Cart is Empty
by விகடன் பிரசுரம்
நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் முடிவுப் பகுதியை சுவாரஸ்யமாக எழுதும் போட்டியை அறிவித்து, சாமான்ய வாசகர்களுக்குள் மறைந்துகிடக்கும் எழுத்தாற்றலைத் தூண்டிவிட்டுள்ளது விகடன். திருக்குறள் கதைகள், பொன்மொழிக் கதைகள், நவரசக் கதைகள், தூண்டில் கதைகள், புதிய ஆத்திசூடிக் கதைகள், மகாகவி பாரதியின் வரிகளைக் கருப்பொருளாக வைத்து பாரதி கதைகள் எனப் பலவிதமான தலைப்புகளில், பல்வேறு சுவைகளில் சிறுகதைகளை வெளியிட்டு, வாசகர்களிடம் சிறுகதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நாளில், பக்க எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு கதைக்கான சன்மானத்தைத் தீர்மானிப்பதே வழக்கம். இதை மாற்றி, கதையின் தரத்தை அளவுகோலாக வைத்து சன்மானம் அளிக்கும் முறையை விகடனில் கொண்டுவந்தார் அதிபர் எஸ்.எஸ்.வாசன். கூடவே, சிறுகதை உலகுக்கு ஒரு புரட்சித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். பரிசீலனைக்கு வரும் சிறுகதைகளில் பிரசுரத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட கதைகளிலிருந்து மிகச்சிறந்த கதையை ‘முத்திரைக் கதை’ என்னும் அறிமுகத்தோடு, அதிக சன்மானம் அளித்து, ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளியிட்டார். இப்படித் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, 300 சிறுகதைகளுக்கும் மேல் ‘முத்திரைக் கதை’களாக வெளியாகின. சிறுகதை மன்னன் என்று போற்றப்பட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் பல இப்படி ‘முத்திரைக் கதை’கள் என்று மகுடம் சூட்டப்பட்டு, விகடனில் வெளியாகி, எழுத்துலகில் ஒரு புகழ் வெளிச்சத்தை அவர் மீது பாய்ச்சியதை சிறுகதை ஆர்வலர்கள் நன்கறிவார்கள். அப்படி அந்நாளில் ஆனந்த விகடனில் ‘முத்திரைக் கதை’ என்னும் சிறப்பு முத்திரையோடு வெளியாகி, வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளிலிருந்து 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு தொகுப்பாக வழங்குகிறது விகடன் பிரசுரம். முத்து, பவழம், வைரம் எனப் பலவிதமான விலையுயர்ந்த பொருள்களையும் கற்களையும் கொண்டு தொடுக்கப்பட்ட அபூர்வமான நவரத்தின மாலையைப் போன்றது இந்தப் புத்தகம் என்பதை, இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையைப் படிக்கும்போதும் உங்களால் உணர முடியும். நல்ல படைப்புகள் எங்கிருந்தாலும் நாடிச் சென்று படித்து இன்புறும் வாசகர்கள் அத்தனை பேரும் இந்த அரிய தொகுப்பையும் போற்றிக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
RS. 199 More...by விகடன் பிரசுரம்
ஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவங்களாக, பாசாங்கு பாசத்தோடே வாழ்வது, விரிசல் விழுந்த கண்ணாடிப் பாதையில் பயணிக்கும் வாழ்க்கையாகவே அமைந்துவிடும். ஆண்-பெண் சிக்கல்கள், மூன்றாம் பாலினம் அடையும் தொந்தரவுகள், குழந்தைப் பருவ சிநேகிதம், பாலியல் குமுறல்கள் என இந்த நூலில் பதிவாகியிருப்பவை, வாசகர்களின் மனதில் அழியாத தாக்கம் தந்து ஆண்பாலும் பெண்பாலும் அன்பால் கடந்து வெற்றி வாழ்க்கையின் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்பது உறுதி. ஆண் பெண் உறவு குறித்து பிரபலங்கள், திரைத்துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களின் கருத்துகளையும், கவிதைகளையும் ஆங்காங்கே தந்திருப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது. போலியான அறிவுஜீவித்தனம் இல்லாத, பட்டறிவு, அனுபவ ஞானமிக்க, வெள்ளந்தித்தனமும், எளிமையான நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பும் உள்ள, கொஞ்சம் அறவுணர்வும் கொண்ட, என்னைப் புரிந்துகொண்ட என் வாழ்வின் துணையாக வருகிற இணை, ஒருபோதும் ஒத்த ரசனை, தேர்ந்த ஒற்றுமையான விருப்பங்கள் பாசாங்கு அற்றவனாக, பொய்யற்ற யதார்த்தமான அன்பைப் பகிர்பவனாக, பரஸ்பர நம்பிக்கையும் மதிப்பும் தன்மேல் கொண்டவனாக, தன் சுயத்தை இழக்காதவனாக... இப்படியான எதிர்பார்ப்புகளை இருவருமே புரிந்து கடைப்பிடித்து வாழ்தல், காத்திருக்கும் இனிப்பான வாழ்வை நோக்கி கைகோத்து பயணிக்கலாம் என்கிறது இந்த நூல்.
RS. 269 More...by விகடன் பிரசுரம்
வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ!’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்
RS. 50 More...by செ.கார்த்திகேயன்
இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும். இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.
RS. 105 More...by ப.திருமாவேலன்
அரசியல், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நிகழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்குப் பணி செய்ய உருவாக்கப்பட்ட அரசியலை, சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாப நிலைதான் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் சுயமரியாதையோடு இருக்கவேண்டும் என மூச்சு பிரியும் வரை தொண்டாற்றிய பெரியார் நினைத்திருந்தால் அரசியல்வாதியாகி லாபம் அடைந்திருக்கலாம். ஆனால், அவர் இயக்கவாதியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டினார். பெரியாரையும் ‘திராவிட’ என்ற அடையாளத்தையும் வைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் இருக்கின்றன, தோன்றுகின்றன. ஆனால், அந்தக் கட்சியினர் பெரியார் பெயரையும் அவர் படத்தையும் பயன்படுத்துவதோடு மட்டும் நிறுத்திவிடுகிறார்கள். பொது வாழ்வில் பெரியாரைப் போல தூய்மைத் தொண்டாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அரசியல் லாபத்துக்காக தடம்மாறும் அரசியல்வாதிகள், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுபவர்கள்... என அனைத்து அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளை விமர்சித்து ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் நூலாசிரியர் ப.திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சோனியா காந்தி, மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியக் கட்சிகளின் தலைவர்கள்; கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ்... என மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவரும் தப்பவில்லை - இவரின் விமர்சனக் கணைகளுக்கு! ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சுட்டுவதைப்போல, அறம் தவறி அரசியல் செய்பவர்களின் மனச்சாட்சியை உலுக்கி கேள்வி எழுப்பும் கட்டுரைகள் இவை. ‘போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’ - கவியரசு கண்ணதாசனின் இந்தக் கருத்துவழி நின்று, அரசியல் போர்வையில் அடாத செயல்புரிபவர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களின் சுயநல சந்தர்ப்பவாதங்களை உலகுக்கு உணர்த்தும் அரசியல் ஆவணமாகத் திகழ்கிறது இந்த நூல்!
RS. 229 More...by மருத்துவர் கல்பனாதேவி
மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்!
RS. 140 More...by விகடன் பிரசுரம்
பல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது. மனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. மன இறுக்கமே பல்வேறு நோய்களுக்கும் காரணியாகிறது என்பார்கள். அதற்கு ஓர் உன்னத மருந்தாகத் திகழ்வது நகைச்சுவை! எல்லாவற்றையும் எல்லோரிடமும் நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது; நகைச்சுவையைத் தவிர! அறிவார்ந்த விஷயங்களைக்கூட அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வதில் நிறையப் பேர் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், நகைச்சுவை அப்படிப் பட்டதல்ல. அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, நட்பை வளர்த்துக் கொள்வார்கள் பலர். 2008 விகடன் இதழ்களில் வெளியான ஜோக்குகளில் 200 ஜோக்குகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ரசித்துப் படித்து, அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, உங்கள் சூழலை இனிமையாக்க, இந்த நூல் உங்களுக்கு உதவும்.
RS. 50 More...by விகடன் பிரசுரம்
கோடையில் குளிர்ந்த நீரோடையையும், மழை வருமுன் வீசும் குளிர்ந்த காற்றையும் உணரும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நம்மில் ஊடுருவி இருப்பது நகைச்சுவை உணர்வு. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சோர்வையும் நீக்கி நம் மனதைச் சமப்படுத்துவதில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செயலையும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் செய்யும்போது அதன் வலி தெரியாமல் புத்துணர்வை அளிக்கும். இப்படி, சீரியஸான கருத்தையும் சின்ன ஜோக்குகளாக எழுதி அனைவரின் மனதிலும் எளிதில் பதிய வைத்திருக்கிறார்கள் விகடனின் ஜோக் எழுத்தாளர்கள். 2007_ம் வருடம், ஆனந்த விகடனில் வெளிவந்த ஜோக்குகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கையடக்க நூலாக வெளியிட்டிருக்கிறோம். சுவைத்து, சிரித்து மகிழுங்கள்!
RS. 50 More...by விகடன் பிரசுரம்
எப்போதுமே ஜோக் புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியும். புன்னகைத்துக் கொண்டே ஜாலியாக பக்கங்களைப் புரட்ட முடியும். அதுமட்டுமல்ல, மன அழுத்தம் ஏற்பட்டு சோர்ந்து உட்கார்ந்திருக்கும் வேளையில் ஜோக் புக் ஆறுதலான ஒரு மருந்து. ஆரம்பகாலம் முதல் ஆனந்த விகடனில் வெளியாகிவரும் ஜோக்குகளை விரும்பிப் படிக்கும் வாசகர் வட்டம் மிகப் பெரியது. இன்று வரையில் அது தொடர்ந்து வருகிறது. விகடனில் வெளியான ஜோக்குகளைத் தொகுத்து அவ்வப்போது கையடக்க நூல்களாக வெளியிட்டு வருகிறது விகடன் பிரசுரம். அந்த வகையில், 2009_ம் ஆண்டில் விகடனில் வெளியான ஜோக்குகளில் 300_ஐ இந்த நூலில் தொகுத்திருக்கிறோம். இதில் உள்ள ஜோக்குகளை படிப்பதோடு உங்கள் சுற்றத்தாரிடமும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவும், பரிசு அளித்து மகிழவும் இந்த நூல் உங்களுக்கு உதவும்!
RS. 60 More...by ஜல்லிப்பட்டி பழனிச்சாமி
இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுதல் தொடங்கி விமானத்தில் பணிபுரிவது வரை பல்வேறு பணிகளில் பெண்கள் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டு, வெற்றிபெற்ற பெண்களின் அனுபவங்களை அழகாகச் சொல்கிறது இந்த நூல். மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து, தேசிய அளவில் சிறந்த பெண்மணிக்கான பட்டத்தைப் பெற்றுள்ள, முதுகலைஜீ பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வி, பளபளக்கும் பட்டுக்கூடு வளர்ப்பில் விருதுபெற்ற பாப்பாத்தி, மார்கழி மற்றும் தையில் பெய்யும் பனியின் ஈரத்தைக்கொண்டே பனிக்கடலை பயிர் செய்யும் சாரதாமணி, பட்டை அவரையில் எட்டு டன் எடுக்கும் கவிதா, குறும்புடலையில் கொடிகட்டிப் பறக்கும் கௌசல்யா, கோழிக் கொண்டை பூ பூரிப்பில் தமிழரசி, எலுமிச்சையில் வெற்றிக்கனி பறிக்கும் ஜெயபாரதி, சின்ன வெங்காயம் சாகுபடியில் வஞ்சிக் கொடி, கனகாம்பரம் பூ விற்பனையில் பூங்கோதை என்று விவசாயத்தில் வெற்றிக்கொடி கட்டிய பெண்களின் பட்டியல் நீள்கிறது. மேலும், விவசாயம் சார்ந்த பண்ணைக் கோழி வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு பற்றியும் இங்கே சொல்லப்பட்டு இருக்கிறது. விவசாயத்தில் முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில், அத்தனை பேரின் விளைச்சல் நிலங்களுக்கே சென்று, அவர்களின் அனுபவங்களை ஆதாரங் களோடு தகவல்களைத் திரட்டி இந்த நூலில் கொடுத்துள்ளார் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி. இந்தக் கட்டுரைகள் பசுமை விகடனில் வெளி வந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உழைப்பால் உயர்வு பெற விரும்புபவர்களுக்கும், சாதிக்க நினைக்கும் விவசாயப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்தரும், இந்தப் புத்தகம்!
RS. 63 More...