Cart is Empty
by மருத்துவர் கு.சிவராமன்
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவிப்பது; மற்றொன்று உடலை நோயிலிருந்து காப்பது. மருத்துவரிடம் செல்லாமல் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு நம்முடைய நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நாமும் மருத்துவர்தானே! பாட்டிகளின் கை வைத்தியத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளில் ஒரு மருத்துவ ஆய்வுக்கூடமே அன்று இருந்தது. எந்தவித பின்விளைவுகளும் இல்லாத அத்தகைய சித்த மருத்துவத்தை மக்கள் இன்று அதிக அளவில் நாடத் தொடங்கியுள்ளனர். இதில் ஆனந்த விகடனின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆறாம் திணைதான் அதற்கான வாசல். ஆறாம் திணை தந்த மருத்துவர் கு.சிவராமனின் மற்றுமொரு படைப்புதான் இந்த நூல். பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல் வடிவில் அனைத்து விஷயங்களையும் தந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. மூட்டுவலிக்கு முடக்கத்தான், ஆழ்ந்த தூக்கத்துக்கு அமுக்கராங் கிழங்கு, பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம், எலும்புக்குக் கேழ்வரகு, கண்ணுக்குத் தினை, அரிப்பைப் போக்க அருகம்புல் சாறு என்று நோயைப் போக்குவதற்கு மட்டும் அல்லாது தோல் சுருக்கம் மறைய தோசை மாவு, மீசையை மழிக்க மூலிகை திரெடிங் என்று அழகுக் குறிப்புகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. டாக்டர் விகடனில் வெளிவந்தபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உங்கள் பாட்டி விட்டுச்சென்ற வைத்திய முறைகளை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை!
RS. 60 More...by ச.சிவ.வல்லாளன்
நமது மரபணுக்கள் நம் ஆதாரம். நமது உடல்-மனம்-அறிவுத்திறன் என்று நம்மிடம் எத்தனை உண்டோ அத்தனைக்கும் பொறுப்பு, உடல் செல்களில் பொதிந்துள்ள மரபணுக்கள் (GENES)தான். தலைமுறை தலைமுறையாக தாய்-தந்தை இருவரின் அடிப்படைப் பண்புகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துப் பாதுகாப்பவை, மரபணுக்களே. மரபணுக்கள் சீராகச் செயல்படுவதற்கு அவைகளுக்கும் ஊட்டச்சத்துகள் இன்றியமையாதது. ஊட்டச்சத்து பற்றாக் குறையால் மரபணுக்களின் செயல்பாடுகளில் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். மரபணுக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயல்படுகின்றன ஆன்டிஆக்ஸிடன்ட்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்றால் என்ன? ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் இருந்து பெறும் ஊட்டச்சத்துக்களாகவோ அல்லது உயிர்ச் சத்துக்களாகவோ இருக்கலாம். உடலில் உருவாகும் என்சைம்களாகவும் இருக்ககலாம். ஆனால், எல்லாவகை ஊட்டச்சத்துகளும் உயிர்ச் சத்துகளும் என்சைம்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக இருக்க முடியாது. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பயன் என்ன? நமது உடலின் இயற்கையான மூப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தி இளமையில் முதுமைப் பருவத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல்மிக்கவை ஃபிரிரேடிகல்கள். முதுமை தோற்றத்தைக் கொடுப்பதோடு நின்று விடாமல், முதுமை பருவத்துக்கு உரிய நோய்களையும் உருவாக்கிவிடும். OPC ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃபிரிரேடிகல்களை அழிக்கின்றன. அதனால் உடல் முதுமை வளர்ச்சி வேகம் குறைகிறது. இளமையில் முதுமைத் தோற்றம் தடுக்கப்படுகிறது. இத்தகைய ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அற்புதத்தன்மை குறித்து இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்தால் நம்மை நாம் உணரலாம். நம் உடம்புக்கு எது தேவை என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. நம்மை நாம் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 74 More...by டாக்டர் கு. கணேசன்
குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய கலை. குழந்தை பிறந்து, பள்ளி செல்லும் வரையிலான காலக்கட்டம் மிகவும் சிக்கலானது. திடீர் திடீரென்று குழந்தைக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான் காரணம். குழந்தை பிறந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேம்படும். இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்கத்தான் குழந்தைகளுக்குத் தடுப்பூசி அல்லது தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. தடுப்பூசியானது குழந்தைக்கு, குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செயல்படும் ஆற்றலைத் தருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் ஏராளமான குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டனர். இந்திய அரசு எடுத்த தொடர் முயற்சி காரணமாக தற்போது, போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டது. இதுபோன்று ஏராளமான தொற்று நோய்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தடுப்பூசி ஏன் போடப்படுகிறது? எப்போது போடவேண்டும்? குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போடவில்லை என்றால், மீண்டும் எப்போது போடுவது? காய்ச்சல், சளி இருந்தால் தடுப்பூசி போடலாமா? போன்ற ஏராளமான சந்தேகங்கள் தாய்மார்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் தீர்வு அளிக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்று, தற்போது நூலாக வெளிவந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைத்த அனைத்து தடுப்பூசிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும்... நோயில்லா, ஆற்றல்மிக்க குழந்தைகளை வளர்த்தெடுக்க சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் திகழும்.
RS. 81 More...by நெய்வேலி பாரதிக்குமார்
இயற்கை அளித்த வரங்கள் அனைத்துமே மனித குல நன்மைக்குத்தான். அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த கொடை கனி வகைகள். மரங்கள், பூக்கள், பழங்கள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா? இவை இல்லாவிட்டால் உயிரினங்கள் இல்லை. ஆம்! மரம் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்காக ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதகுல ஆரோக்கியத்திற்காக கனிகளை நமக்குத் தருகிறது. இயற்கை தந்த கனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மை. ஒவ்வொன்றிலும் அற்புத சக்தி ஒளிந்துள்ளது. சிறிய கனியான நெல்லிக்கனி நமக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. அற்புத ஆப்பிள் வைட்டமின்களை அள்ளித் தருகிறது. தித்திக்கும் அத்திப்பழம், ரத்தத்தை சுத்திகரித்து பெரிய நோய்களைப் போக்குகிறது. கனிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் - புதையல்கள் போன்றவை. எத்தகைய சித்திகளையும் அள்ளித்தரும் சக்தி கனிகளுக்கு உண்டு. இதனைப் ‘பழம் பெருமை பேசுவோம்’ என்ற தலைப்பில் நூலாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர். கரியமேனி கொண்ட சிறிய நாவல் பழம்தான், சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவல்லது. கந்தக பூமியில் விளையும் முந்திரிப்பழம் நீரிழிவு நோயைப் போக்கும். இதுபோன்ற எத்தனையோ பழங்களின் வரலாற்றையும், அவை உண்பதால் குணமாகும் நோய்களையும், பழங்கள் நமக்குத் தரும் சத்துக்களையும், இலக்கியங்களில் பழங்களின் தொன்மையையும், பழங்களை வைத்து சத்துள்ள உணவு வகைகளை சமைப்பது குறித்தும், பழங்கள் குறித்த பழமொழிகளையும் அடுக்கியுள்ளார் நூலாசிரியர். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. ஆனால், ‘பழங்கள் இல்லாத வீடு பாழடைந்த வீடு’ என்பது பழங்களைப் பற்றிய புதுமொழி. பழங்களைப் பற்றி தெரிந்து, நம்மை காத்துக்கொள்ள வாருங்கள்... ‘பழம்’ பெருமை பேசுவோம்.
RS. 102 More...by மருத்துவர் கு.சிவராமன்
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் வாழ்வோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது இன்னும் கானல் நீராகவே உள்ளது. மனித இனத்தை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தாலும், நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் அவற்றை எதிர்கொண்டு வருகிறது மனித சமூகம். ஆனால் சில நோய்களை வராமல் தடுக்க முடியவில்லை. அவற்றில் புற்றுநோய் மனிதனை விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இன்று ஒருவருக்கு புற்று நோய் வருவதற்கு கணக்கில்லா காரணங்கள் இருக்கின்றன. காரணம் நம் வாழ்க்கைச் சூழலும் புறச்சூழலும் எல்லாமே வேகமாகிவிட்டன. இதனால் வருமுன் காத்தல் என்பதை மறந்து, புற்று நோய் வந்த பின்னர் புலம்புகிறோம். புற்று நோய் தாக்குதலில் இருந்து, நம் வாழ்க்கை முறையால் நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை பல தளங்களிலும் ஆராய்ந்து கூறுகிறார் மருத்துவர் கு.சிவராமன். ‘உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மூச்சிலும் புற்றுக்காரணி புறப்பட்டிருப்பதை அறிவோம்.‘ என்று எச்சரிக்கும் மருத்துவர் சிவராமன், புற்று நோய் வராமல் தடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்த நூலில் விளக்கியுள்ளார். ஆனந்த விகடனில் தொடராக வந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற உயிர் பிழை, இப்போது நூலாகியிருக்கிறது. நேற்று சிலருக்கு வந்த புற்று நோய் இன்று பலருக்கும் வருகிறது, நாளை யாருக்கும் வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்கிறது இந்த நூல்.
RS. 116 More...by மருத்துவர் கு.சிவராமன்
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக்குப் பயனளிக்கிறது. மிளகு, வெந்தயம், பெருங்காயம் இவற்றைத் தொடர்ந்து அதிகம் உபயோகப்படுத்தாத அதிமதுரம், திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு போன்ற மருத்துவ காய்களில் நலம் தரும் நற்குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவ்வரிசையில் பூக்கள், எண்ணெய் வகைகள்கூட விட்டு வைக்கப்படவில்லை. அதைக் குழந்தை மற்றும் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் முறைகளை அழகாய் சொல்லிக்கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். அயல்நாட்டவர் இவ்வகை அரிய அற்புத மூலிகைகளைக் கண்டறிந்து தங்களுக்கென உரிமை கொண்டாடினாலும் இவற்றின் பிறப்பிடம் நம் இடமாகவும் நம் முன்னோர்கள் கையாண்ட பாரம்பர்ய சித்த மருத்துவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அழியாமல் காத்திட முன் வருவோம் நம் பாட்டன் சொத்தான பாரம்பர்யத்தை. கோடைகாலத்தில் வரும் பிரச்னையை ஒரு முள்கூட குணப்படுத்த முடியும் என்கிற அரிய வழிமுறைகள் அடங்கிய சித்த மருத்துவம் இருக்க, காலப்போக்கில் நவீனமயமாக்கல் எனத் தொடங்கிய சமூக பொருளாதார வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் மேலோங்கி கோலோச்சியபோது, துரித உணவுகளால் மனிதன் ஆரோக்கிய உணவை இழந்து, இறுதியில் கொசுறாக எழுதப்படும் மாத்திரையை கூடுதல் விலைகொடுத்து வாங்கி, உடலுக்குக் கேடு விளைவித்து உயிரிழந்ததே மிச்சம். இன்றோ தாம் உண்ணவேண்டிய உணவு எது? உடல் நலம் பேண, ஆயுள் காக்க மனிதன் மீண்டும் மறந்த மறைந்த முன்னோர்களின் மருத்துவத்தை வழக்கத்துக்குக் கொண்டுவரும் கட்டாயத்தில் இருக்கிறான். நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளால் கண்களைப் பாதுகாக்கும் சக்தி கறிவேப்பிலைக்கும் உண்டு என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் தந்திருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். டாக்டர் விகடனில் தொடராக வந்த ‘நாட்டு மருந்துக்கடை’க்கு வாருங்கள்; நோயில்லா வாழ்வை வாழ, அறிவோம் அற்புதங்கள் செய்யும் பாரம்பர்ய மருத்துவத்தை!
RS. 81 More...by ரா.ராஜமுருகன்
உடல் என்பது ஓர் உயிர் இயந்திரம். அந்த இயந்திரத்தை இயக்குவது உணவாகும். முன்னுரிமை தருவது உயிருக்காகத் தான் என்பதை உணர்ந்தாலே, உடல் அதன் இஷ்டத்துக்கு உண்ணுவதைத் தவிர்த்து உயிரைக் காக்கும். நல்ல உணவு ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல... ஆயுளையும் தீர்மானிக்கிறது. ஆகவே உண்ணும் உணவை நாம் தேர்ந்தெடுக்கும்போதே ஆயுளையும் சேர்த்து தீர்மானிக்கிறோம். உடலுக்கு முக்கியம் உணவும் உழைப்பும். இரண்டில் எது சிதைந்தாலும் ஆபத்துதான். ஆனால் இன்றைய நிலை என்ன? துரித உணவும் அதன் சாரமும் மனிதனை உழைக்க முடியாத அளவுக்கு ஒரே இடத்தில் பிடித்துவைத்திருக்கிறது. விளைவு: நோய்... மருந்து... உயிரிழப்பு. பெரியவர், இளைஞர், சிறு குழந்தைகளுக்கென நல்ல உணவு முறையையும் உடல் உழைப்பையும் அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்த நூல் உணர்த்தி உள்ளது. பாரம்பர்யமாக சிறு தானியங்களில் செய்துவந்த பனியாரம், புட்டு, தோசை, கொழுக்கட்டை, அதிரசம், போன்ற விதவித ஸ்நாக்ஸை அனைத்து வயதினருக்கும் ஏற்ற விதத்தில் மீண்டும் வழக்கத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் செய்முறையோடு விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும். மென்மையான சப்பாத்திக்காக அதிக அளவு குளுட்டனைச் சேர்க்கிறார்கள்; இது இரைப்பை புற்றுநோயை வரவைக்கிறது. கீரையை, மஞ்சளும் உப்பும் கலந்த நீரில் கழுவிய பிறகு சமைப்பது நல்லது; கீரையுடன் சமையல் சோடா பயன்படுத்தக்கூடாது போன்ற டிப்ஸுகளுடன் நஞ்சு இல்லா உணவு எது..? அதை சுத்தமாக சுவையாக எப்படி சமைப்பது..? எந்த வகை பாத்திரத்தை உபயோகிப்பது, சேகரிப்பது? போன்ற ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நலன்தரும் தகவல்களை நூல் ஆசிரியர் ராஜமுருகன் விளக்கியுள்ளார். ஆனந்தவிகடனில் தொடராக வந்த நல்ல சோறு, நூலாக்க வடிவில் சத்தான, சுவையான, சுத்தமான உணவை தர காத்திருக்கிறது; உயிர் காக்கும் உணவுக்கு உள்ளே வாங்க...
RS. 84 More...by யசோதரை கருணாகரன்
இதயம் - மனித உடலின் உயிர்நாடி. இதன் துடிதுடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம். இதயம் ஒருவருக்கு சீராக இயங்குகிறதென்றால் அவரது ஆயுள் நீடிக்கும். இதயம் மற்றும் மற்ற உடற்பாகங்களின் இயக்கம் சீராகவோ அல்லது நோயுடனோ இயங்க முக்கியக் காரணம் உணவுதான். உடலின், சமமான ஒழுங்கான இயக்கத்துக்கு உணவு முறை அவசியம். நாவின் ருசிக்கு அடிமையாகாத எவரும் பூரண ஆயுளோடு வாழமுடியும். பரபரப்பான இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில் சமைப்பதில் கிடைத்த உணவா... ஏற்ற உணவா... என்கிற போட்டியே நடைபெறுகிறது. இதில் ஜெயிப்பது கிடைத்த உணவே. இன்றைய மக்களில் பலர் பாரம்பர்ய உணவு குறித்த அவசியத்தில் விழிப்பு உணர்வு பெற்றிருக்கின்றனர். இருப்பினும் மேலைநாட்டு உணவு மீது உள்ள மோகத்தைக் குறைத்து, நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த பாரம்பர்ய உணவுமுறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம். உடல் காக்கும் உயிர் காக்கும் பாரம்பர்ய உணவுகளை தேர்ந் தெடுத்து உண்ணுவது உடலையும் உடலை இயங்க வைக்கும் இதயத்தையும் நோய் அணுகாமல், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். அஞ்சறைப் பெட்டியின் பொருட்கள் முதல் கீரை, சிறுதானியங்கள், பயறு வகைகள், பாரம்பர்ய அரிசி, ரசாயனம் இல்லாத பழம் மற்றும் காய் வகைககளைக் கொண்டு சமைக்கும் முறையையும், காலை முதல் இரவு வரை எந்தெந்தநேரத்தில் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்கிற முறைகளையும் இந்த நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. உணவே மருந்தாகி உடல் நோயை போக்கிவிடும்... தேவையற்ற உணவால் தேங்கும் கழிவுகளை உணவாலேயே அகற்ற முடியும் என்கிற பல ஆச்சரியமான தகவல்களை அள்ளிக் கொடுப்பதோடு, நோயில்லா வாழ்வுடன், பூரண ஆயுளும் சேர்ந்து, பல்லாண்டு காலம் வாழ இந்த நூல் வாழ்த்துகிறது.
RS. 120 More...by டாக்டர் சவுண்டப்பன்
அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே அதன் ரகசியம் என்ன? இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம். இப்படிப்பட்ட மூளைக்கே ஓர் மூளை உண்டு. அதுதான் மெடுல்லா. இது இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்குச் செல்லாது. ‘டெம்போரல் லோப்’ பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, ஒரு பொருளை அடையாளம் காண்பது... பொருட்களை வகைப்படுத்தும் திறன் இழப்பு; குறிப்பாக, இடதுபக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் மொழித் திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் மற்றும் வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறியும் திறனும் செயலிழந்துவிடும்... இதுபோன்ற மூளை நிகழ்த்தும் அதீத பணியையும் அதன் செயல்திறனையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்த நூல். மூளை தொடர்பான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு எப்போதும் கோபமாக இருந்த பெண்மணி சாதுவானது, பீனியஸ் கேஜ் என்பவருக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனது, மூளை பாதிப்பால், நிறம், வடிவம் அறியும் திறனை இழக்கும்போது பிளாக் அண்டு ஒயிட் காலத்துக்கே ஒரு மனிதனை அழைத்துச் சென்றுவிடும்... என மூளையால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது நூல். டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது. ஆச்சரியமான தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.
RS. 81 More...by வெ.தமிழழகன்
தூய்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது பால். தாய்ப்பாலைப் போன்று தூய்மையானது என்று பாலின் மகத்துவத்தை அறிந்திருக்கிறோம். உடல் வளர்ச்சிக்கும், உள்ளத்து எழுச்சிக்கும் பால் வகைகள் உதவிபுரிகின்றன. பால் என்றால் தாய்ப்பால், மாட்டுப்பால், ஆட்டுப்பால் மட்டுமா? கோதுமைப்பால், நிலக்கடலைப்பால், சூரியகாந்திப்பால், அபிஷேகப்பால், தேங்காய் பால், நவதானியப்பால்... என வகை வகையான பால் வகைகள் நமக்கு நன்மைபுரிகின்றன. மரங்களில் இருந்து வடியும் பால் வகைகளும் மனிதருக்கு நன்மை பயக்கின்றன. பால் தரும் மரங்களில் இருவகை உண்டு. பருகத்தக்க பால் தரும் மரம். பருகத் தகாத பால் தரும் மரம். தென் அமெரிக்காவில் ஒரு குன்றின் பாகத்தில் பால் மரம் என்ற பெயர்கொண்ட மரம் ஒன்று உள்ளதாம். இம்மரம் வளரும் இடத்தில் மழை வராது என்பர். வேர்கள் தடித்துப் பாறைகள் நடுவே நுழைந்திருக்கும். வானுயர ஓங்கி வளரும். இலைகள் வாடி வதங்கியே தோன்றும், இம்மரத்தின் அடிப்பாகத்தைக் கீறினால் நாவிற்கினிய பால் வடியும். சூரியோதயத்தில் அதிகமாகப் பால் கிடைக்கும். இதுபோன்ற பால் வகைகளின் பயன்கள் என்ன? எந்தப் பால் எந்த நோயைத் தீர்க்கும் என்பன போன்ற எண்ணற்ற தகவல்களை நூலாசிரியர் நமக்குத் தருகிறார். சுவைக்கு எடுத்துக்காட்டாகவும், சுறுசுறுப்புக்கு அடையாளமாகவும் திகழும் தேன் என்னும் அமுதத்தின் அற்புதங்களையும் இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். நூற்றுக்கணக்கான தேன் வகைகளையும், அவற்றைப் பயன்படுத்தும் விதத்தினையும், பயன்களையும் நமக்குத் தருகிறது இந்த நூல். ‘பால்வகை மருத்துவமும், தேன் வகை மகத்துவமும்’ என்ற இந்த நூல் உங்கள் கையில் இப்போது தவழ்கிறது. இனி நீங்கள் மருத்துவர் வீட்டுக்கதவைத் தட்டத் தேவையில்லை என்பதை உணரப்போகிறீர்கள்... பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 84 More...