Cart is Empty
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம்தொட்டு, சுதந்திர தேசத்தின் இன்றைய ஆட்சி முறை வரையில் தயங்காமல் விமரிசனங்களை வெளியிட்டு வருகிறது விகடன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என இந்தியச் சுதந்திரத் துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும், அவர்களின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவான கட்டுரைகள் வெளியிட்டு, மக்களிடம் சுதந்திர வேட்கையைப் பரப்பியதில் ஆனந்த விகடனுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரிட்டிஷாரை எதிர்த்துக் கார்ட்டூன்களும் தலையங்கங்களும் துணிந்து வெளியிட்டு, அவர்களின் ஒடுக்குதல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடிய சந்தர்ப்பங்களும் மறக்க இயலாதவை. கசந்து வடியும் பல உண்மைகளைக்கூட நகைச்சுவைத் தேன் தடவிக் கொடுப்பதன் மூலம்... சிரித்துக்கொண்டே ஜனங்களைச் சிந்திக்கச் செய்வது விகடனுக்கே உரிய பாணி! 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்ற தனது கொள்கையிலிருந்து இம்மியும் வழுவாமல்... அரசாங்கம், அதிகார அமைப்புகள், ஆன்மிகம், இலக்கியம், ஓவியம், இசை, நடனம், திரைப்படம் என சமுதாயத்தின் அத்தனை அம்சங்களிலும்... அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுவாரஸ்யமான செய்தி விருந்து அளித்து வந்திருக்கிறான் விகடன். ஆனந்த விகடன் பிறந்த 1926-ம் ஆண்டு தொடங்கி, 2000-ம் ஆண்டு வரையிலான 75 ஆண்டு கால விகடனின் விறுவிறுப்பான பதிவுகள்தான் 'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்’ என்கிற நூலாக உங்கள் கையில் கம்பீரமாக மின்னிக்கொண்டு இருக்கிறது. ஆழ்கடலில் முத்தாக அனைத்துத் தகவல்களையும் தேர்ந்தெடுத்து, அழகாகத் தொகுத்திருப்பவர்கள் ரவிபிரகாஷ், ராஜா. பக்கங்கள் புரளப் புரள... நம் தேசத்தின் கடந்த கால சரித்திரத்தை, நிகழ்காலத்தில் நின்றபடியே அணுஅணுவாகச் சுவைக்கப் போகிறீர்கள். அந்த வகையில், இந்தக் காலப் பெட்டகம் என்னும் பொக்கிஷத்துக்கு உங்கள் வீட்டு நூலகத்தில் நிரந்தரமான ஓர் இடம் நிச்சயம் உண்டு!