்ட என் வாழ்வின் துணையாக வருகிற இணை, ஒருபோதும் ஒத்த ரசனை, தேர்ந்த ஒற்றுமையான விருப்பங்கள் பாசாங்கு அற்றவனாக, பொய்யற்ற யதார்த்தமான அன்பைப் பகிர்பவனாக, பரஸ்பர நம்பிக்கையும் மதிப்பும் தன்மேல் கொண்டவனாக, தன் சுயத்தை இழக்காதவனாக... இப்படியான எதிர்பார்ப்புகளை இருவருமே புரிந்து கடைப்பிடித்து வாழ்தல், காத்திருக்கும் இனிப்பான வாழ்வை நோக்கி கைகோத்து பயணிக்கலாம் என்கிறது இந்த நூல்.
RS. 269 More...by ப.திருமாவேலன்
அரசியல், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நிகழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்குப் பணி செய்ய உருவாக்கப்பட்ட அரசியலை, சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாப நிலைதான் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் சுயமரியாதையோடு இருக்கவேண்டும் என மூச்சு பிரியும் வரை தொண்டாற்றிய பெரியார் நினைத்திருந்தால் அரசியல்வாதியாகி லாபம் அடைந்திருக்கலாம். ஆனால், அவர் இயக்கவாதியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டினார். பெரியாரையும் ‘திராவிட’ என்ற அடையாளத்தையும் வைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் இருக்கின்றன, தோன்றுகின்றன. ஆனால், அந்தக் கட்சியினர் பெரியார் பெயரையும் அவர் படத்தையும் பயன்படுத்துவதோடு மட்டும் நிறுத்திவிடுகிறார்கள். பொது வாழ்வில் பெரியாரைப் போல தூய்மைத் தொண்டாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அரசியல் லாபத்துக்காக தடம்மாறும் அரசியல்வாதிகள், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுபவர்கள்... என அனைத்து அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளை விமர்சித்து ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் நூலாசிரியர் ப.திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சோனியா காந்தி, மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியக் கட்சிகளின் தலைவர்கள்; கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ்... என மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவரும் தப்பவில்லை - இவரின் விமர்சனக் கணைகளுக்கு! ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சுட்டுவதைப்போல, அறம் தவறி அரசியல் செய்பவர்களின் மனச்சாட்சியை உலுக்கி கேள்வி எழுப்பும் கட்டுரைகள் இவை. ‘போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’ - கவியரசு கண்ணதாசனின் இந்தக் கருத்துவழி நின்று, அரசியல் போர்வையில் அடாத செயல்புரிபவர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களின் சுயநல சந்தர்ப்பவாதங்களை உலகுக்கு உணர்த்தும் அரசியல் ஆவணமாகத் திகழ்கிறது இந்த நூல்!
RS. 229 More...